புதன், 10 ஆகஸ்ட், 2011

உண்மையான கரசேவை

லகண்டன்

உண்மையான கரசேவை

அயோத்தி பிரச்னையில் ஒரு வழியாக அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு வந்துவிட்டது. கரசேவகர்களால் உடைக்கப்பட்ட கும்மட்டத்தின் மையப்பகுதி – குழந்தை ராமன் வைக்கப்பட்டிருந்த பகுதி – ஹிந்துக்களுக்கு எனச் சொல்லியிருக்கிறது தீர்ப்பு. நிச்சயமாக மேல் முறையீடு இருக்கும். ஆனால் இந்தத் தீர்ப்பின் முக்கியத்துவம் ஒன்று இருக்கிறது.
டிசம்பர் 6, 1992  என்பது ஏதோ இந்த நாட்டுக்கே இழைக்கப்பட்டுவிட்ட தேசிய அவமானம் என்றும், முஸ்லீம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும் ஒரு பெரிய பிரசாரத்தை இந்த தேசத்தில் அறிவுஜீவிகள் மேற்கொண்டார்கள். ஒவ்வொரு டிசம்பர் ஆறாம் தேதியும் சராசரி ஹிந்து, சராசரி இந்தியன் குற்ற உணர்வும் அச்ச உணர்வும் கொள்ளச் செய்தார்கள். பாபர் மசூதி, பாபர் மசூதி என மீண்டும் மீண்டும் ஏதோ தினசரி தொழுகை நடக்கும் ஒரு மசூதியை ஹிந்து வெறியர்கள் உடைத்தெறிந்துவிட்டது போலக் கூக்குரலிட்டார்கள். இதை நம்பிய முஸ்லீம் சகோதரர்கள் இயல்பாக, பாதுகாப்பற்ற உணர்வில் ஆழ்ந்தார்கள். அன்னிய முதலீட்டில் ஊட்டி வளர்க்கப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு இரையானார்கள். இது ஒரு விஷச்சுழலை உருவாக்கியது.
தொடக்கம் முதல் ஹிந்துத்துவ இயக்கங்கள் மீண்டும் மீண்டும் சொல்லிவந்த ஒரு விஷயம், இது ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே உள்ள மதப்பிரச்னை அல்ல என்பதுதான். ஹிந்துத்துவ இயக்கத் தலைவர்கள் தெளிவாகவே சொன்னார்கள் “ஸ்ரீ ராம ஜென்மபூமியாகப் பல ஆயிரம் ஆண்டுகளாக ஹிந்துக்கள் வழிபடும் இந்த இடத்தை விட்டுக் கொடுங்கள். எங்கள் தலைகளில் செங்கல்கள் சுமந்து இதே சரயு நதிக் கரையில் பிரம்மாண்டமான மசூதியை நாங்கள் கட்டித்தருகிறோம்.”
இஸ்லாமிய சகோதரர்கள் ஏற்றுக்கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் களமிறங்கினார்கள் இடதுசாரி அறிவுஜீவிகள். அது மசூதிதான் என்றார்கள். ஹிந்துக்களின் கோரிக்கைக்கு வரலாற்று ஆதாரம் எதுவுமில்லை என்றார்கள். அதெல்லாம் பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சி என்றார்கள். ஜனவரி  1991 இல் மார்க்ஸிய வரலாற்றறிஞர் ஆர்.எஸ்.ஷர்மாவும் 42 அறிவுஜீவிகளும் ஒரு பொது அறிவிப்பு வெளியிட்டார்கள். “அங்கே கோவில் இருந்ததற்கான சான்றுகளே இல்லை.”
ஹிந்து தரப்பினருக்குப் பொதுவாக நவீனத்துவ பரிபாஷைகள் நிரம்பிய அறிவியக்கத் தந்திரங்களில் பரிச்சயமில்லை. இடதுசாரிகள் அடித்து ஆடினார்கள். ராமர் பிறந்ததே ஆப்கனிஸ்தானில் என்றார்கள். பத்திரிகைகளில் அறிக்கை கொடுத்தார்கள். இரு தரப்பினரிடமும் அரசு ஆதாரங்கள் கேட்டபோது பாபர் மசூதிக் குழுவினருக்கு ஆதரவாக ஆதாரங்களை அளிக்கிறோம்; ஆனால் நாங்கள் பாரபட்சமற்ற அறிவியல் நோக்கு கொண்ட வரலாற்றாசிரியர்களின் தனிக்குழு என அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று கேட்டார்கள். ஏற்கெனவே பாப்ரி ‘மசூதி’ ஆலோசனைக் குழுக்களிலும் இருந்த இந்த பெருமக்களின் கோரிக்கையை அரசு மறுத்துவிட்டது. பேச்சு வார்த்தைகள் நடந்தபோது ஒரு விசித்திரம் நிகழ்ந்தது. ஆதாரமே இல்லை என்று சொன்ன ராமர் கோவிலுக்கு ஆதாரங்கள் அளிக்கப்பட்டபோது அதனைப் படிக்கத் தங்களுக்குக் கால அவகாசம் வேண்டுமென்று கேட்டார்கள் இந்த இடதுசாரிகள்.
அகழ்வாராய்ச்சியாளர் பி.பி.லால், ராம ஜென்ம பூமி – பாப்ரி அமைப்பு பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்தவர். அவர் அங்கே தூண்களின் அடித்தளங்கள் இருப்பதை உறுதி செய்தார். இடதுசாரிகளோ, இல்லவே இல்லை அது பொய். லால் வேண்டுமென்றே இட்டுக்கட்டுகிறார் என்றார்கள். அவரது ஒரிஜினல் அறிக்கையில் அவர் அதைக் கூறவே இல்லை என்றார்கள். அகழ்வாராய்ச்சியாளர் கே.கே.முகமது இதை மறுத்தார். 1977களில் பாப்ரி அமைப்பினையொட்டி நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இருந்த ஒரே முஸ்லீம், தான் மட்டுமே என்பதை நினைவுபடுத்திய அவர் ”பாப்ரி அருகே அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடத்துக்கு நான் சென்று பார்த்தேன். அங்கே தூண்களின் அடித்தளங்கள் இருப்பதைக் கண்டேன்” என திட்டவட்டமாக கூறினார்.
இடதுசாரிகள் விடவில்லை. நாடு முழுக்கத் தங்கள் இயக்கங்களைப் பயன்படுத்தி, பெரிய பிரசாரம் செய்தார்கள். பொதுமக்களிடம் அல்ல.  ஊடகங்களிலும் அறிவுஜீவிகளிடமும். புத்த கயாவின் கதை என்ன? அதை ஹிந்துக்கள் அழிக்கவில்லையா? ஆக்கிரமிக்கவில்லையா? ஆனால் உண்மை அப்படி அல்ல. வரலாற்றாராய்ச்சியாளர் டாக்டர்.அப்துல் குதோஸ் அன்ஸாரி விளக்கினார்:
பௌத்தம் செழித்து வளர்ந்திருந்த புத்த கயா பகுதியில் இஸ்லாமின் சிலை உடைப்புத் தீவிரம் பெரும் அழிவை ஏற்படுத்தியிருந்திருக்க வேண்டும்.  இதன் விளைவாக அங்கே பௌத்தர்களே இல்லாமல் அழிந்துவிட்ட நிலையில் அங்கு (சிதைக்கப்பட்ட) பௌத்த விகாரங்களை வழிபட, பராமரிக்க ஆளில்லாத நிலையில் பிராமணர்கள் தங்கள் மதக்கடமைக்கு வெளியே சென்று அந்தப் பணிகளையும் செய்ய வேண்டியிருந்தது.
ஆனால் இத்தகைய வரலாற்று நுண் உண்மைகளைக் குறித்துப் பேசிடும் நிலையில் இல்லை இடதுசாரி பிரசாரகர்கள். வலுவான ஊடகமும் அதிகார வர்க்கமும் ஒரு பக்கம் அணிதிரள, அயோத்தியில் ராமனுக்கு ஓர் ஆலயம் இல்லையா என்கிற ஆதங்கம் வெகுஜன மக்கள் மனத்தில் அலையடிக்க ஆரம்பித்தது. இஸ்லாமியர் மனத்திலோ, அது ஒரு மசூதி என்கிற எண்ணம் ஆழப்பதியத் தொடங்கியது. ஆக, இடதுசாரிகள் செய்த வரலாற்று மோசடியே பாப்ரி கும்மட்டம் ஊடகங்களில் மசூதியாக உருமாற்றம் பெற்றது.
இந்த தேசத்தின் தேசிய ஆதங்கத்துக்கு எதிராகச் செய்யப்பட்ட அறிவுஜீவி துரோகம் இது. துரோகங்கள் எல்லாத் தளங்களிலும் தொடர்ந்தன.
கரசேவகர்கள் உச்சநீதி மன்றத்துக்கு வாக்களித்து அதை மீறிவிட்டார்கள் என்று ஏறக்குறைய அனைத்து ஊடகங்களும் டிசம்பர் ஆறு 1992 க்குப் பிறகு சோக கீதம் இசைத்தன. இதே கரசேவகர்கள் 1991ல், இதே உச்சநீதிமன்றம் சொன்னதைக் கேட்டு அமைதி காத்தபோது ‘கரசேவை பிசுபிசுத்துவிட்டது; ராமஜென்மபூமி மீட்பு இயக்கம் சக்தி இழந்துவிட்டது’ என்று பேசின.
இத்தனை உணர்ச்சி பூர்வமான விஷயத்தில், லட்சக்கணக்கான மக்கள் தேசமெங்கும் இருந்து வந்து அயோத்தியில் குழுமியிருக்கும் ஒரு விஷயத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்பது சில வாரங்கள் தாமதமானால் புரிந்து கொள்ளலாம். ஆனால் ஒரு வருடம் தாமதமானால்? தங்கள் பொறுமை அதிகார வர்க்கத்தால் துச்சமாக விளையாட்டுப்பொருளாக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டனர் கரசேவகர்கள். அதனால்தான் டிசம்பர் ஆறு 1992இல் பொங்கியெழுந்தனர். அது துரோகமென்றால், துரோகத்தின் முதல் கல்லை இந்த நாட்டின் போலி மதச்சார்பின்மை பேசும் அதிகார வர்க்கம் அவர்கள்மீது வீசியது. .
அதன் பின்னர் 2003இல் வழக்குக்காக  அகழ்வாராய்ச்சி ஆரம்பித்தது. ஒரு கனேடிய புவியியல் நிறுவனம் முதலில் ஆராய்ந்து, அங்கே பாப்ரி அமைப்புக்குக் கீழே மற்றொரு அமைப்பு இருப்பதற்கான ஆதாரம் இருப்பதாகத் தெரிவித்தது. அகழ்வாராய்ச்சியில் தேவநாகரி கல்வெட்டு உட்பட, சில மனித உருக்கொண்ட விக்கிரகங்களும் கிடைக்க ஆரம்பித்தன. நவீத் யார் கான் என்ற ஒரு பாப்ரி ‘மசூதி’ ஆதரவாளர் அகழ்வாராய்ச்சிக்குத் தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்திடம் கோர, அது தள்ளுபடி ஆயிற்று.
அரவிந்தன் நீலகண்டன்
ஜூன் மாதத்தில் மீண்டும் ஊடக காமெடி தொடங்கியது. ஜூன் 11 2003 இல் வெளியான செய்திகளில் “பாப்ரி மசூதிக்குக் கீழே ஓர் அமைப்பு இருப்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை” என்பதாகச் செய்திகள் வெளியாயின. ஆனால் இந்தச் செய்திகளைப் படிக்கும்போது எந்த அளவுக்குத் தங்கள் வாசகர்களை எவ்வித மனச்சாட்சியும் இல்லாமல் மடையர்கள் என இந்தப் பத்திரிகைகள் கருதுகின்றன என்பது புரியும். உதாரணமாக, ’தி ஹிந்து’ தனது செய்தியின் தொடக்கத்தில் இப்படி முழங்கியது:
‘இந்திய அகழ்வாராய்ச்சிக் கழகம் தனது அறிக்கையில் பாப்ரி மசூதியின் கீழே வேறொரு அமைப்பு இருப்பதற்கான எவ்வித அமைப்புரீதியிலான வித்தியாசங்களையும் தான் தோண்டிய 15 புதிய குழிகளிலும் காண முடியவில்லை என்று சொல்லியிருப்பதாகக் கூறப்படுகிறது.’
ஆனால் விலைச்சலுகையில் புள்ளி வைத்து  சிறிய எழுத்தில் ஆப்பு வைக்கும் சாமர்த்திய வியாபாரியின் நேர்மையின்மையுடன் இறுதியில் அந்த செய்தி சொல்கிறது:
‘அமைப்புரீதியிலான வித்தியாசங்களைத் தான் ஆராய்ச்சி மேற்கொண்ட வேறு 15 குழிகளில் கண்டறிந்ததாக அறிக்கை சொல்கிறது.’
இப்போது நாம் அனைவரும் மனச்சாட்சியைத் தொட்டு கேட்க வேண்டிய கேள்வி -  எது இந்திய மதச்சார்பின்மைக்கும் அற உணர்வுக்கும் எதிராக செய்யப்பட்ட மிகப்பெரிய அநீதி? திட்டமிட்டுப் பொய் பிரசாரம் செய்து, இல்லாத மசூதியான ஒரு கும்மட்டத்தை, ஒரு மசூதியாக சிறுபான்மை மக்கள் மனத்தில் பதித்த இந்தப் படித்த அயோக்கியர்களின் செயலா? அல்லது தாக்கப்பட்டு, குண்டடி பட்டு மீண்டும் மீண்டும் இந்தியாவின் உச்ச மட்டங்களில் அமர்ந்திருக்கும் அதிகார வர்க்கத்தினரால் ஏமாற்றப்பட்டு, அந்த கும்மட்டத்தை ஏறி உடைத்த கரசேவகர்களின் செயலா?
படித்தவன் சூதும் வாதும் செய்தால் ஐயோ எனப் போவான் என்று பாரதி சொன்னான்.
உடைக்கப்பட்டது மசூதி அல்ல; ஒரு கும்மட்டம்தான். அந்த இடம் இந்த தேசத்தின் ஆதார தேசிய உணர்ச்சியுடன் தொடர்புடையது. இந்த தேசம் முழுவதும் அனைத்து சமுதாய மக்களிடமும் ஆழமான பண்பாட்டு ஆன்மிக உணர்ச்சியுடன் இணைந்த ஒரு பெயர் ஸ்ரீ ராமன். ஆதிகவி வான்மீகிக்கு அவன் ஆதர்ச நாயகன். அகநானூற்றுக் கவி கடுவன் மள்ளனாருக்கும் சபரிக்கும் அவன் தெய்வம். குகனுக்கு சகோதரன். ஆனால் அவனையும் கூட கேள்விக்கு உட்படுத்தும் மரபு ஹிந்துக்களுடையது. எனவேதான் அவன் பாரதத்தின் தேசிய நாயகன். ராம ரசத்தைப் பருகுங்கள் என்று சிந்து நதிக்கரை சீக்கியரும் பிபரே ராமரசம் என்ற காவேரிக்கரை  தென்னிந்தியரையும் இணைக்கும் பண்பாட்டு உன்னதம் ராமன். அவனுக்கு ஆலயம் அமைக்கவே ஓர் அன்னிய அடிமைத்தளையின் சின்னம் அகற்றப்பட்டது. அதைத்தான் அலகாபாத் நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.
இந்த உண்மையைத்தான் நம் நேர்மையில்லாத ஊடகங்கள் மறைத்தன. மனச்சாட்சியில்லாத அறிவுஜீவிகள் வசை பாடினர். ஆனால் தவறுகளிலிருந்து அவர்கள் பாடம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. மவுண்ட்ரோடு மாவோ செய்திதாளில் வரும் புலம்பல்கள் அதைத்தான் வெளிப்படுத்துகின்றன. எனவே ஹிந்துத்துவர்களுக்கு இந்தத் தீர்ப்பு அடுத்த சவாலை முன்வைக்கிறது. இத்தீர்ப்பு சொல்லும் உண்மையைப் பொது மக்களிடம் – குறிப்பாக இஸ்லாமிய சகோதரர்களிடம்  கொண்டு செல்ல வேண்டும். அயோத்தியில் ஸ்ரீ ராமனுக்கு அமைக்கப்படும் ஆலயம் இந்த தேசத்தின் அனைத்து மக்களின் அன்புடனும், அனைத்து சமுதாயத்தினரின் சமரச நல்லிணக்க மனோபாவத்துடனும் எழுப்பப்படுவதாக இருக்க வேண்டும். அதுதான் உண்மையான கரசேவையாக அமையும்.

கருத்துகள் இல்லை: