புதன், 10 ஆகஸ்ட், 2011

ரமளான் தரும் படிப்பினை


ரமளான் தரும் படிப்பினை
இஸ்லாமியக் கடமைகளில் மூன்றாவது கடமையாகிய நோன்பு ஹிஜ்ரி 2-வது ஆண்டு விதியாக்கப்பட்டது. இந்த நோன்பை முஸ்லிம்கள் 1428 ஆண்டுகளாக சிறுவர் முதல் முதியோர் வரை பகலெல்லாம் உண்ணாது பருகாது தவறாது நோன்பு நோற்று வருவதைக்கண்டு உலகே அதிசயித்து நிற்கிறது. அந்த நோன்பை உறுதியோடு நோற்கும் வாய்ப்பைத் தந்த வல்லான் அல்லாஹ்வுக்கு மக்கள் நன்றி செலுத்திய வண்ணமுள்ளனர்.
இந்த வேளையில் அந்த நல்ல நாட்களை நாம் திரும்பிப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்
வல்ல நாயன் அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்…

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக
உங்களுக்கு முன் சென்றோர் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது
போல் உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது’(அல்குர்ஆன் 2:183)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்….
ரமளான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)நூல்: புகாரீ1899)
இப்போது கண்ணியமிக்க அந்த மாதம் நம்மிடமிருந்து விடை பெற்றுவிட்டது. அருள்பொழியும் புனித மாதம் நம்மைவிட்டும் சென்று விட்டது. மீண்டும் அத்தகைய மகத்தான மாதத்தின் பேறுகளைப் பெறுவோமா என்பது ஐயத்திற்குரியது.
ஆனால், செனறு விட்ட ரமளானில் அளவற்ற அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெறும் பாக்கியத்தைப் பெற்றுக்கொண்டோம். பள்ளிவாசல்கள் இரவும் பகலும் தொழுகையாளர்களால் நிரம்பி வழிந்தன. ஐவேளைத் தொழுகைகளை பேணாதவர்கள் கூட முண்டியடித்துக்கொண்டு நாள்தோறும் பள்ளிவால்களுக்கு வந்து,
வுழமையாக வரும்  தொழுகையாளர்களுக்கு ரமளானில் நெருக்கடியை ஏற்படுத்தி இருந்ததை காண முடிந்தது.
எங்கும் புதுப்புது முகங்கள்! ஆர்வத்தோடு அமல்கள்! அகமும்,புறமும் அமைதியில் திழைத்து நின்ற மனிதர்கள்! எந்நேரமும் பள்ளிகளில் தித்திக்கும் திருமறையை ஓதுபவர்களின் ஓசைகள்!  இடைவிடாத தொடர் சொற்பொழிவுகள்! நன்மைகளை ஒருவருக்கொருவர் செய்யத்தூண்டுதல்! ஏழை எளியவர்களுக்கு அள்ளி வழங்கும் தர்மச் செயல்கள்!
நோன்பு திறப்பதற்கான சிறப்பான ஏற்பாடுகள்! இஸ்லாமிய உலகம் முழுவதும் இஃப்தாருக்காக செய்து வந்த விசேச ஏற்பாடுகள்! வழி நெடுகிலும் உணவுப்பொருட்களை அள்ளி வழங்கிய காட்சிகள்! குறிப்பாக மக்கா, மதினாவில் உலகமெங்கிலுமிருந்து குழுமிய உம்ராப் பயணிகள்! எந்த வருடமுமில்லாத அளவுக்கு 50 இலட்சம் வரை எட்டிய மக்கள் பெருவெள்ளம!
இரவுத் தொழுகைகள்ளால் பள்ளிவாசல்கள் வழிந்த காட்சிகள்! ஸஹர் நேரஏற்பாடுகள! “லைலத்துல் கத்ர்”  இரவைத்தேடி இறுதிப்பத்து நாட்களில் ஏங்கிநின்ற வணக்க வழிபாடுகள்! இதிகாஃப் நிய்யத் வைத்து பள்ளிவாசலே கதியென என வணக்கங்களில் மெய்மறந்தவர்கள்! ஏழைகள் பசி நீங்க ஃபித்ராக்கள்! என்றெல்லாம் அமல்களின் அலங்காரத்தால் அழகிய மாதம் நிறைவு பெற்றுவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
நம்மை விட்டுப் பிரிந்து சென்ற இந்த ரமளானுடைய நோன்பு நம்மீது அல்லாஹ்வின் அச்சத்தை ஏற்படுத்தி வந்தது என்றால் அது மிகையாகாது. அண்ணல் நபி(ஸல்)அவர்களின் உண்மைக் கூற்றுப்படி ரமளான் வந்து விட்டால் ஷைத்தான் நம்மை விட்டு விரண்டோடு கிறான். ஷைத்தானியச்செயல்களும்  நம்மைவிட்டு விடைபெற்றுக் கொள்கின்றன.இதை ஒவ்வொருவரும் உளப்பூர்வமாகவே உணர்ந்து கொள்கிறோம்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்…
ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும். ஆனால் நோன்பத்தவிர! நிச்சயமாக நோன்பு எனக்காக மட்டுமே உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புஹாரி 1904)
ரமளான் அல்லாத காலங்களில் நம்மில் பலர் பல்வேறுவிதமான தீய பழக்கங்களை வழமையாக கொண்டிருந்தாலும் ரமளான் வந்து விட்டால் எல்லா விதமான பாவ காரியங்களையும் மூட்டை கட்டி வைத்து விடுவதையும், தீய காரியங்கள் செய்யும்  சூழ்நிலைகள் இருந்தும் அதைநெருங்காமல் இருப்பதையும் பார்க்கின்றோம்.
எல்லா மக்களுக்கும் எந்நேரமும் அல்லாஹ்வை பற்றிய சிந்தனையே மேலோங்கியிருக்கும். மருந்துக்குக் கூட மாற்று எண்ணங்களையும் பேச்சுக்களையும் காணமுடியவில்லை. ‘இந்தமாதம் கண்ணியமிக்க மாதம் இதில் நான் வைத்திருக்கும் நோன்பு எம்மை படைத்த இரட்ச கனாகிய அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியதாகும். இந்த வணக்கத்தில் சொந்தம் கொண்டாடவேறு எவருக்கும் உரிமையில்லை’ என்ற அசைக்க முடியாத எண்ணம் மக்களிடையே ஆழமாகப்பதிந்திருப் பதை உணர முடிகிறது. அல்ஹம்துலில்லாஹ்!
தர்காக்களைப் பற்றிய பேச்சோ, அவ்லியாக்கள் பற்றிய ஷிர்க்கான-பித்அத்தான ஆராதனைகளோ மக்களிடையே இம்மியளவும் இம்மாதத்தில் எட்டிப் பார்க்கக்கூட முடியவில்லை. மார்க்கம் என்ற பெயரால்  எவரேனும் எதையேனும் கதையளந்தால் மக்கள் அவர்களை ஓரம் கட்டுவதையும் காணமுடிந்தது. குறித்த நேரத்தில் தொழுகைகள் நிறைவேற்றப்பட்டன. இன்னும் சொல்வதென்றால் கடமையான தொழுகை நேரத்திற்கு முன்னரே பள்ளிவாசலுக்கு ஓடி வந்து ஜமாஅத் தொழுகைக்காக காத்திருக்கும் அழகிய பண்பை மக்களிடையே காண முடிந்தது.
அல்லாஹ் தன் திருமறையில்…

فَأَقِيمُواْ الصَّلاَةَ إِنَّ الصَّلاَةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَاباً مَّوْقُوتا

தெழுகையை (உரிய நேரங்களில்) பேணித் தொழுங்கள்! நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது (அல்குர்ஆன் 4:103)
அப்துல்லாஹ் பின் மஸ்வூது(ரலி) அவர்கள் கூறியதாவது.
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட போது,
தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்’
என்று பதில் கூறினார்கள். (நூல்: புஹாரி 524)
தொழுகையை நிறைவேற்றியதும் அல்லாஹ்வின் அருளைத் தேடி விரைந்து செல்லும் கடமையையும் பொறுப்பையும் மக்களிடம் காண முடிகிறது.
அல்லாஹ் தன் திருமறையில்…

فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيراً لَّعَلَّكُمْ تُفْلِحُونَ

தொழுகை முடிந்ததும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்’ (அல்குர்ஆன் 62:10)
தர்மங்கள் இக்லாஸான நிலையில் வழங்கப்பட்டன. அல்லாஹ் வுக்காக தர்மம் செய்யும்போது இந்த ரமளானில் மேலான நன்மைகள் அல்லாஹ்விடம் கிடைக்கும் என்ற வலுவானநம்பிக்கையை மக்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.

الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُم بِاللَّيْلِ وَالنَّهَارِ سِرّاً وَعَلاَنِيَةً فَلَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ

தமது செல்வங்களை இரவிலும், பகலிலும், இரகசிய மாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுவோருக்கு தமது இறைவனிடம் அவர்களுக்கான கூலி உண்டு. அவர்களுக்கு எந்த
அச்சமும் இல்லை. அவர் கள் கவலைப்படவும் மாட்டார்கள்’ (அல்குர்ஆன் 2:274)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்…
பேரீத்தம்  பழத்தின் சிறுதுண்டையேனும் (தர்மம்) செய்து நரகிலிருந்து   (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள் (அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம்(ரலி) நூல்: புஹாரி 1417)
சொல்லுதற்கியலா சூழ்நிலைகளிலும், வெல்லுதற்கியலா வேலை களுக்கு மத்தியிலும் குறித்த நேரத்தில் மார்க்கக் கடமைகளை நினை வோடு நிறைவேற்றும் செயலாற்றலையும் மக்கள் கொண்டிருந்தனர்.

مَا أَصَابَ مِن مُّصِيبَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ وَمَن يُؤْمِن بِاللَّهِ يَهْدِ قَلْبَهُ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ

எவ்விதத்; துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் விருப்பத்தைக் கொண்டே தவிர இல்லை. அல்லாஹ்வை நம்புகின்ற சமுதாயத்திற்கு அவன் வழி காட்டுவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் (அல்குர்ஆன் 64:11)
அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்:-
‘உங்களின் வீட்டு வாசலில் ஆறு ஒன்று (ஓடிக்கொண்டு) இருக்கிறது (என்று வைத்துக் கொள்ளுங்கள்) அதில் ஒருவர்  தினமும் ஐந்து தடவைகள் குளிக்கிறார். அவரது மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் படிந்திருக்குமா எனக் கூறுங்கள்’ என்று தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘அவரது அழுக்குகளில் சிறிதள வேனும்  எஞ்சியிராது’ என நபித் தோழர்கள் கூறினர். இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும்.இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி 528)
திருமறை திருக்குர்ஆனோடு உளப்பூர்வமான தொடர்பை மக்கள் இம்மாதம் முழுவதும் ஏற்படுத்திக்கொண்டிருந்தனர்.அது கூறும் அற்புதமான செய்தியைகளையும் கவனத்தோடு கேட்டு வாழ்வில் கடைபிடிக்கும் ஆர்வத்தையும் உயர்ந்த பாங்கையும் காணமுடிந்தது.
அல்லாஹ் கூறுகிறான்…

شَهْرُ رَمَضَانَ الَّذِيَ أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ

‘இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது.(அது) மனிதர்களுக்கு நேர்வழியைக் காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்’ (அல்குர்ஆன் 2:185)
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறியதாவது:
‘ஜிப்ரீல்(அலை) ரமளானின் ஒவ்வொரு இரவும் ரமளான் முடியும் வரை நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள்.ஜிப்ரீல்(அலை)தம்மைச் சந்திக்கும் போது மழைக்காற்றைவிட அதிகமாக நபி(ஸல்)
அவர்கள் வாரி வழங்குவார்கள்’ (நூல்: புஹாரி 1902)
சிகரெட், பீடி, பான்பராக், சினிமா போன்ற லாகிரி வஸ்துக்களை விட்டுவிட்டு எங்களால் சிறுநேரம்கூட இருக்கமுடியாது என்று சொன்னவர்களெல்லாம் இந்த ரமளானில் அவற்றை விட்டுவிட்டு அல்லாஹ்வுக்காக நோன்பிருந்ததை பார்த்தோம். அல்லாஹ்வுக்காக என்றால் எங்களிடம் ஒட்டி உறவாடிய அத்தனை பலவீனங்களையும், மூட நம்பிக்கைகளையும். மாற்றிக்கொள்வோம் என்று சாட்சி பகரக்கூடியவர்களாய் மக்களில் பலர் இருந்ததைக்கண்டோம்.
அல்லாஹ் தன் திருமறையில்…

وَمَن يُؤْمِن بِاللَّهِ وَيَعْمَلْ صَالِحاً يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَداً ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ

‘அல்லாஹ்வை நம்பி நல்லறம் செய்பவரின் தீமைகளைஅவரை விட்டும் அவன் நீக்குவான். அவரை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில்ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி’ (அல்குர்ஆன் 64:9)
சாதாரண நாட்களில் பஜ்ருக்கு எழுவதே போராட்டமான நிலையில் ரமளானில் ஸஹ்ருக்கே எழுந்து தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு பஜ்ர் தொழுகையை மக்கள் கண்ணியப் படுத்திய விதம் ” “உறக்கம் பெரிதல்ல! உண்மை மார்க்கமே மேலானது”  என்பதை சொல்லாமல் சொல்லியதை பார்த்தோம்.
அல்லாஹ் தன் திருமறையில்…

كَانُوا قَلِيلاً مِّنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ ،  وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ

”இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர். இரவின் கடைசி நேரத்தில் பாவமன்னிப்புத் தேடுவார்கள்’ (அல்குர்ஆன் 51:17,18)
அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்…
”நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள்: நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது’ (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி) நூல்: புஹாரி 1923)
அல்லாஹ் தன் திருமறையில்…

إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ{1} وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ{2} لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ{3} تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ{4} سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ{5}

”மகத்துவமிக்க இரவில் இதை (குர்ஆனை) நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித்தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச்சிறந்தது. வானவர்களும், ரூஹும் (ஜிப்ரீலும்) அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்’ (அல்குர்ஆன் 97:1-5)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
‘யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர் பார்த்தும் நின்று வணங்குகிறாரோ அவர்(அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புஹாரி 2014)
அந்த மன்னிப்பையும் திருப்பொருத்தத்தையும் வேண்டிஅல்லாஹ்வுக்காக லைலத்துல் கத்ரை தேடினோம். அல்லாஹு அக்பர்! ஏகத்துவ தென்றல் எங்கெங்கும் தவழ்ந்தது. ஈமானும் இக்லாஸும் ஒன்று மற்றொன்றைக் கொண்டு ஒளி பெற்றுக் கொண்டன.
அல்லாஹ்வின் நல்லடியார்களே!  இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்? ரமளான் என்ற கண்ணியமிக்க மாதம் இறை நினைவையும் இறையச்சத்தையும் கற்றுத்தரும் பள்ளிக்கூடமாகவும், கற்றதை செயல்படுத்தும் களமாகவும் இருந்தது தான்! மக்கள் எல்லோரையும் ரமளான் தன்பக்கம் இழுத்து அல்லாஹ்வின் மார்க்கம் வலியுறுத்தும் கடமைகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும்? எவ்வாறு செயல் படுத்தினால் இறையச்சமும், இறைப்பொருத்தமும் கிடைக்கும் என்னும் பாடங்களையும், படிப்பினைகளையும கற்றுத்தந்து தான்!
இதன்மூலம் ரமளான் மனித இதயங்களில் மண்டியிருந்த அழுக்குகளையும், ஈமானில் படிந்திருந்த ஒட்டடைகளையும் தூய்மையாக்கி துப்புரவாக்கியுள்ளது. இறையருளால் கிடைத்தி ருக்கும் இந்த அருட்கொடையை இஸ்லாமிய சமுதாயம் ரமளானுக்குப் பிறகு வரும்  காலங்களிலெல்லாம் ‘அல்லாஹ்வுக்காக பாதுகாத்துக் கொள்ளுமா? அல்லது மறந்துவிடுமா?
ரமளானில் ஏற்றப்பட்ட மின் ஆற்றல் (சார்ஜ்) தொடர்ந்து ரீசார்ஜ் செய்யப்படுமா?  ரமளானில் அழுது அழுது அல்லாஹ்வை வேண்டிய பிரார்த்தனைகளும், உறுதிமொழிகளும் நினைவில் நிற்குமா? அசை போட்டுப் பாருங்கள்!
அல்லாஹ் தன் திருமறையில்…

إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيراً وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُم مَّغْفِرَةً وَأَجْراً عَظِيماً

”முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கைகொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும்ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும்,பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும்,பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும்,பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்,நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்,
அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும்,பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்’(அல்குர்ஆன் 33:35)
இதுவரை நாம் குறிப்பிட்டவை யாவும் மகத்தான இரட்சகனாகிய அல்லஹ்வின்அருட்கொடைகளாகும். அதன் ஆதாரங்களைத்தான் அல்குர்ஆனின் வசனங்களாகவும், பெருமானார்(ஸல்) அவர்களின் அமுத மொழிகளாகவும் குறிப்பிட்டு காட்டியுள்ளோம். அவை உயர்வான மறுமை வாழ்க்கைக்கும், அல்லாஹ்வின் திருப் பொருத்தத்திற்கும் உத்தரவாதம்அளிப்பைவைகளாக உள்ளன என்பதை நினைவில் நிறுத்தி இறுதி மூச்சிவரை இன்ஷா அல்லாஹ் நம் முயற்சிகளைத் தொடர்வோமாக! அல்லாஹ் அதற்குத் துணை புரிய வேண்டுவோமாக!
( மேற்குறிப்பிட்ட பத்து வசனங்களையும் ரமளானின் நினைவாக மனனம் செய்து கொள்வோமாக!)
(இது அல்புர்கான் கட்டுரையைத் தழுவியது)

கருத்துகள் இல்லை: