ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 5

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 5

இன்று உலகில் அதிக குற்றங்களை செய்பவர்களை உடைய நாடு என்பது கிறிஸ்தவ நாடுகளாய்த்தான் உள்ளது. லட்சிய மற்ற வாழ்க்கையை வாழ்ந்து வரும் அந்நாட்டு மக்கள் போதை, காமம் ஆகியவற்றுக்கு உட்பட்டு நம்பிக்கையற்ற வாழ்க்கை நடத்தி வருவதுடன் சமுதாய சீர்கேட்டிற்குக் காரணமாய் இருந்து வருகிறார்கள். இசுலாம் நாடுகளில் ஜனநாயகம் என்பது மருந்திற்குக் கூட இல்லாத நிலை. ஒரு நாடு ஒரு நாட்டை ஏப்பம் விட்டு வருகிறது. இசுலாத்தால் உலகத்தில் சமாதானத்திற்குப் பதில் சகிப்பற்ற தன்மையும் யுத்தமும்தான் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் ஒரு உலகப்போர் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் ஒரு உலகப்போர் ஏற்படுமானால் அது கிறித்தவ நாடான அமெரிக்காவின் ஆதிக்க வெறியாலோ, அல்லது உலகம் முழுவதும் இசுலாம் மயமாக்க விரைந்து செயல்பட்டு வரும் முசுலீம் நாடுகளாலோதான் ஏற்படும். இது உலக சமாதானத்திற்கு ஆபத்தையே ஏற்படுத்தும்.

-  ‘மதமாற்றத் தடைச்சட்டம் ஏன்?’
இந்து முன்னணி வெளியீடு. பக்:42.
”மேலை நாடுகளில் உள்ள பெண்கள் யார் அழைத்தாலும் சோரம் போவார்கள். ஆண்கள் காமவெறியுடன் குடி, கூத்து என்று அலைகிறார்கள். இத்தகைய பண்பாட்டுச் சீரழிவுக்குக் காரணம் கிறித்தவ மதம். இசுலாமிய நாடு என்றால் கோமேனி, சதாம் உசேன், இடி அமீன், கடாஃபி, ஜியாவுல் ஹக், தாலிபான், பின்லேடன் போன்ற சர்வாதிகாரிகள், பயங்கரவாதிகள்தான் நினைவுக்கு வருவார்கள். இதற்குக் காரணம் முசுலீம் மதம்.இவற்றுடன் ஒப்பிடும் போது நம் நாட்டின் ஜனநாயகம், அகிம்சை, உயர்ந்த பண்பாடு ஆகியவற்றின் அடிப்படை இந்து மதம்தான்.” இவைதான் இந்நூற்றாண்டு முழுவதும் இந்தியச் செய்தி நிறுவனங்கள் உருவாக்கி வரும் பொதுக்கருத்துக்கள். இதிலிருந்து கட்டியமைக்கப்பட்ட விசமப்பிரமச்சாரம்தான் மேற்கண்ட இந்துமத வெறியர்களின் அவதூறு.
இது உண்மைதானா என்று பரிசீலிப்பதற்கு இவர்கள் கூறுகின்றன ஜனநாயகம், உயர்ந்த பண்பாட்டை இந்து மதமும் இன்றைய இந்தியாவும் கொண்டுள்ளதா என்பதைப் பார்போம்.

இந்து மதம் ஜனநாயக மதமா?

முதலில் இந்து மதம் ஒரு மதமே அல்ல. மதம் என்ற வகையில் உள்ள ஆன்மீக விசயங்களைவிட, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற சட்டதிட்டங்களே அதனுடைய சாரம். நேற்றும் இன்றும் இந்திய வாழ்வின் பல நிலைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் அந்தச் சாரத்தின் அடிப்படையே ஜனநாயக மறுப்புதான்.
சாதி, மொழி, இன, பாலியல் ஒடுக்குமுறைதான் இந்து மதத்தின் நான்கு வேதங்கள். இம்மையில் மட்டுமல்ல மறுமையில் கூட உழைக்கும் மக்களுக்கு விடுதலை கிடையாது என்று கூறும் மதம் இது மட்டுமே. வாழ்க்கை முறை, சட்ட திட்டம், தண்டனை அனைத்தும் பார்ப்பன – சமஸ்கிருத இலக்கியங்கள் முழுவதிலும் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இலக்கியத்தில் மட்டுமல்ல, இன்று வரை நடைமுறையிலும் இவை இந்திய உழைக்கும் மக்களை மூழ்கடித்தே வந்திருக்கின்றன. இப்படி பிறப்பு முதல் இறப்பு வரை பெரும்பான்மை மக்களுக்கு ஜனநாயகத்தை மறுத்த கொடூரமான வாழ்க்கை விதிகள் பைபிளிலோ, குர்-ஆனிலோ நிச்சயம் இல்லை.

இந்து மதம் ஒழுக்கமான மதமா?

வாத்ஸ்யாயனரின் காமசூத்திரம், அச்சில் ஏற்ற முடியாத ஆதி சங்கரனின் சௌந்தர்ய லஹரி, அஜந்தா – கஜுராகோ சிற்பங்கள் போன்றவையும், புராணங்களின் காமவெறி வக்கிரங்களும் இவர்களின் ஒழுக்கத்தைப் பறைசாற்றுகின்றன. ஓடிப்போன சங்கராச்சாரி, கம்பி எண்ணி காலஞ்சென்ற பிரேமானந்தா முதல் கிராமத்தின் குறி சொல்லும் சாமியாடி வரை, இந்து மதத்தின் ஒழுக்கத்தைப் பறைசாற்ற அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம் பெறுகிறார்கள்.
அடுத்து சூத்திரன் என்ற நான்காம் வருண மக்களுக்கு இந்து மதம் கூறுகின்ற பொருளைப் பார்ப்போம். படிதாண்டிய மேல் வருண – சாதிப் பெண்களுக்கும், கீழ் வருண – சாதி ஆண்களுக்கும் பிறப்பவர்களே சூத்திரன் அதாவது வேசிமகன் என்று பார்ப்பனியம் வரையறுத்தது. இப்படி தன் சொந்த நாட்டின் பெரும்பான்மை ஆண்களையும், பெண்களையும்  ஒழுக்கம் கெட்டு சோரம் போனவர்கள், வேசி மக்கள் என்று வரையறுத்து நடத்திய ஒரே மதம் இந்து மதம்தான், இத்தகைய கேவலத்தை உலக மதங்கள் எவற்றிலும் பார்க்க முடியாது என்கிறார் அம்பேத்கர்.
சரியோ, தவறோ ஒரே வகையான ஒழுக்கத்தை தத்தமது மதங்களில் இருக்கும் அனைவரும் பின்பற்ற வேண்டும் என ஏனைய மதங்கள் கூறுகின்றன. ஆனால், இந்து மதம் மட்டுமே சாதி – வருணத்திற்கேற்றபடி ஒழுக்கம் சட்ட திட்டங்களை மாற்றி அமல்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக மேல்சாதி – வருண ஆண்கள் எல்லா சாதிப் பெண்களையும் பெண்டாளலாம்; கீழ் சாதியினரைக் கொலை செய்யலாம்; வரையறை இல்லாமல் சொத்து சேர்க்கலாம் – தானம் பெறலாம் – கொள்ளையடிக்கலாம்; இந்த ‘சலுகைகள்’ கீழ் சாதியினருக்குக் கிடையாது என்பதோடு இவற்றுக்கு உட்பட்டே வாழவேண்டும். மீறினால் மரணதண்டனை. இது புராணக் கதையல்ல என்பதையே கோபாலகிருஷ்ண நாயுடுக்களும், ரன்பீர் சேனாக்களும் நிரூபித்து வருகின்றனர்.

இந்து மதம் அகிம்சையான மதமா?

பிற மதங்கள் வாயளவிலாவது அகிம்சையைப் போதிக்கின்றன. குறைந்த பட்சம் தன் மதத்தினரிடையேயாவது அகிம்சையைப் பின்பற்றுமாறு வலியுறுத்துகின்றன. ஆனால், இந்து மதம் மட்டுமே தன் மதத்தினர் மீதே வன்முறை – பயங்கரவாதத்தை ஏவிவிடுகிறது. தர்மம் என்ற பெயரில் நியாயப்படுத்துகிறது. சம்பூகன், ஏகலைவன், நந்தன் ஆகியோரைப் பிரதிநிதிகளாகக் கொண்டுள்ள சூத்திர – பஞ்சம மக்கள்தான் இந்துமத வன்முறைக்குப் பலியானவர்களின் சாட்சியங்கள்.

இந்தியா பண்பாட்டுச் சீரழிவு இல்லாத நாடா?

பிஞ்சுக் குழந்தைகளுக்கு இன்றுவரை திருமணம் நடத்தும் இராஜஸ்தான் மாநிலம் இந்தியாவில்தான் இருக்கிறது. மூன்று லட்சம் குழந்தைகளை வைத்து சிறார் விபச்சாரத்தில் உலகிலேயே இரண்டாம் இடத்தைப் பெற்ற நாடும் இதுதான். எயிட்ஸ் தடுப்புப் பிரச்சாரத்திற்கு அதிகம் செலவழிக்கும் ஆசிய நாடும், எயிட்ஸ் நோய் வேகமாகப் பரவுவதில் முதல் நிலையிலுள்ள நாடும் இந்தியாதான். பெண் சிசுக்கொலை, கட்டி வைத்து எரிக்கப்படும் கலப்பு மணக்காதலர்கள், ஸ்டவ் வெடித்துச் சாகும் மருமகள்கள், உடன் கட்டை ஏற்றிக் கொல்லப்படும் இளம்பெண்கள், உலகின் பழம்பெரும் விபச்சார நிறுவனமான தேவதாசி முறை ஆகியவற்றின் உறைவிடம் இந்தியாதான்.
மேலவளவுப் படுகொலை, தாழ்த்தப்பட்டவரின் இரத்தத்தில் பெயர் எழுதும் ரன்பீர் சேனா, முசுலீம்களின் தலைகளை விதைத்துப் பயிரிடப்பட்ட பகல்பூரின் காலிஃபிளவர் வயல்கள், சிறுநீரகங்களை அறுத்துக் கொடுத்துக் கடன் வாங்கும் நெசவாளர்கள், கடன் அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் பருத்தி விவசாயிகள் – இவற்றினை உலக வரலாற்றில் பார்ப்பது சிரமம். இந்தியப் போலீசின் உதவியோடு லாக்கப் கொலை – கற்பழிப்பிலும் இந்தியாவே முதலிடத்தில் வருகிறது. மேலும் தொழுநோய், காசநோய், யானைக்கால், பெரியம்மை, பார்வையற்றோர், ஊழல் இவற்றிலும் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கின்றது.

இந்தியா ஜனநாயக நாடா?

பல இசுலாமிய நாடுகளை ஒப்பிடுகையில் இங்கே பெயரளவில் ஜனநாயகம் இருப்பது உண்மைதான். ஆனால், ‘பெயரளவில்’ என்ற பொருள்தான் மிகவும் முக்கியம். இப்படி பெயரளவு ஜனநாயகம் கிடைப்பதற்குக் காரணம் இந்து மதப் பாரம்பரியம் அல்ல. பார்ப்பனிய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, சாதி – தீண்டாமை எதிர்ப்பு, பெண்ணடிமைத்தன எதிர்ப்பு, மன்னர் எதிர்ப்பு மற்றும் ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களின் தவிர்க்க இயலாத விளைவாகத்தான் இந்த ஜனநாயகம் கிடைத்தது. இந்த ஜனநாயகத்தைப் பற்றி பெருமையடிக்கும் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் ஜனநாயகப் போராட்டங்கள் அனைத்தையும் எதிர்த்தே வந்திருக்கிறது.
இவர்களும், இவர்களின் முன்னோடிகளும், காங்கிரசில் இருந்த பார்ப்பன – மேல்சாதி வெறியர்களும், தேவதாசி ஒழிப்பு, விவாகரத்து சட்டம், வைக்கம் போராட்டம், தீண்டாமை எதிர்ப்புப் போராட்டம், இந்து சிவில் சட்டம் அனைத்தையும் வன்மம் கொண்டு எதிர்த்ததே இந்நூற்றாண்டின் வரலாறு. எனவே இந்துமத வெறியர்களை ஓரளவுக்கேனும் முறியடித்ததால் கிடைத்ததே இந்தப் பெயரளவு ஜனநாயகம். இவர்களை முழுமையாக வீழ்த்தும் போதுதான் உண்மையான ஜனநாயகம் கிடைக்க முடியும். ஆனால், ‘ஜனநாயகம்’ பேசும் இந்து மதவெறியாளர்களின் நோக்கம், இசுலாமிய நாடுகளைக் காட்டி இங்கேயும் பெயரளவு ஜனநாயக உரிமைகளை ரத்து செய்வதுதான்.

இந்தியா பயங்கரவாதத்தைப் பரப்பாத நாடா?

பயங்கரவாதம் என்பது யாரோ சில தீவிரவாதிகள் பாலத்துக்கோ, பிரதமருக்கோ குண்டு வைப்பது மட்டுமல்ல. உண்மையில் அரசு ஏவிவிடும் பயங்கரவாதத்தின் எதிர்விளைவுதான் பிரதானமானது. கலவரங்கள் அதிகமில்லாத குஜராத்தில் 15,000 பேர் தடா சட்டத்தில் கைதானது, பஞ்சாபில் 25,000 இளைஞர்கள் கொல்லப்பட்டுக் காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்த்தது, காஷ்மீரில் காணாமல் போனவர்களைத் திருப்பித் தருமாறு ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களைக்கூட காக்கை குருவி போல சுட்டுக்கொல்வது, வடகிழக்கில் போராளிகளையும், ஆந்திரா – பீகாரில் நக்சல்பாரி புரட்சியாளர்களையும் போலி மோதலில் சுட்டுக் கொல்வது, பஞ்சாப், ஈழம், வடகிழக்கு, காஷ்மீரில் போராடுகின்ற குழுக்களை உடைத்து கைக்கூலிக் குழுக்களை உருவாக்கியது, மனுக் கொடுக்க வந்த மாஞ்சோலைத் தொழிலாளர்களையும், நாக்பூர் கோவாரி பழங்குடியினரையும் அடித்துக்கொன்றது, வீரப்பன் தேடுதலைச் சாக்கிட்டு அதிரடிப்படை கிராமம் கிராமமாகப் பெண்களைக் கற்பழித்தது – இவையெல்லாம் இந்தியாவின் மத்திய, மாநில அரசுகள் நடத்திய சில பயங்கரவாதங்கள்.

மேலை நாடுகள், இசுலாமிய நாடுகளின் நிலை

எனவே மேலை நாடுகளும், இசுலாமிய நாடுகளும் நம்மைவிட உயர்ந்த நிலையில் இருக்கின்றனவா? இல்லை என்கிறோம். இந்தியாவில் உள்ள சீரழிவுகள், பிரச்சினைகன் எல்லா நாடுகளிலும் இருக்கத்தான் செய்கின்றன. இசுலாமிய நாடுகள் பலவற்றில் ஜனநாயகம் இல்லை என்பதும் உண்மைதான். ஆனால், இந்தப் பிரச்சினைகளுக்கு முக்கியமான காரணம் மதம் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
மன்னனையும், நிலப்பிரபுக்களையும், திருச்சபையையும் எதிர்த்த மக்களின் போராட்டத்தினால்தான் மேற்கத்திய நாடுகளில் ஜனநாயகம் வந்தது. இப்படிப்பட்ட போராட்டம் நடைபெறாத இசுலாமிய நாடுகளில் ஷேக்குகளும், இராணுவச் சர்வாதிகாரிகளும் ஆண்டு வருகின்றனர். இவர்கள்தான் தமது சர்வாதிகாரத்தைத் தக்க வைத்து, ஜனநாயகத்தை மறுப்பதற்கு மதத்தை முகமூடியாகப் பயன்படுத்துகின்றனர். போராட்டம் நடைபெற்ற துருக்கி, எகிப்து போன்ற நாடுகளிலும், முன்னாள் சோசலிச நாடுகளான சீனா, ரசியாவில் உள்ள இசுலாமியப் பகுதிகளிலும் சர்வாதிகாரம் ஒழிக்கப்பட்டது.
பண்பாட்டுச் சீரழிவுகளுக்கு முக்கியமான காரணம் ஏகாதிபத்திய நாடுகள் உருவாக்கி வரும் சமூக நிலைமைகள்தான். மேல்நிலை வல்லரசுகளின் உலக மயமாக்கத்தால் உலக மக்கள் மீது சொல்லொண்ணாத் துயரம் திணிக்கப்பட்டு வருகிறது. தொழில்துறை உற்பத்தியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பங்குச் சந்தை, தகவல் தொடர்பு, காப்பீடு, வங்கி, நிதி, கேளிக்கை, நுகர்பொருள், திரைப்படம் போன்ற சேவைத் துறைகளை வைத்தே பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்கின்றன. இவற்றின் சமூக விளைவாக பணவெறி, நுகர்வுவெறி, தனிநபர் வாதம், சூதாட்டம், பாலியல் சுற்றுலாக்கள், காமக் களிவெறியாட்டங்கள் போன்ற பண்பாட்டுச் சீரழிவுகள் இசுலாமிய – நாடுகளை உள்ளிட்டு உலகம் முழுவதும் பரவி வருகின்றன.
இந்து மதவாதிகளைப் போல கிறித்தவத் திருச்சபைகளும், அரபு ஷேக்குகளும் இத்தகைய சீரழிவுகளை எதிர்ப்பதாக நடிக்கின்றனர். சாதாரண மக்கள் ‘ஒழுக்கம்’ தவறினால் கடுந்தண்டனை வழங்கம் அரபு ஷேக்குகள் தங்கள் சொந்த வாழ்வில் கேட்பாரில்லாத கேளிக்கை வெறியர்களாக உள்ளனர்.
ஆனால், மத ஒழுக்கம்தான் சீரான ஒழுக்கம் என்றும், அதிலிருந்து பிறழ்வதுதான் சீரழீவு என்றும் எல்லா மதவாதிகளும் கூறுகின்றனர். எடுத்துக்காட்டாக கிறித்தவம் கருச்சிதைவையும், இசுலாம் பர்தா அணியாமையையும், இந்துமதம்  விதவை மறுமணத்தையும் சீரழிவு என்கின்றனர். அதேசமயம், இத்தகைய பிற்போக்கு மதங்கள் அனைத்தும் விபச்சாரம், அழகிப்போட்டி போன்ற முதலாளித்துவச் சீரழிவுகளையும் சேர்த்தே எதிர்க்கின்றன. ஆனால், முதலாளித்துவத்தின் பண்பாட்டுச் சீரழிவுகளுக்கு, பிற்போக்கான மத ஒழுக்கம் மாற்றாக முடியாது. இரண்டையும் களையக்கூடிய சனநாயகப் பண்பாடுதான் மாற்றாக விளங்க முடியும் என்கிறோம்.
அடுத்து, இசுலாமியத் தீவிரவாதத்தை சில நாடுகளும், குழுக்களும் ஆதரிப்பது உண்மைதான். ஆனால், அவற்றுக்கு அடிப்படையாக இருந்து பயங்கரவாதத்தைப் பல நாடுகளில் தூண்டிவிடுவது, பிறகு அதை அடக்குவதாகக் கூறி தலையிடுவது, ஆக்கிரமிப்பு செய்வது, குண்டு பொழிவது போன்றவையெல்லாம் அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய நாடுகளின் கைங்கரியங்களே. ரசியாவை எதிர்த்துப் போரிட தாலிபானுக்கு ஆயுத உதவி செய்து, தேச பக்தர்கள் என்ற பட்டமும் கொடுத்த அமெரிக்கா இன்று அவர்களைப் பார்த்துப் பயங்கரவாதிகள் என்று சீறுகிறது. உலகிற்கு சமாதான உபதேசம் செய்யும் வாத்திகன் திருச்சபை இந்த அமெரிக்க பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது.
சீரழிவுகளை எதிர்த்துப் பாரதப் பண்பாட்டைக் காப்பதாகக் கூறும் ஆர்.எஸ்.எஸ். கூட்டமும் வாத்திகனின் அடியொற்றி, அமெரிக்காவையும் அதன் இந்தியத் தரகு முதலாளிகளையும் ஆதரிக்கின்ற எடுபிடியாகத்தான் இருக்கிறது. கிளிண்டனின் இந்திய வருகையின் போது, நெடுஞ்சாண் கிடையாகக் காலில் விழுந்து உபசரித்தது இவர்களின் பக்திக்கு ஒரு உதாரணம். பாபர் மசூதியை இடித்த கையுடன் ராமஜன்மபூமி முக்தி மோர்ச்சாவின் தலைவர் கிளிண்டனுக்கு எழுதிய கடிதத்தில், ‘முசுலீம்களிடமிருந்து இந்துக்களையும், உலகையும் காப்பாற்ற அவதரித்த நவீன கிருஷ்ணபகவானே’ என்று உருகுகிறார்.
இத்தகைய அட்சர சுத்தமான கேவலமான அடிமைகள், இசுலாமிய நாட்டு மக்களை அடக்கி ஆட்டம் போடும் அரபு சேக்குகள் பெற்றுள்ள உரிமையை பார்ப்பன – பனியா கும்பலுக்கும் பெற்றுத்தர விரும்புகிறார்கள். மேலை கிறித்தவச் சீரழிவு, இசுலாமிய பயங்கரவாதம் என்று மதச்சாயம் பூசி அவதூறு செய்வது இதற்காக

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் –

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 6

சுதந்திரப் போராட்டக் காலத்தில் தேசபக்தர்களுக்கும், தூக்குக் கயிற்றில் தொங்கிய தியாகிகளுக்கும் உயிர் கொடுத்த மந்திரச் சொல் வந்தே மாதரம்‘. தன்னிகரில்லா பாரதத் தாயின் மீது பக்தியையும், அன்பையும் தூண்டி எழுச்சியைத் தோற்றுவிக்கும் வந்தே மாதரதேசிய கீதத்தை கிறித்தவர்களும், முசுலீம்களும் பாட மறுக்கிறார்களே ஏன்?”
- ஆர்.எஸ்.எஸ்.இன் நீண்டகால அவதூறுகளில் இதுவும் ஒன்று.
டந்த பத்தாண்டுகளாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் வந்தே மாதரத்தைக் கட்டாயமாகப் பாடும் நடைமுறையை அவர்கள் ஏற்கெனவே ஆரம்பித்து விட்டார்கள். வந்தே மாதரத்தைப் பாட மறுக்கும் சிறுபான்மையினரைத் தேசத்துரோகிகள் என்று பெரும்பான்மை மக்கள் எளிதில் ஏற்கும் வண்ணம் பிரச்சாரமும் செய்து வருகிறார்கள். ஆகையால் வந்தே மாதரத்தையும் நாட்டுப் பற்றையும் இணைத்து இந்து மதவெறியாளர்கள் போட்டிருக்கும் இந்தப் பொய் முடிச்சை நாம் அவிழ்க்க வேண்டும்.

நாட்டுப் பற்று ஜெபத்திலா, சிறையிலா?

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியவர்களின் பெருமை, அவர்கள் ஒவ்வொரு நாளும் வந்தே மாதரத்தை உச்சசாடனம் செய்தார்களா என்பதில் இல்லை; தடியடி, சிறை, தூக்கு இன்னபிற கொடுமைகளை ஏற்றுக்கொண்டு தளராமல் போராடியதில்தான் இருக்கின்றது அவர்களது பெருமை. அதைத்தான் நாட்டுப்பற்று எனக்கூற முடியும். அதேசமயம் வெள்ளையர்கள் இருக்கும்வரை ‘ஷாகா’ சென்று கபடி விளையாடிய ஸ்வயம் சேவகக் குஞ்சுகள், ஒவ்வொரு நாளும் ‘வந்தே மாதரம்’ ‘பாரத் மாதாகி ஜெய்’ இரண்டையும் ஜெபம் செய்தார்களே ஒழிய, சுதந்திரப் போராட்டத்திற்காகத் தமது சுட்டு விரலைக்கூட அசைக்கவில்லை. சிறைக் கம்பிகளைக் கூடக் கண்டிராத கோழைகளும், துரோகிகளுமான இந்துமத வெறியர்கள், வந்தே மாதரத்தின் ஊடாக நாட்டுப்பற்றை பற்றிப் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது?
பாரதமாதா கிடக்கட்டும், பாரதம் என்று இன்று அறியப்படும் இந்தியாவே உருவாயிராத காலம்தான் 19ஆம் நூற்றாண்டு. பல்வேறு வழிமுறைகளில் ஆட்சியதிகாரத்தை வெள்ளையர்கள் கைப்பற்றிக் கொண்டிருந்த காலம் அது. அதனால் அதிகாரமிழந்தவர்கள் அவர்களை எதிர்ப்பதும், அதிகாரம் பெற்றவர்கள் ஆதரிப்பதும் இடத்திற்கிடம் மாறுபட்டது. உதாரணத்திற்கு மராத்திய சிவாஜிக்குப் பின், பேஷ்வாக்களின் ஆட்சியில் தக்காணம் முழுவதையும் பார்ப்பன ‘மேல்’சாதி நிலப்பிரபுக்களும், வியாபாரிகளும் ஆண்டு அனுபவித்தனர். ஆங்கிலேயரின் வரவு பேஷ்வா ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. தமது சமூக மேலாண்மை பறி போனதைக் கண்ட மராத்திய சித்பவனப் பார்ப்பனர்கள், வெள்ளையர்களை எதிர்க்கத் துவங்கிய சூழ்நிலை இதுதான். திலகர், கோகலே, சாவர்க்கர் போன்ற சித்பவனப் பார்ப்பனர்கள் பிரிட்டிஷ் எதிர்ப்பாளர்களாக உருவான விதமும் அப்படித்தான்.

ஆங்கிலப் பிதாவிடம் வங்கமாதாகாதல்!

மராத்திய நிலைமை இப்படியிருக்க வங்கத்தின் நிலைமை நேரெதிராக இருந்தது. மொகலாயர் ஆட்சிக்குப் பின்னால் வங்கத்தை ஆண்ட முசுலீம் நவாப்புகள், ஜமீன்தார்கள் ஆட்சியில் – பார்ப்பன ‘மேல்’சாதியினர் தமது அதிகாரத்தை இழந்து தவித்தனர். எனவே, நவாப்புகளை முறியடித்த ஆங்கிலேயர்களை அவர்கள் நெஞ்சார வாழ்த்தி வரவேற்றனர். இந்தச் சூழ்நிலையை வைத்து 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்ற பார்ப்பனர் ‘ஆனந்தமடம்’ என்ற நாவலை எழுதினர். முசுலீம் அரசர்களை எதிர்த்து இந்துச் சாமியார்கள் போராடுவதைக் கூறும் இக்கதையில்தான் ‘வந்தே மாதரம்’ (தாய்க்கு வணக்கம்) என்ற பாடல் வருகிறது. காளி, துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்ற தாயை விளிக்கும் ‘வந்தே மாதரம்’ இப்படித்தான் தோன்றியது.
”நம்முடைய நவாபின் ராஜ்ய பரிபாலனத்தைப் பாரும். மதம் போய்விட்டது; சமூகம் போய்விட்டது; மானம் போய்விட்டது; குலம் போய்விட்டது; இப்போது பிராணனும் போய்க் கொண்டிருக்கிறது…” இது ‘ஆனந்த மடம்’ நாவலில் வரும் ஒரு உரையாடல். இதில் யாருடைய மதம் – சமூகம் – மானம் – குலம் – பிராணன் போய்விட்டது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம். அதனால்தான் முசுலீம் அரசர்களிடமிருந்து வங்கத்து மாதாவை விடுதலை செய்த ‘ஆங்கிலப் பிதாவை’ அன்றைய வங்கத்துப் பார்ப்பன ‘மேல்’ சாதியினர் மனதார வாழ்த்தினர். வந்தே மாதரத்தின் தோற்றத்திலேயே நாட்டுப்பற்றுக்கு இடமில்லை!
காலப்போக்கில் வங்கத்து வந்தே மாதரம் ஆங்கிலப் பிதாவை எதிர்க்கும் பாரத மாதாவாக மறுபிறவி எடுத்தது. இந்த பாரத மாதா பஜனையை விடுதலைப் போராட்டத்தில் திணித்தது காங்கிரசு கும்பலின் கைங்கரியமாகும். இந்திய அளவில் இந்து மதமும், பாரத மாதாவும் உருவாக்கப்பட்டு வந்த நிகழ்ச்சிப் போக்கும், காங்கிரசின் பார்ப்பன ‘மேல்’சாதித் தலைவர்களும் அவர்களின் பார்ப்பனிய இந்துத்துவக் கருத்தும் ‘வந்தே மாதரத்தை’ப் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இருந்தன.

பஜனை நாட்டுப்பற்று எங்கேயுமில்லை!

இந்த இடத்தில் வாசகர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிரிட்டன், போர்ச்சுக்கல், ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் போன்ற ஏகாதிபதியங்களின் ஆதிக்கத்தின் கீழ் பல ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் இருந்திருக்கின்றன. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களின் மூலம் விடுதலையும் அடைந்திருக்கின்றன. அந்நாட்டைச் சேர்ந்த மக்கள் கிறித்தவம், இசுலாம், பவுத்தம் என்ற பலவிதமான மதநம்பிக்கை கொண்டவர்களாகவே இருந்திருக்கின்றனர். லிபியாவின் ஓமர் முக்தா தனிப்பட்ட முறையில் ஆழ்ந்த இசுலாமிய மதப்பற்று கொண்டவர்; துருக்கியின் கமால் பாட்சாவோ மதச்சார்பற்றவர்.
சீனாவை ஆக்கிரமித்த ஜப்பானும், அடிமைப்பட்ட சீனாவும் பவுத்தமத நம்பிக்கை கொண்ட நாடுகள்தான். அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் மதமும், அடிமைப்படுத்தப்பட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளின் மதமும் கிறித்தவம்தான்.
அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளின் மக்கள் தம்நாட்டைத் தாய்நாடென்றோ தந்தையர் நாடென்றோதான் அழைத்தார்கள். ஆனால், யாரும் கன்னி  மேரியைப் போலவோ, ஏசுவைப் போலவோ, புத்தரைப் போலவோ ஒரு படம் வரைந்து வைத்து குடம், சாம்பிராணி காட்டி, இந்தப் படத்துக்கு பஜனை பாடுபவன்தான் உண்மையான நாட்டுப்பற்று கொண்டவன் என்று கூறவில்லை. ஒரு மதத்தினர் மட்டுமே வாழும் நாடுகளில் கூட  நடக்காத இந்தப் பித்தலாட்டம், பல மதத்தினர் வாழும் இந்தியாவில் நடந்தது.

ரவிவர்மாவின் லட்சுமி காங்கிரசின் பாரத மாதா

கோயில்களின் அம்மணமாக நிற்கும் பெண் கடவுள்களை மாதிரியாகக் கொண்டு, அந்தப் பெண் உருவங்களுக்கு பார்ப்பன, உயர்சாதி மாமிகளின் பாணியில் சேலை கட்டி, ”இதுதான் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி” என்று வரைந்து தள்ளினார் திருவதாங்கூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஓவியர் ரவிவர்மா. இப்படி ‘மாதா’க்களை உருவாக்கிய மன்னர் பரம்பரைதான் கடைசிவரை வெள்ளையனின் விசுவாச அடிமையாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. முதுகில் நாலு கை முளைத்த லட்சுமிதான் பாரத மாதா; இந்தப் பெண் தெய்வத்தை வருணிக்கும் பாடல்தான் ‘விடுதலைக் கீதம்’ என்று சொன்னால் அது பிற மதத்தினரை வெறுப்படையத் செய்யாதா?
இப்படித்தான் விடுதலைப் போராட்டத்திலிருந்து மதத்தின் பெயரால் முசுலீம் மக்களைத் தனிமைப்படுத்தும் போக்கை காங்கிரசுக் கும்பல் ஆரம்பித்து வைத்தது. உருவ வழிபாடில்லாத, ஓரிறைக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்ட கிறித்தவ, இசுலாமிய மதங்களைச் சேர்ந்த மக்கள் வந்தே மாதரம் பாடுவதன் மூலம் இந்துத் தெய்வங்களை வணங்க வேண்டும் என்பது இந்துமத வெறியர்களின் குரூரமான விருப்பம். பாட மறுக்கும்போது தேசவிரோதிகள் என்று பிரச்சாரம் செய்வது அவர்களது பாசிச நோக்கம் நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு.

பாரத மாதாவை விற்பவர்கள் யார்?

ஒரு நாடு என்பது அங்கு வாழும் மக்களை மட்டும்தான் குறிக்கும். நாட்டுப்பற்று என்பது அம்மக்களின் நலனில் அக்கறை கொண்டிருப்பதை மட்டும் குறிக்கும். மக்களையும், அவர்கள் நலனையும் பற்றிக் கவலைப்படாத இந்து மதவெறியர்கள்தான் நாட்டை தெய்வம், படம், பூசை என்று சடங்கு முறையாக்கும் ”தேசபக்தி”க்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். ஆகையால் நாட்டை தெய்வமாக்குவதை அதுவும் பார்ப்பனத் தெய்வமாக மாற்றுவதை அனைவரும் எதிர்க்க வேண்டும்.
ஆகாசவாணியின் விடிகாலை ஒலிபரப்பில் கீறல் விழுந்த ரிக்கார்டாக ஒலித்துவந்த வந்தே மாதரத்தை, பிரேக் டான்சின் வலிப்புக்கேற்ப பாப்பிசை ‘வண்ட்டே மாட்றம்’ ஆக சோனி நிறுவனம் உலகெங்கும் வெளியிட்டிருக்கிறது. இன்னொருபுறம் மேல்நிலை வல்லரசுகளுக்காக நாட்டையே காட்டிக் கொடுத்து விற்கும் தரகனாக பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. இப்படி அரசியலிலும் பண்பாட்டிலும் பொருளாதாரத்திலும் ”பாரத மாதா”வை விற்பவர்கள் முசுலீம்களோ, கிறித்தவர்களோ அல்ல!

கடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள் !

தீர்க்க இயலாத வாழ்க்கைப் பிரச்சினைகள் முதல் மற்ற மதத்தவர்களைத் தீர்த்துக் கட்டும் மதவெறி வரை கடவுள் அடிப்படையாக இருக்கிறார். என்ன இருந்தாலும் ஏதோ ஒரு சக்தி நம்மை தோற்றுவித்து ஆட்டுவிப்பதாக நம்பும் அறியாமைப் பக்தர்கள் நிரம்பியிருக்கும் சூழலில் இக்கட்டுரை அறிவியல் பூர்வமாக அந்த அறியாமையை அகற்றுகிறது. இது ஒரு வழக்கமான நாத்திகம் பேசும் கட்டுரையல்ல. நாத்திகத்தை அறிவியலுடன் இணைக்கும் கட்டுரை. ஆன்மீக அன்பர்கள் மற்றும் கடவுளை நம்பிக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு இக்கட்டுரையை அறிமுகப்படுத்தவும். கட்டுரை குறித்த கருத்துக்களையும் மறவாமல் தெரிவிக்கவும். நன்றியுடன் வினவு.
கடவுள் பிடிபட்டார்
நமக்கு வெளியே கடவுள் என்றொருவர் இருப்பதாகவும், ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழில்களையும் ஏதோ ஒரு நோக்கத்தில் அவர் தொடர்ந்து செய்து வருவதாகவும் கூறுகின்றார்கள் மதவாதிகள். கடவுளை ‘வெளியே தேடாதே உன்னுள்ளே தேடு’ என்றார்கள் சித்தர்கள். இறை நம்பிக்கையாளர்களின் இந்தத் தேடல் பல நூற்றாண்டு காலமாக நடந்துவருகிறதெனினும், ‘கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்’ என்பதுதான் இதில் கிடைத்திருக்கும் கடைசி ரிசல்ட்.
இந்தப் பூவுலகில் கடவுள் மிகவும் பத்திரமாகப் பதுங்கியிருந்த ஒவ்வொரு மூடநம்பிக்கைக் குகையிலிருந்தும் புகை போட்டு அவரை வெளியேற்றி வருகின்றது அறிவியல். எனினும், இரண்டு இடங்களிலிருந்து மட்டும் அறிவியலால் ‘கடவுளை’ அப்புறப்படுத்த முடியவில்லை.
எல்லா வாதங்களிலும் தோற்ற பிறகு ஒரு பக்தன் முன்வைக்கும் கடைசி இரண்டு வாதங்கள் இந்த இடங்களை அடையாளம் காட்டுகின்றன. “நீங்க நம்பினா நம்புங்க நம்பாட்டி போங்க, அந்த கோயிலுக்குப் போனா எனக்குள்ள ஒரு ஃபீலிங் வருது பாருங்க, அதாங்க கடவுள்!” “என்ன வேணா சொல்லுங்க, நமக்கு மேல ஏதோ ஒரு பவர் இல்லாம இந்த உலகம் உருவாகியிருக்க முடியுமா?” ஒன்று உள்ளே, இன்னொன்று வெளியே.
புறவய உலகத்தின் ‘தோற்றம்’ குறித்த புதிரையும், அகவயமாக மனித மூளையில் தோன்றும் ‘உணர்வு’ குறித்த புதிரையும் விடுவிக்கும் முயற்சியில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது அறிவியல். மதவாதிகளின் மொழியில் சொல்வதென்றால் பிரம்ம ரகசியத்தையும் ஆன்ம ரகசியத்தையும் ‘கண்டு’, பிறகு அதனை ‘விண்டு’ உலகத்திற்குச் சொல்லவும் முனைந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
•••
முதலில் ‘படைப்பு ரகசியம்’ பற்றிப் பார்ப்போம். கடந்த செப் 10 ம் தேதியன்று பிரான்சு நாட்டின் எல்லையில் பூமியின் 300 அடி ஆழத்தில், 17 கிலோ மீட்டர் நீளம் கொண்ட குறுக்கு நெடுக்கான குழாய்ப்பாதையினுள் (Large Hadron Collider) அணுத்துகள்களை மோதவிட்டு பிரம்மாண்டமான ஆராய்ச்சி ஒன்றைத் துவக்கியிருக்கின்றார்கள் உலக விஞ்ஞானிகள்.
“இந்த ஆராய்ச்சி தொடங்கினால் அந்தக் கணமே உலகம் அழிந்துவிடும்” என்று ஐரோப்பாவில் உள்ள அல்லேலுயா கூட்டத்தினர் முதல் ஒரிசாவில் உள்ள இந்துக்கள் வரை பலரும் தத்தம் தெய்வங்களைச் சரணடைந்தனர். இதனைப் பரபரப்புச் செய்தியாக்கிய ஊடகங்கள், “உலகம் அழியுமா, அழியாதா?” என்று அப்துல் கலாமிடம் விளக்கம் கேட்க, நவீன இந்தியாவின் அழித்தல் கடவுளான அப்துல் கலாம் ‘அழியாது’ என்று அருள்வாக்கு கொடுத்தார். அதன் பின்னர்தான் கோயிலை விட்டு வெளியே வந்தார்களாம் சிவபக்தர்கள். நாம் விசயத்துக்கு வருவோம்.
நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் சுமார் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெருவெடிப்பினூடாக (Big Bang) நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது இயற்பியல் விஞ்ஞானிகளின் கருத்து. இந்தக் கோட்பாட்டு முடிவை, அதாவது பெருவெடிப்பை, சிறிய அளவில் ஒரு சோதனைச் சாலையில் நடைமுறையில் நிகழ்த்திப் பார்ப்பதுதான் இந்த ஆய்வின் நோக்கம்.
கிறிஸ்துவுக்கு முந்தையவரும் அணுக்கோட்பாட்டின் தந்தையுமான கிரேக்க தத்துவஞானி டெமாக்ரைடஸின் காலம் முதல் இன்று வரை இயற்பியல் ஆய்வு வெகு தூரம் வளர்ந்து விட்டது. மூலக்கூறுகள் அணுக்களால் ஆனவை; அணுக்கள் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் போன்ற துகள்களால் ஆனவை. புரோட்டான்களும் நியூட்ரான்களும் குவார்க், குளுவான்களால் ஆனவை என்கிறது இயற்பியல். குவார்க்குகள்தான் அடிப்படைத் துகள்களா, அல்லது அவை அதனினும் நுண்ணிய வேறொன்றினால் ஆனவையா? இந்தத் துகள்களுக்குப் பொருண்மையையும், கனத்தையும் (Mass and Weight) வழங்கியது எது? என்ற கேள்விகளுக்கும் விஞ்ஞானிகள் விடை தேடி வருகின்றார்கள்.
புரோட்டான் உள்ளிட்ட துகள்களுக்கு வேறொரு துகள்தான் பொருண்மையை அளித்திருக்க வேண்டும் என்பது இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் என்பவர் 40 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட கணிப்பு. இனிமேல்தான் கண்டுபிடிக்கப்பட வேண்டிய அந்தத் துகள் அவருடைய பெயரால் ‘ஹிக்ஸ் துகள்’ என்று அழைக்கப்படுகிறது. நாம் காணும் இந்த உலகத்திற்கு இந்த ஹிக்ஸ் துகள் பொருண்மையை (Mass) வழங்கியிருக்கக்கூடும் என்பதால் அதனை ‘கடவுள் துகள்’ (God Particle) என்றும் வேடிக்கையாக அழைக்கிறார்கள் விஞ்ஞானிகள். தற்போது நடைபெற்றுவரும் ஆய்வு அந்த கடவுள் துகளைக் கண்டறிய விழைகிறது.
களிமண்ணை உருட்டினால் கடவுள்!
கடவுளை உருட்டுகிறார்கள் விஞ்ஞானிகள்!
‘ஆற்றலும் பருப்பொருளும் ஒன்றின் இரு வடிவங்களே’ என்ற ஐன்ஸ்டினின் கோட்பாட்டின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெறுகிறது. புரோட்டான் துகள்கள் இந்த 20 கி.மீ நீளக் குழாய்க்குள் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் மோதவிடப்படுகின்றன. இவ்வாறு மோதும்போது உருவாகக் கூடிய வரம்பற்ற ஆற்றலும், வெப்பமும் குளிரும், பிரபஞ்சம் தோன்றிய அந்தத் தருணத்திற்குப் பின் நாம் எப்போதும் காணாதவை. நம் பிரபஞ்சத்தின் விதிகளை எழுதிய துகள்களும் இந்த மோதுகையின் விளைவாக (Collision) வெளிப்படக் கூடும். அத்துகள்களில் பல நாம் இதுவரை கண்டறியாதவையாக இருக்கக் கூடும். பல கோடி முறை நிகழவிருக்கும் இந்த மோதுகைகளில் ஏதேனும் ஒன்று அந்தக் ‘கடவுள் துகளை’த் தோற்றுவிக்கவும் கூடும். ஆயின், “இந்த உலகம் என்பது என்ன, நாம் ஏன் இங்கு வந்தோம்?” என்று தத்துவஞானிகள் பலர் எழுப்பிய கேள்விக்கான விடையை, அதாவது ‘பிரம்ம ரகசியத்தை’க் கண்டறிந்து விட முடியும்.
ஒருவேளை தோற்றுவிட்டால்? “40 ஆண்டுகளுக்கு முன் ஊகிக்கப்பட்ட ஒரு துகளைக் கண்டறிவதைக் காட்டிலும் எங்களைப் போன்ற விஞ்ஞானிகளுக்கு தோல்விதான் சுவையானதாக இருக்கும். எறும்புக் கூட்டத்திலிருந்து மனிதர்களாகிய நம்மைப் பிரிப்பது எது? அறிவுத் தேட்டம்தானே!” என்கிறார்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள்.
“எறும்பையும் மனிதனையும் கடவுள்தான் படைத்தான்” என்று கூறும் மதவாதிகளோ, கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல், ‘அவிசுவாசிகள்’ உருவாக்கிய கணினியின் வழியே, ‘தேவனாகப்பட்டவன் களிமண்ணை உருட்டி ஆதாமைப் படைத்த செய்தி’யையும், இத்தகைய சோதனைகளால் தேவன் படைத்த உலகம் அழிந்து போகக்கூடிய அபாயத்தையும் இணையத்தில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
சித்தத்தினுள்ளே சதாசிவம் எங்கே?
வளி மண்டலத்திலிருந்து கடவுளை விரட்டும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்று விட்டாலும், மனிதனின் நரம்பு மண்டலத்திலிருந்து கடவுள் தானாக வெளியேறிவிடப் போவதில்லை. பக்தர்களின் மூளையில் எந்த இடத்தில் கடவுள் குடியிருக்கிறார்? மூளையின் எந்தப் பகுதி நரம்புகள் தூண்டப்படும்போது அவர்களின் கண் முன்னே கடவுள் ‘காட்சி’ தருகிறார் அல்லது இயேசு அவர்களுக்குள் ‘இறங்குகிறார்’ ? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டு வருகின்றது நரம்பயல் மருத்துவம்.
“மனிதனின் பேசும் திறன், கேட்கும் திறன், மற்றும் நினைவாற்றலைக் கட்டுப்படுத்துகின்ற மூளையின் ‘டெம்பரல் லோப்’ என்ற பகுதி, காதுகளின் அருகே அமைந்திருக்கிறது. மூளையின் இந்தப் பகுதி வலிப்பு நோயால் பாதிக்கப்படும் போதோ அல்லது ஏறுக்கு மாறாக செயல்படும்போதோ சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விசித்திரமான ‘ஆன்மீக அனுபவங்கள்’ ஏற்படுகின்றன” என்கிறார் கனடா நாட்டின் நரம்பியல் விஞ்ஞானி டாக்டர் பெர்சிங்கர்.
இந்த வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ருடி அபால்டர் என்ற நாத்திகர், உயிரோடு இருக்கும்போதே தான் இறந்துவிட்டது போன்ற நினைப்புக்கு ஆளானார். இன்னொரு நோயாளியான வென் திகே என்ற கிறித்தவப் பெண்ணோ, ‘தான் ஏசுவைப் பெற்றெடுத்திருப்பதாக’க் கூறினாள். மோசஸ், புனித பால் முதலானோர் ‘கண்ட’ காட்சிகளாக விவிலியத்தில் கூறப்படுபவை, வென் திகேயின் ‘அனுபவத்தை’ ஒத்திருப்பதால், இறைத்தூதர்கள் தீர்க்கதரிசிகள் என்று கூறப்படுவோர் இந்த மூளை வலிப்பினால் பாதிக்கப் பட்டவர்களாக இருக்கக் கூடும் என்கிறார் பெர்சிங்கர்.
“செவன்த் டே அட்வன்டிஸ்ட் பிரிவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான எல்லன் ஒயிட் என்ற பெண்ணுக்கு (1836 இல்) 9 வது வயதில் மண்டையில் அடிபட்டு, மூளையில் காயம் ஏற்பட்டது. இதற்கு ஆதாரமும் உள்ளது. இதன் பிறகுதான் ‘ஏசு அவர் முன் ‘தோன்றத்’ தொடங்கினார்” என்கிறார் நரம்பியல் விஞ்ஞானி கிரகரி ஹோம்ஸ். மண்டையில் குறிப்பிட்ட இடத்தில் தாக்கப்படுபவர்களுக்கு மட்டும்தான் இத்தகைய ‘இறையருள்’ கிட்டும் என்பதில்லை. தொடர்ந்து ஆன்மீக சிந்தனையால் தாக்கப்படுபவர்களுக்கும் இத்தகைய ‘உள்காயம்’ ஏற்படக்கூடும்.
“இந்த வலிப்பு தோற்றுவிக்கும் மின் அதிர்வுகள் ‘டெம்பரல் லோப்’ என்ற பகுதிக்கும், உணர்ச்சியையும் உணர்ச்சி சார் நினைவுகளையும் ஆளுகின்ற மூளையின் பகுதிகளுக்கும் உள்ள இணைப்புகளை வலுப்படுத்துவதால், மத உணர்வுகள் பொங்குகின்றன” என்கிறார் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி, விலயனூர் ராமச்சந்திரன்.
“ஒருவேளை மூளையில் கடவுள் ‘குடியிருக்கும்’ இந்தப் பகுதியை (God Spot) அறுத்து அகற்றுவோமாகில், அந்த அறுவை சிகிச்சைக்கு என்ன பெயரிடலாம்? அதனை காடோக்டமி (வாசக்டமி போல) என்று அழைக்கலாமா?” என இரு மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் வேடிக்கையாக அவர் குறிப்பிட்டார். இதையெல்லாம் சகித்துக்கொண்டு சும்மாயிருப்பார்களா மதவாதிகள்? இப்படிப்பட்ட ஆய்வுகள் தங்களது மத உணர்வைப் புண்படுத்துவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த கிறித்தவ அமைப்புகள் கூக்குரல் எழுப்பின. “கடவுளை விரைவாகத் தொடர்பு கொள்வதற்கான ஆன்டனாவாக எங்களுடைய கண்டுபிடிப்புகளை நீங்கள் ஏன் கருதக்கூடாது?” என்று அவர்களை ‘சமாதானப்படுத்தினார்’ ராமச்சந்திரன். அப்படியொரு ‘ஆன்மீக ஆன்டனா’வை டாக்டர் பெர்சிங்கர் தயாரித்தும் விட்டார்.
கோவில் கனெக்சன் இல்லாமலேயே
கடவுளை ஒளிபரப்பும் ஆன்டனா!

காட் ஹெல்மெட் கடவுள் தலைக்கவசம்! இதுதான் அவரது தயாரிப்பின் பெயர். மின்சாரத்தில் இயங்கும் இந்தக் கவசம், இதனை அணிந்திருப்பவரின் மூளையில் உள்ள டெம்பரல் லோப் பகுதியைக் குறி வைத்து காந்தப்புலங்களை உருவாக்க வல்லது. எவ்வித நரம்பியல் நோயும் இல்லாத நூற்றுக்கணக்கான மனிதர்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு தனியறையில் இந்தக் ‘கவச’ சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பல்வேறு நாடுகளையும் மதங்களையும் சார்ந்த அந்த நபர்கள் இந்த மூன்று நிமிடச் சோதனையின்போது தத்தம் கலாச்சாரத்துக்கு ஏற்ப, தாங்கள் ஏசுவையோ புத்தனையோ கண்டதாகக் கூறினர்.
டேவிட்சன் என்ற விஞ்ஞானி, கிறித்தவ ஜெபக்கூட்டங்களில், ஜெபித்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென்று உளறத் தொடங்கும் பெண்களின் மூளைகளை ஸ்கேன் (MRI Scan) செய்தார். அத்தருணத்தில் அவர்களது மூளையுடைய முன்பகுதி ஏறத்தாழ செயலிழந்திருப்பதைக் கண்டார். தன் மீதான சுயகட்டுப்பாட்டை மனிதனுக்கு வழங்கும் மூளையின் முன்பகுதி செயலிழப்பதால், மொழி பிறழ்ந்து வரும் இந்த உளறலைத்தான், ‘அந்நிய பாஷை’ என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர்.
தியானத்தில் ஈடுபடும்போது, ‘தான்’ என்ற உணர்வு மறைந்து பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலந்து விடுவதாகக் கூறும் புத்த பிக்குகளும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டனர். ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சிந்தனையின் மீது மட்டுமே மூளை ஒன்று குவிக்கப்படும்போது, திசை மற்றும் வெளி குறித்த பிரக்ஞையை வழங்குகின்ற ‘பாரிடல் லோப்’ செயலிழப்பதையும், அதன் காரணமாகவே இவர்கள் இத்தகைய பிரமைக்கு ஆளாவதையும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டினர்.
இவையன்றி, பட்டினி கிடத்தல் (விரதம்), இரத்தச் சர்க்கரையின் அளவு அலைபாய்தல், திரும்பத் திரும்ப ஒரே சொல்லை உச்சரிக்கும் மந்திர உச்சாடனங்கள், ஒரே விதமான அசைவு கொண்ட நடனம் ஆகியவையும் ‘அமானுஷ்யமானவை’ என்று சொல்லப்படும் அனுபவத்தைத் தரவல்லவை. மிக உயர்ந்த சிகரங்களுக்கு (அமர்நாத்) செல்லும்போது மூளைக்கு பிராணவாயு செல்வது குறைவதும், கஞ்சாவும், வேகமாகப் பக்கவாட்டில் சுழலும் குடைராட்டினமும் கூட ‘ஆன்மீக அனுபவங்களை’த் தூண்டக்கூடும் என்கிறது நரம்பியல் விஞ்ஞானம்.
மூளையின் உட்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியிலிருந்து வெளியாகும் டைமெதில் டிரிப்டாமைன் என்ற வேதிப்பொருள்தான் இது போன்ற மாயத்தோற்றங்களை உருவாக்குகிறது என்று ‘ஆன்மீக மூலக்கூறு’ என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார் ரிக் ஸ்டிராஸ்மேன். மொத்தத்தில் பக்தர்கள் துரும்பில் தேடிய இறைவனை நரம்பில் கண்டுபிடித்ததுடன், ‘இறை நரம்பியல்’ (Neuro Theology) என்றொரு துறையையும் உருவாக்கிவிட்டது அறிவியல்.
எனினும், தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூக்கத்தை வரவழைப்பது போல கடவுள் மாத்திரை சாப்பிட்டுக் கடவுளை வரவழைக்கலாம் என்றோ, பேதி மாத்திரை போன்றதொரு மாத்திரையால் மூளையிலிருந்து சுமுகமாகக் கடவுளை வெளியேற்றி விடலாம் என்றோ அறிவியல் கூறவில்லை. “மனித மூளையின் உள்ளே தோன்றும் மாயத்தோற்றங்களோ, விவரிக்கமுடியாத ‘பரவச உணர்வுகளோ’, வெளியே கடவுள் என்பவர் இருப்பதற்கான ஆதாரமாக முடியாது” என்பதையே இந்த ஆய்வுகள் நிறுவுகின்றன.
ஏசு இறங்கினாரா?
எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வழங்கும் தேவ சாட்சியம்!
மதம் என்பது ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் சிந்தனைக்கான காரணத்தையும் அதற்கான சமூக அடிப்படைகளையும் நரம்பியல் ஆராயவில்லை; ஆராயவும் முடியாது. மாறாக, அந்த நம்பிக்கை தோற்றுவிக்கும் உணர்வை, நமது நரம்பு மண்டலம் உயிர் வேதியல் மொழியில் எவ்வாறு மொழிபெயர்த்துள்ளது என்பதை, அதாவது மத உணர்வின் பொருள் வடிவத்தைக் கண்டறியவே நரம்பியல் முயல்கின்றது.
பெர்சிங்கரின் ஹெல்மெட்டால் நாத்திகரின் மூளையில் கடவுள் நம்பிக்கையை வரவழைக்க முடியாது; ஆத்திகரின் மூளையிலிருந்து நம்பிக்கையை அகற்றவும் முடியாது. அவருடைய ஹெல்மெட் சோதனையில் பங்கேற்ற ஒரு கன்னியாஸ்திரீ, “ஏசு எனக்குள் இறங்கினாரா டாக்டர்? ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்து கொஞ்சம் சொல்லுங்களேன்” என்று சோதனை முடிந்தபின் பெர்சிங்கரிடம் கேட்டாராம். இறை நம்பிக்கையை ஒழிக்கும் என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு, அதற்கு நேரெதிரான விளைவை அந்த கன்னியாஸ்திரீயிடம் ஏற்படுத்தியிருக்கின்றது.
பொருளும் சிந்தனையும்:
புரட்சி எனும் ஹைட்ரான் கொலைடர்!

இயற்பியல் கடவுள் துகளைக் கண்டறிந்தாலும், மத உணர்வின் உயிர் வேதியல் சங்கேதங்களை நரம்பியல் கண்டுபிடித்தாலும் இவற்றின் விளைவாகவெல்லாம் மத நம்பிக்கை தானே ஒழிந்து விடாது. மதம் என்ற அபினை மனித மூளைக்குள் உற்பத்தி செய்யும் அடித்தளம் சமூகத்தில் இருப்பதால், ஒரு சமூகப் புரட்சியின் மூலம் மட்டுமே மனித மூளையிலிருந்து ‘கடவுளை’ அகற்ற முடியும் என்றார் மாமேதை மார்க்ஸ். அத்தகையதொரு புரட்சியை சாதிக்கும் பொருட்டு, மனித சமூகம் எனும் சோதனைச்சாலையில் நடத்த வேண்டியிருக்கும் ஆய்வும், மனிதர்களின் சிந்தனையை மாற்றியமைக்கும் இந்தச் ‘சோதனையும்’ ஒப்பீட்டளவில் கடினமானவை.
உலக முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு மென்மேலும் ஆட்படுத்தப்படும் மக்கள், அந்தத் துயரத்திலிருந்து விடுபடவும் முடியாமல், காரணமும் விளங்காமல், கடவுளிடமும் மதத்திடமும் சரணடைகிறார்கள். இந்தச் சுரண்டலால் ஆதாயமடையும் ஆளும் வர்க்கமோ மக்களை இந்த மடமைப் படுகுழியில் ஆழ அமிழ்த்துகிறது.
எந்த மேலை நாடுகளில் நடைபெறும் அறிவியல் ஆய்வுகள் கடவுளைத் துரத்துகின்றனவோ, அதே அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் கடவுள் அரியணையில் ஏற்றப்படுகின்றார். அமெரிக்காவின் 5 மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு விவிலியம் கற்பிக்கப்படுகிறது. மதச்சார்பற்ற நாட்டில் பள்ளிகளில் மதக்கல்வி அளிக்க சட்டரீதியான தடை இருப்பதால், ‘கல்விச் சுதந்திரம்’ என்ற பெயரில் அறிவியல் வகுப்புக்குள் விவிலியம் நுழைக்கப்பட்டு விட்டது.
‘டார்வினின் பரிணாமக் கோட்பாட்டுடன் விவிலியத்தின் படைப்புக் கோட்பாட்டையும் கற்பிக்க வேண்டும்’ என்பதை ஒரு இயக்கமாகவே நடத்திவர், புஷ் கட்சியின் சார்பில் தற்போது குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சாரா பாலின். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கிறித்தவ தீவிரவாதக் குழுக்கள், கோடிக்கணக்கில் டாலரை இறைத்து ஐரோப்பிய நாடுகளின் பள்ளிகளிலும் ஏசுவை இறக்கி வருகின்றன.
பரிணாமக் கோட்பாட்டை உருவாக்கிய சார்லஸ் டார்வின் பணியாற்றிய இடமும், உலகின் புகழ் பெற்ற அறிவியல் மையமுமான, பிரிட்டிஷ் ராயல் சொசைட்டி என்ற நிறுவனமே பள்ளிகளின் அறிவியல் வகுப்புகளில் பைபிளின் படைப்புக் கோட்பாட்டைச் சேர்ப்பதற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றது (தி இந்து, செப், 18).
விவிலியக் கோட்பாடே அறிவியல் பூர்வமானது என்று சித்தரித்து, டார்வினைக் கேவலப்படுத்தும் குறுந்தகடுகளை இலட்சக்கணக்கில் இங்கிலாந்தின் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கின்றன அமெரிக்க இவான்ஜெலிகல் குழுக்கள். “குரங்குக்கும் மனிதனுக்கும் மூதாதை ஒன்று என்றால் மிச்சமுள்ள குரங்கெல்லாம் இன்னும் ஏன் மனிதனாகவில்லை?” என்று 1860 ஆம் ஆண்டில் டார்வினுக்கு எதிராக மூடப்பாதிரிகள் எழுப்பிய அதே நைந்துபோன கேள்வியை மீண்டும் எழுப்புகின்றன இந்தக் குறுந்தகடுகள். ஒவ்வொரு பள்ளியாகச் சென்று பைபிளுக்குப் பலியான மாணவர்கள் மத்தியில் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், பிரிட்டனின் புகழ் பெற்ற பகுத்தறிவாளருமான ரிச்சர்டு டாகின்ஸ்.
“அடுத்தது என்ன, உயிரியல் வகுப்பில் ஆதாமின் விலா எலும்பை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமா?” என்று குமுறியிருக்கிறார் ஒரு அறிவியலாளர். இல்லை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விலா எலும்பை முறிக்க வேண்டும். அதுதான் டார்வினுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி. அறிவியல் பார்வை வளர்வதற்கும் கூட அதுதான் வழி.

பின்லேடன் இருப்பும், மரணமும் யாருக்காக?

பின்லேடன் இருப்பும், மரணமும் யாருக்காக?

மே 2-ம் தேதி. அதிகாலை நேரம். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து இரண்டு மணிநேர பயண தூரத்தில் உள்ள அபோதாபாத் நகரத்தில் இருக்கும் காக்கூல் இராணுவ பயிற்சி மையத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் அந்த பெரிய கட்டிடத்தை நான்கு உலங்கு வானூர்தியில் வந்த 79 அமெரிக்க சீல்(seals) படையினர் தாக்குகின்றனர். நாற்பது நிமிடங்கள் நீடித்ததாகச் சொல்லப்படும் அந்த சண்டையின் இறுதியில் தமது இலக்கைத் தாக்கியழித்து விட்டு அமெரிக்க வீரர்கள் ‘வெற்றியுடன்’ திரும்புகின்றனர்.
அதற்குச் சற்று நேரத்தில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்திக்கும் பாரக் ஒபாமா, அமெரிக்கர்களுக்கு நீதி கிடைத்து விட்டது என்கிறார். கடந்த பத்து ஆண்டுகளாக வலை வீசித் தேடி வந்த உலகின் நம்பர் ஒன் தீவிரவாதியான ஒசாமா பின்லேடனை அமெரிக்க வீரர்கள் அபோதாபாத்தில் நடந்த சண்டையில் கொன்று விட்டனர் என்று தெரிவிக்கிறார். அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் கொன்ற பயங்கரவாதிக்கான நீதியை வழங்கி விட்டதாகவும், ஆனாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான தமது போர் தொடரும் என்றும் அறிவிக்கிறார்.
அதைத் தொடர்ந்து இந்த விசயம் உலகெங்கும் உள்ள ஊடகங்களில் ஒரு பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. உலகத்தின் நாகரீக சமூகத்திற்கே ஆகப் பெரிய சவாலாக விளங்கிய படுபயங்கரமான தீவிரவாதி கொல்லப்பட்டதை உலகெங்கிலுமுள்ள முதலாளித்துவ ஊடகங்கள் கொண்டாடின. ஆனால், இவர்களுக்கும் முன்னதாக இந்த ‘நரகாசுரவதத்தைக்’ கொண்டாடத் துவங்கியது அமெரிக்கர்கள் தான். செய்தி வெளியானதும் வெள்ளை மாளிகையைச் சூழ்ந்து கொண்ட நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் ஆடிப் பாடி மகிழ்ந்துள்ளனர். தேசிய வெறி முழக்கங்களைத் தெரிவித்து மகிழ்ந்துள்ளனர்.
இன்னொரு பக்கம் பாகிஸ்தானில் திரளான மக்கள் ஒசாமா கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்க எதிர்ப்புப் பேரணிகளை நடத்தியுள்ளனர். புனிதப் போராளியான ஒசாமா பின்லேடனுக்கு சொர்கத்தில் இடம் நிச்சயம் என்று சொல்கின்றனர். வசதியான வீட்டுப் பிள்ளையான ஒசாமா, இசுலாத்தையும் இசுலாமியர்களையும் காப்பதற்காகவே தனது சுகவாழ்க்கையைத் தியாகம் செய்து காடு மலையெல்லாம் அலைந்து திரிந்தார் என்று இவர்கள் நம்புகிறார்கள். அமெரிக்கா என்றாலே இசுலாமிய எதிர்ப்பு என்பது பட்டவர்த்தனமாக நடந்து வரும் வேளையில் ஒரு சராசரி முசுலீம் கூட பின்லேடன் கொல்லப்பட்டது குறித்து வருந்துவார் என்பதில் ஆச்சரியமில்லை. அதைத் தவறாக எண்ணவேண்டிய அவசியமும் இல்லை.
பொதுவில் அமெரிக்காவின் இந்த சாகச நடவடிக்கையைப் போற்றிப் புகழும் ஊடகங்களை விடுத்துப் பார்த்தால், வெகு சில அமெரிக்க எதிர்ப்பு ஊடகங்களிலோ இது மொத்தமும் பெரிய மோசடியென்கிறார்கள். ஒசாமா பின்லேடன் ஏற்கனவே மரணமடைந்து விட்டாரென்றும், இப்போது அமெரிக்கா சொல்வதே பச்சையான பொய் என்றும் சொல்கின்றனர். சர்வதேசப் பெருமந்தம் என்கிற பெரும்  பொருளாதாரப் புதைகுழியிலும் ஆப்கான் போர் என்கிற இராணுவரீதியிலான புதைகுழியிலும் மீளமுடியாமல் சிக்கியிருக்கும் அமெரிக்கா, அதிலிருந்து  மக்களின் கவனத்தை திசை திருப்பவே இப்படி ஒரு நாடகத்தை நடத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இவர்களில் சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், எதிர்வரும் தேர்தலுக்குள் சரிந்து போன தனது செல்வாக்கை நிமிர்த்தும் முகமாகவே பராக் ஒபாமா இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் என்று சொல்கிறார்கள். ஒசாமா பின்லேடனை அமெரிக்கத் தயாரிப்பு என்று ஒப்புக் கொள்ளும் சிலரும் கூட, அவரால் அமெரிக்கா படுபயங்கரமான பாதிப்புக்குள்ளாகி விட்டதைப் போன்றும், அவர் அமெரிக்காவுக்கு தீர்க்க முடியாத ஒரு பெரும் சவாலாக விளங்கினார் என்றும் இப்போது படாதபாடெல்லாம் பட்டு அமெரிக்கா அவரைத் தீர்த்துக் கட்டியிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
இந்த அம்சங்களை நாம் தனித்தனியே பிரித்துப் பார்த்து பொருள் கொள்ள முடியாது. ஒசாமா யாருக்காக வாழ்ந்தார் என்பதைப் புரிந்து கொள்வதில் இருந்து தான் அவர் யாருக்காக செத்தார் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். யாருக்காக செத்தார் என்பதை விளங்கிக் கொள்ளும் போது தான் எதற்காகச் சாக வேண்டும் என்பது தெரியவரும். இந்தப் பரிசீலனைகளின் நீட்சியாக எப்போது செத்தார் என்கிற ஆராய்ச்சியின் தேவையும் தேவையின்மையும் அதன் மெய்யான பொருளில் நமக்கு விளங்கும்.

ஒசாமா இறந்தாலும் ஆயிரம் பொன், இருந்தாலும் ஆயிரம் பொன்!

ஒப்பீட்டளவில் ஒசாமாவைக் காட்டிலும் உள்நாட்டு மக்களிடையே ஓரளவு செல்வாக்கு பெற்றிருந்த சதாம் உசேன் பிடிபட்டதையும், விசாரணை என்கிற பெயரில் அவர் அவமானப்படுத்தப்பட்டதையும், பின்னர் அவர் அநீதியான முறையில் கொல்லப்பட்டதையும் வீடியோக்களாக ‘கசிய’ விட்டு ஈராக்கியர்களிடையே பயபீதியை ஏற்படுத்திய அமெரிக்கா, ஒசாமா கொல்லப்பட்டதும் அவரது உடலை வெளியே காட்டாமல் அவசர அவசரமாக கடலில் வீசியெறிந்து விட்டதாகச் சொல்கிறது.
ஒசாமாவைக் கொல்வதற்காக நடத்தப்பட்ட ஆப்பரேஷன் ஜெரோனிமா பற்றிய தகவல்களைக் கூட அமெரிக்க சி.ஐ.ஏவின் உயரதிகாரிகளும் வெள்ளை மாளிகளை அதிகாரிகளும் முன்னுக்குப் பின் முரணாகத் தான் சொல்லி வருகிறார்கள். ஒசாமாவோடு அவரது மனைவியும் மகனும் கொல்லப்பட்டார்கள் என்று ஆரம்பத்தில் சொன்னார்கள் – பின்னர் இல்லையில்லை அது அவரது கூட்டாளியின் மனைவியும் மகனும்  என்று மாற்றினார்கள். அடுத்து, ஒசாமாவே துப்பாக்கியை தூக்கிக் கொண்டு சண்டையிட்டார் என்றார்கள். ஒசாமாவின் உடல் நலிவைப் பற்றி ஊடகங்கள் எழுதத் துவங்கிய பின் இல்லையில்லை அவர் கைது நடவடிக்கையை எதிர்க்கும் விதமான செய்கைகளைச் செய்தார், எனவே தற்காப்புக்காக கொன்றோம் என்கிறார்கள்.
இப்படி மாற்றி மாற்றி அமெரிக்கர்கள் உளறிக் கொட்டுவதைச் சுட்டிக் காட்டும் சிலர், இது மொத்தமுமே ஒரு நாடகம் என்கிறார்கள். ஒசாமா 2001 டிசம்பரிலேயே கொல்லப்பட்டு விட்டதாகவும், தமது ‘தீவிரவாதத்துக்கு எதிரான’  போருக்கு மக்களிடையே ஒரு ஆதரவு தளத்தை உண்டாக்கவும், ஒசாமாவை மோசமான எதிரியாகச் சித்தரித்து அமெரிக்கர்களிடையே போருக்கு ஆதரவானதொரு பொதுக் கருத்தை காட்டமைக்கவே இத்தனை நாளும் அதை மறைத்தார்கள் என்று இவர்கள் கருதுகிறார்கள்.
இரட்டை கோபுரத் தகர்ப்புக்குப் பின் பகிரங்கமாக ஒசாமா வெளியே தலைகாட்டாமல் இருந்ததையும் அதன் பின் வெகு சில சந்தர்பங்களில் வெளியான அவரது வீடியோக்களின் நம்பகத்தன்மை சுயேச்சையான ஆய்வுகளில் (ஃபோரன்சிக் ஆய்வு) கேள்விக்குள்ளாக்கப் பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டும் இவர்கள், இப்போது ஆப்கானில் இருந்து வெளியேற முடியாமல் அமெரிக்கா தவிப்பதாகவும், போருக்கான செலவினங்கள் அதிகரித்து அமெரிக்கப் பொருளாதாரத்தின் கழுத்தை நெறிப்பதாகவும், இதனால் ஆப்கான் போரை ஒரு கவுரவமான வெற்றியாக சித்தரிக்கும் முகமாகவே இப்போது ஒசாமா கொல்லப்பட்ட நாடகம் நடத்தப்படுவதாகச் சொல்கிறார்கள். இது இன்னொரு பக்கத்தில் ஒபாமாவின் சரிந்து போன செல்வாக்கை உயர்த்தவும் பயன்பட்டுள்ளது என்றும் சொல்கிறார்கள்.
மேற்கண்ட வாதங்கள் முழுமையும் பொய் என்று ஒதுக்கிவிட முடியாது. ஆனால், ஒரு அடிப்படையான அம்சத்தை இவர்கள் காணத் தவறுகிறார்கள். போரிலிருந்து பின்வாங்குவது தான் அமெரிக்காவின் நோக்கம் என்றால், இப்போது லிபியாவின் மேல் ஏன் போர் தொடங்க வேண்டும்? அடுத்து சிரியாவின் மேல் ஏன் குறிவைக்க வேண்டும்? நிதர்சனம் என்னவென்றால், ஏகாதிபத்தியம் போர்களில் இருந்து விலகுவதன் மூலம் தனது நெருக்கடிகளைத் தீர்த்துக் கொள்ள விளைவதில்லை – அது மேலும் மேலும் போர்களில் ஈடுபடுவதன் மூலமே தனது நெருக்கடிக்கான தீர்வை அடைய விரும்புகிறது. அதுதான் ஏகாதிபத்தியங்கள் உயிர்வாழ்தலின் ரகசியம்.
அதே நேரம் ஒசாமா கொலை பற்றி அமெரிக்கர்கள் மாற்றி மாற்றி முரண்பட்ட தகவல்களை அளிப்பதையும், 2007-க்குப் பிறகு ஒசாமா வீடியோ / ஆடியோ உள்ளிட்ட எந்த ரூபத்திலும் தலைகாட்டாத எதார்த்த உண்மையையும், இரட்டை கோபுரத் தகர்ப்பிற்குப் பின் நடந்ததாகச் சொல்லப்படும் ‘இசுலாமிய தீவிரவாத’ தாக்குதல்கள் எதையும் ஒசாமாவின் நேரடிக் கட்டளையின் பேரில் நடக்கவில்லை என்று ஏகாதிபத்தியவாதிகளே சொல்வதையும் நாம் கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது.
ஆக, உண்மை என்பது இந்த இரண்டுக்கும் இடையில் தான் இருக்கிறது.
ஒசாமா 2001-ல் இறந்தாரா – இல்லை 2011-ல் இறந்தாரா என்பதைப் பற்றிய பரிசீலனைக்குள் போவதற்கு முன், ஒசாமா பின்லேடன் என்கிற பெயர், அதைச் சுற்றி கவனமாக கட்டப்பட்ட பிம்பம், அந்த பிம்பத்தைப் பற்றி அமெரிக்க மற்றும் உலக மக்களின் பொதுக்கருத்தில் முதலாளித்துவ ஊடகங்களால் தொடர்ச்சியாகத் திணிக்கப்பட்ட பயபீதி, இந்த பயபீதியினால் ஏற்பட்ட விளைவுகள் என்ன – அது யாருடைய நலனுக்கு சேவை புரிந்துள்ளது என்பதைக் குறித்து நாம் புரிந்து கொண்டால் தான் முந்தைய கேள்விக்கான பதில் நமக்கு விளங்கும்.
அமெரிக்க அரசின் இயக்கமும் அதன் செயல்பாடுகளும் – அந்தச் செயல்பாடுகளினால் விளையும் நன்மைகளும் முழுக்க முழுக்க பன்னாட்டு முதலாளிகளின் நலன் சார்ந்த ஒன்று. போர் என்பதை நாம் எப்படிப் பார்க்கிறோம்? போர் என்றால் அப்பாவி மக்கள் சாவார்கள். ஒன்றுமறியாத குழந்தைகள் அநியாயமாகச் சாவார்கள். போர் என்றால் ஒரு சமூகத்தின் சர்வநாசம். அதன் சமூகப் பொருளாதாரக் கட்டமைவின் பேரழிவு. இப்படித்தான் போரைப் பற்றி ஓரளவுக்கு விவரம் புரிந்தவர்கள் கூடப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். சரிதானே?
ஆனால், முதலாளிகளைப் பொருத்தளவில் போர் என்பது ஒரு அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம். போர் என்றால் ஆயுத விற்பனை – ஆயுத வியாபாரிகள் கொழிப்பார்கள். போரின் அழிவு என்றால் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு – கட்டுமானக் கம்பெனிகளின் கொழிப்பு. போரின் இறுதியில் தோற்றுப் போகும் நாட்டின் வளங்களின் மறுபங்கீடு. தமது பொருட்களுக்கான சந்தை. இதையெல்லாம் கடந்து வெல்லப்பட்ட நாட்டின் மீது வென்ற நாட்டின் மேலாதிக்கம்.
ஒசாமா பின்லேடன் என்று ஒருவர் இல்லாமல் போய் – இரட்டை கோபுரம் தகர்க்கப்படாமல் இருந்திருந்தாலும் கூட ஆப்கான் போர் என்பது சர்வ நிச்சயமாய் நடந்திருக்கும். அதற்கு இரட்டை கோபுரத் தகர்ப்பு என்பதையும் மனிதகுலத்துக்கே சவால் விடுக்கும் ‘படுபயங்கர’ சாத்தானாகச் சித்தரிக்கப்படும் ஒசாமா பின்லேடனையும் கடந்து பல்வேறு தேவைகளும் காரணங்களும் அமெரிக்காவிடம் இருந்தன. அந்தக் காரணங்கள் என்னவென்பதைப் பற்றி நாம் விரிவாக விளக்கும் முன்,  ஈராக் போருக்கான முக்கியமான காரணமாக அமெரிக்காவால் சொல்லப்பட்ட பேரழிவிற்கான ஆயுதங்கள் என்பது ஒருபோதும் ஈராக்கில் கண்டெடுக்கப்பட்டதில்லை என்பதை நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும்.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆப்கானும், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பும், அல்-காய்தா, தாலிபான் உருவாக்கமும்: ஒரு சுருக்கமான வரலாறு!

சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பு நாடுகளாயிருந்த மத்திய ஆசிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் நிலங்களின் அடியில் அள்ள அள்ளக் குறையாத இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. உஸ்பெகிஸ்தானில் கொட்டிக் கிடக்கும் தங்கம், தஜிகிஸ்தானில் புதைந்து கிடக்கும் ஏராளமான வெள்ளி, கஜாக்கிஸ்தானின் யுரேனிய இருப்பு ஆகிவற்றைக் கடந்து, இந்நாடுகளின் நிலத்தினடியில் ஏராளமான இயற்கை எரிவாயு ரிசர்வும் உள்ளது. கஜாக்ஸ்தான், துர்க்மெனிஸ்தான், அசர்பெய்ஜான் ஆகிய நாடுகளில் மட்டும் சுமார் 6.6 டிரில்லியன் கன மீட்டர் எரிவாயு நிலத்தினடியில் இருக்கிறது.
கிழக்கிலும் தெற்கிலும் பாகிஸ்தான், மேற்கே ஈரான், வடமேற்கே துர்க்மெனிஸ்தான், வடக்கே உஸ்பெக்கிஸ்தான் மற்றும் தாஜிகிஸ்தான், வட கிழக்கே சீனாவின் ஜின்சியாங் மாநிலம் ஆகியவற்றைத் தன் எல்லைகளாகக் கொண்டிருக்கும் ஆப்கான் போர்தந்திர ரீதியில் ஒரு புவியியல் கேந்திரமான இடத்தில் அமைந்துள்ளது. மத்திய ஆசியாவின் எரிவாயுவை ஐரோப்பியச் சந்தைக்குக் கடத்திச் செல்ல வேண்டுமானால் ஒன்று ஈரான் வழியே கொண்டு சென்றாக வேண்டும் அல்லது ஜார்ஜியா வழியே கொண்டு சென்றாக வேண்டும்.
ஈரான் அமெரிக்காவுக்குப் படியாத நாடு என்பதைக் கடந்து, ஈரான் வழியே துருக்கியை குழாய் மூலம் இணைப்பது என்பது துருக்கிக்கும் ஈரானுக்கும் பொருளாதாரத்தின் அடிப்படையில் வலுவானதொரு நட்புறவு தோன்றி விட அடிப்படையாய் அமைந்து விடும். ஈரானைத் தனிமைப்படுத்துவதைத் தனது அடிப்படையான மத்தியகிழக்குக் கொள்கையாகக் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு இது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்த கதையாகி விடும்.
ஜார்ஜியா வழியே குழாய் அமைக்கலாம் என்றால் அங்கே ஆயுந்தாங்கிய மாஃபியா கும்பலின் தொல்லை. அதுவுமின்றி ஜார்ஜியாவின் தெற்கு எல்லைப் பிராந்தியமான ஒஸ்ஸேடியாவை ரசியா சொந்தம் கொண்டாடுகிறது. இவ்விரு நாடுகளுக்குள்ளும் இருக்கும் எல்லைத் தகறாரின் காரணமாக ரசியா அவ்வப்போது ஜார்ஜியாவின் மேல் ராணுவத் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. ஜார்ஜியாவை நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் இணைப்பதையும் ரசியா எதிர்த்து வருகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் ரசியாவுக்கும் ஜார்ஜியாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சினையாகத் தோற்றமளித்தாலும், ஜார்ஜியாவின் ஊடாக மேற்கு நாடுகள் எண்ணைக் குழாய் அமைத்து விடக் கூடாது என்பதில் ரசியா குறிப்பாக இருப்பது புரியும்.
இவ்விரு பாதைகளும் அடைபட்டதும் அமெரிக்காவின் முன் இருக்கும் எஞ்சிய வாய்ப்பு ஆப்கான் – பாகிஸ்தான் – அரபிக்கடல் என்கிற குழாய்ப் பாதை தான். மேலும் இது  மேலே சொல்லப்பட்ட இரண்டு பாதைகளையும் விட குறைந்த செலவு பிடிக்கக் கூடியது. அரபிக்கடலில் இருந்து ஐரோப்பியச் சந்தைக்கும் இந்தியச் சந்தைக்கும் கப்பல் மூலம் எண்ணையை ஏற்றுமதி செய்வது சுலபம். இறுதியாக அமெரிக்காவின் போட்டியாளர்களாக உருவெடுத்து வரும் ரசியா, சீனா இரண்டு நாடுகளையும் கண்காணிப்பதற்கும், பயமுறுத்துவதற்கும், தேவையான இராணுவத் தளங்களை ஆப்கானில் வைத்திருப்பதும் முக்கியமானது.
ஆப்கானின் புவியியல் கேந்திர முக்கியத்துவத்தை உணர்ந்திருந்ததால் தான் பனிப்போர் காலத்திலேயே சமூக ஏகாதிபத்தியமாய் சீரழிந்திருந்த சோவியத்திற்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஆப்கானைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இந்தப் போட்டியில் எழுபதுகளின் இறுதியில் ரசியாவின் கை ஓங்கியிருந்தது. அப்போது அங்கிருந்து ரசியாவை விரட்ட அமெரிக்கா பெற்றெடுத்த சொந்தப் பிள்ளைகள் தான் தாலிபானும் அல்-காய்தாவும்.
நாத்திகர்களான கம்யூனிஸ்ட்டுகளை இசுலாமிய மண்ணான ஆப்கானில் இருந்து விரட்டுவதற்காகப் பல்வேறு இசுலாமிய நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் பாகிஸ்தானில் குவித்தது அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. அங்குள்ள மதரஸாக்களில் வைத்து அவர்களுக்கு சித்தாந்தப் பயிற்சியும் ஆயுதப் பயிற்சியும் அளித்தது பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. இதற்கு தேவையான நிதி உதவியை அமெரிக்க அடிமைகளான சவுதி ஷேக்குகள் அளித்தனர். இப்படியாகத் தான் அரபு நாடுகளில் கட்டுமானத் தொழிலின் மூலம் பெரும் செல்வம் ஈட்டி சவூதி அரச குடும்பத்துக்கு நிகரான பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒசாமா பின்லேடன் ஆப்கான் வந்திறங்கினார்.
பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒசாமாவே சுகவாழ்க்கையை விடுத்து நாத்திகர்களை எதிர்த்து ஜிஹாத்தில் குதித்துள்ளார் என்கிற பிரச்சாரம் ஏழை முசுலீம்களிடம் சிறப்பாக எடுபடும் என்பது அமெரிக்காவின் கணக்கு. அமெரிக்காவின் அந்தக் கணக்கு தப்பவில்லை; ஆனால், அவர்கள் கணக்குப் பண்ணிப் பார்க்க வேண்டும் எண்ணியிராத எதிர்பாராத ஒரு இலக்கிலிருந்து தான் அடுத்த தாக்குதல் இறங்கியது. கம்யூனிச ‘அபாயத்தைக்’ களையும் நோக்கத்திற்காகப் அமெரிக்கா பெற்றுப் போட்ட தாலிபானும், அல்-காய்தாவும் தமது பிறவி நோக்கத்தை செவ்வனே நிறைவேற்றினர். எண்பதுகளின் இறுதியில் சோவியத் படைகள் ஆப்கானில் இருந்து பின்வாங்கின.
அல்-காய்தாவுக்கும் ஆப்கான் போரில் பங்கேற்க முஜாஹிதீன்களைத் திரட்டவும் இசுலாமிய நாடுகளின் இளைஞர்களிடையே ஒரு பிரச்சார முழக்கமாக அமெரிக்கா முன்வைத்திருந்த சித்தாந்தமான இசுலாமிய சர்வதேசியம் பூமராங் போல் திருப்பித் தாக்கும் சந்தர்பமும் உடனடியாக வந்து சேர்ந்தது அமெரிக்காவே எதிர்பார்த்திராத ஒரு சுவாரசியமான திருப்பம். ஆப்கான் போர் முடிந்து சவூதி திரும்பிய பின்லேடனை ஈராக்கின் குவைத் ஆக்கிரமிப்பு எதிர்கொள்கிறது.
இவ்விவகாரத்தில் அமெரிக்கத் தலையீட்டை பின்லேடன் எதிர்க்கிறார். ஈராக்கை தனது அல் காய்தாவையும் முஜாஹித்தீன்களையும் வைத்தே எதிர்கொள்ளலாம் என்கிற பின்லேடனின் விருப்பம் நிராகரிக்கப்படுகிறது. மேலும் சவூதி அரசின் அமெரிக்க விசுவாசமும் சவூதியில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகளும், வரலாற்று ரீதியிலான யூத இசுலாமிய முரண்பாடுகளின் பின்னணியில் பின்லேடனுக்கு இருந்த இசுரேல் எதிர்ப்பும், அதற்கு எண்ணை வார்க்கும் இசுரேலின் பிராந்திய ரவுடித்தனமும், அந்த ரவுடித்தனத்தில் குளிர்காய்ந்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் தாதாத்தனமும் பின்லேடனுக்குள் ஆழமான அமெரிக்க எதிர்ப்புணர்வை  உண்டாக்குகிறது. இது பின்லேடனுக்குள் மட்டுமல்ல மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க அடிமை ஆட்சியாளர்களைத் தவிர்த்த இசுலாமிய மக்கள் அனைவருக்குள்ளும் உருவாகிறது.
என்னதான் அமெரிக்கத் தயாரிப்பாக இருந்தாலும் – அமெரிக்கப்  பாடதிட்டமான இசுலாமிய சர்வதேசியத்தைப் பயின்றிருந்தாலும் பின்லேடன் அதை உணர்வுப்பூர்வமாக பற்றி நின்றிருக்கிறார். இங்கே பின்லேடனிடம் வெளிப்படும் அமெரிக்க எதிர்ப்புணர்வும் பொதுவில் உலகெங்கும் உள்ள கம்யூனிஸ்டுகள் மற்றும் ஜனநாயக சக்திகளிடம் வெளிப்படும் அமெரிக்க எதிர்ப்புணர்வும் அடிப்படையிலேயே வேறு வேறானது. பின்லேடனிடமோ தாலிபானிடமோ வெளிப்படும் அமெரிக்க எதிர்ப்புணர்வு என்பது மக்கள் விடுதலை உரிமை என்கிற அடித்தளத்தின் மீது கட்டப்பட்டதல்ல – அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இடத்தில் இசுலாமை மாற்றீடு செய்ய வேண்டும் – இழந்த தமது மேண்மையை மீட்க வேண்டும் என்கிற நோக்கத்தின் மீது கட்டப்பட்டது. அரபுலகில் மக்களது ஜனநாயகம் தழைக்க வேண்டுமென்பது அல் காய்தாவின் கோரிக்கையல்ல. அங்கிருக்கும் ஆட்சியாளர்களைத் துறத்திவிட்டு தூய இசுலாமிய சர்வாதிகாரத்தை நிறுவுவதுதான் அவர்களது நோக்கம்.
அதன் பின் 1996-ல் ஆப்கான் திரும்பும் ஒசாமா, தாலிபான்களின் பராமரிப்பில் தனது அமெரிக்க எதிர்ப்புப் போருக்கு ஆயத்தமாகிறார். தாலிபானின் பச்சையான மனித உரிமை மீறல்கள் மற்றும் காட்டுமிராண்டித் தனமான சட்டங்களின் காரணமாக அமெரிக்காவால் ஆப்கான் அரசை வெளிப்படையாக அங்கீகரிக்க முடியா விட்டாலும் அமெரிக்க அடிவருடிகளான பாகிஸ்தானும் சவூதியும் ஆப்கானை அங்கீகரித்திருந்தன. இவர்கள் மூலம் அமெரிக்கா ஆப்கானுடன் தொடர்புகளைப் பேணிக் கொண்டிருந்தது. எண்ணை ஒப்பந்தங்களுக்காக தாலிபான்களின் பிரதிநிதிகள் அமெரிக்காவுக்கும் சென்றுள்ளனர்.
வெளிப்படையான அமெரிக்க எதிர்ப்பு மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான பின்லேடனின் போரை ஆரம்பத்தில் தாலிபான்கள் தங்கள் சொந்தப் பிரச்சினையாகக் கருதவில்லை. முல்லா ஓமர் 98-ன் மத்தி வரையில் பின்லேடனின் இந்த முடிவை எதிர்த்துள்ளதாக அவரை மூன்று முறை பேட்டி கண்ட பாக்கிஸ்தான் பத்திரிகையாளர் ரஹிமுல்லாஹ் யூஸுஃப்ஸாய் தெரிவிக்கிறார். ஆனால் இந்த முரண்பாடு ஓரளவுக்கு மேல் நீடிக்க முடியவில்லை. தூய இசுலாமிய அடிப்படைவாதத்தின் மேல் கட்டப்பட்ட தாலிபான்களும் அவர்களின் முஜாஹித்தீன்களும் ஓரளவுக்கு மேல் அமெரிக்காவோடு உறவாடுவது அவர்களின் அடிப்படையையே அசைத்து விடக்கூடிய அபாயம் கொண்ட விளையாட்டு. தொண்ணூறுகளின் இறுதிப் பகுதியில் ஆப்கானில் இருந்தவாறே பின்லேடன் அமெரிக்கத் தூதரகங்களின் மேல் தொடுத்த தாக்குதல்களை தாலிபான்கள் தடுக்கவில்லை. பின்லேடனின் சர்வதேசிய இசுலாமிய முன்னணியின் செயல்பாட்டையும் முடக்கவில்லை.
இது ஆப்கானை எளிதில் மேய்ந்து விட்டுப் போய்விடலாம் – அதைத் தொடர்ந்து மத்திய ஆசிய எண்ணை வயல்களை சுலபத்தில் வளைத்துப் போட்டு விடலாம் – என்றெல்லாம் நாக்கில் எச்சில் ஊற கணக்குப் போட்டுக் காத்திருந்த அமெரிக்காவுக்கு ஆத்திரத்தைக் கிளப்புகிறது. தொண்ணூறுகளின் இறுதியிலிருந்தே ஆப்கானைத் தாக்கிக் கைப்பற்ற அமெரிக்கா தருணம் பார்த்துக் காத்துக் கிடந்த நிலையில் தான் இரட்டை கோபுரத் தகர்ப்பு நடக்கிறது.
உலக வரலாற்றில் மிகவும் ஆச்சரியப்படவைக்கும் இந்தத் தாக்குதலை அல் காய்தா நிறைவேற்றியதாக சொல்லப்படுகிறது. அதே நேரம் இந்த தாக்குதல் நடப்பதை அமெரிக்க அறிந்து தனது அரசியல் நோக்கத்திற்காக வேண்டுமென்றே  நடக்க அனுமதித்தது என்றெல்லாம் கூட சிலர் கூறுகின்றனர். எது எப்படியோ இந்த தாக்குதலை வைத்து அமெரிக்கா அறுவடை செய்த அரசியல் நடவடிக்கைகள்தான் நம்மைப் பொறுத்த வரை முக்கியமானது.
ஆப்கானின் மேலான அமெரிக்க நிலைப்பாடு பற்றியெறியத் தயாரான நிலையில் இருந்த காய்ந்து போன வைக்கோல் போர் என்றால், இரட்டை கோபுரத் தகர்ப்பு என்பது அதன் மீது விழுந்த சிறு பொறி. அதன் பின் அமெரிக்கா தீவிரவாதத்திற்கு எதிரான தனது போரைத் துவக்குகிறது. அதுவரை தானே தனது நலனுக்காக ஊட்டி வளர்த்த இசுலாமிய சர்வதேசியத்தையும் முஜாஹிதீன்களையும் இப்போது புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தனது நலனுக்காகவே வில்லனாகச் சித்தரிக்கத் துவங்கியது  அமெரிக்கா. இப்படித்தான் விடுதலைப் போராளிகள், பயங்கரவாதிகளாக மறு நாமகர்ணம் சூட்டப்பட்டார்கள்.
தீவிரவாத ஒழிப்பு என்கிற பெயரில் முதலில் ஆப்கான் மேலும் அதைத் தொடர்ந்து ஈராக் மேலும்  குண்டுகளைப் பொழிந்ததும், அவற்றைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததையும், அப்போரில் அநியாயமாய்க் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான அப்பாவிகள் பற்றியும் நீங்கள் கேள்விப்படாமல் இருந்திருக்க மாட்டீர்கள் – ஆனால், இதில் நீங்கள் கேள்விப்படாத இன்னொரு அம்சமும் இருக்கிறது. ஆப்கான் போருக்காக மட்டும் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை அமெரிக்கா செலவிட்டு வருகிறது. இன்றைய நிலையில் ஈராக் மற்றும் ஆப்கான் போர்களுக்காக சுமார் 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
அமெரிக்கர்களின் வரிப்பணத்திலிருந்து செலவிடப்படும் இத்தொகையானது ஆயுதக் கம்பெனி முதலாளிகளும், கட்டுமானக் கம்பெனி முதலாளிகளுக்கும், எண்ணைக் கம்பெனிகளுக்கும் தான் பாய்ச்சப்படுகின்றன. இது இந்தப் போரின் பொருளாதார முகம்  என்றால், இந்தப் பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை நிறுவியுள்ளது அதன் இராணுவ முகம்.
ஆக, இசுலாமிய தீவிரவாதம் என்கிற வளர்த்த கடா அமெரிக்கா விரும்பிய திசையில் பாய்ந்த போதும் சரி  – திரும்பி அமெரிக்காவின் மார்பிலேயே பாய்ந்த போதும் சரி; அதன் பலன்கள் என்னவோ அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அதன் ஆன்மாவாக இருக்கும் அமெரிக்க முதலாளிகளுக்கும் தான்.
இந்தப் போரின் ஒரு இடைக்கட்டமாக இப்போது ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்திருந்தாலும், அந்த வாக்கியத்தின் இறுதிப் பகுதியான ‘தீவிரவாதத்திற்கு எதிரான போர் இன்னமும் ஓயவில்லை’ என்பதே நமது அக்கறைக்கும் கவனத்திற்கும் உரியதாகும். கடந்த பத்தாண்டுகளாக போதுமான அளவிற்கு ஒசாமா பின்லேடன் என்கிற பூச்சாண்டியைக் காட்டிக் காட்டியே அமெரிக்கர்களிடம் பயபீதியை உண்டாக்கி ஒரு பொதுக்கருத்தை கட்டமைத்து போர் நடத்தியாகிவிட்டது. இப்போது எதார்த்தம் சாமானிய  அமெரிக்கர்களைச் சுடும் நேரம் வந்து விட்டது.
இனிமேலும் இந்தப் பூச்சாண்டியைக் காட்டி கிளைமேக்சே இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க பட்ஜெட்டிலும் மக்கள் நலத்திட்டங்களைச் சுருக்கி நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை முதலாளிகளுக்குப் படையலிட்டுக் கொண்டிருக்க முடியாது. அதவாது மக்கள் தொட்டறியத்தக்க ஒரு வெற்றி வேண்டும். ஆக, அமெரிக்கா நடத்தி வரும் மெகா சீரியலில் இப்போதைக்கு ஒரு வில்லனைக் காவு கொடுத்து நேயர்களை கொஞ்சம் மகிழ்ச்சிப் படுத்தியாக வேண்டிய தருணம் வந்துள்ளது – ஒசாமா வதமும் நிகழ்ந்துள்ளது.
பின்லேடன் கொல்லப்பட்டதை அறிவித்த பராக் ஒபாமா, அந்த வாக்கியத்தின் இறுதியிலேயே போர் இன்னமும் முடியவில்லை என்பதைத் தெளிவாக அறிவித்திருக்கிறார். இனிமேல் வெறுமனே தீவிரவாதத்தை மட்டுமே  எதிர்த்துப் போர் புரிந்து கொண்டிருப்பது என்பது சராசரி அமெரிக்கர்களின் பொதுக்கருத்தைத் திரட்டுவதற்குப் போதுமான அளவுக்குப் பயனளிக்காது. எனவே, தீமையை அழித்த நன்மையானது அடுத்து தனது நிலையை ஸ்திரப்படுத்திக்  கொள்ள வேண்டுமல்லவா? எனவே எங்கெல்லாம் நன்மை போதுமான அளவுக்கு இல்லையோ அங்கெல்லாம் அமெரிக்க ஏவுகணைகள் நன்மையின் நற்செய்தியைச் சுமந்து செல்கின்றன. லிபியாவிலும், சிரியாவிலும் அமெரிக்கத் தலையீடுகள் இப்படித்தான் நியாயப்படுத்தப்படுகின்றன – அதாவது ‘மனிதாபிமான அடிப்படையிலான’ தலையீடு.
சீரியலின் ஒரு எபிசோடில் இருந்து அடுத்த எபிசோடுக்குச் செல்லும் முன் ஒரு சுப முடிவு தேவை – அந்த சுப முடிவு தான் தீமையின் வடிவமான ஒசாமா பின்லேடனின் கொலை. இதில் ஒசாமா இப்போது செத்தாரா முன்பே செத்தாரா என்பதற்குள் நாம் விரிவாக ஆராயத் தேவையில்லை.  இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பின் கடந்த பத்தாண்டுகளில் ஒசாமா பின்லேடன் என்கிற பெயர் அமெரிக்காவுக்கு அள்ளிக் கொடுத்தது என்னவென்பதும் இப்போது கொல்லப்பட்ட பின் அள்ளிக் கொடுக்கப்போவது என்னவென்பதும் தான் நமது கவனத்திற்குரியது. ஒருவேளை முன்பே செத்திருந்தாலும் அது அமெரிக்க நலன்களுக்கே பயன்பட்டுள்ளது – இப்போது செத்ததும் அமெரிக்க நலன்களுக்கே பயன்படப் போகிறது.
கடந்த பத்தாண்டுகளாக அமெரிக்க முதலாளிகளுக்குப் பொன்முட்டையிடும் வாத்தாக இருந்த அமெரிக்காவின் தீவிரவாதத்துக்கு எதிரான போருக்கான ஒரு நொண்டிச் சாக்காக ஒசாமா இருந்தார் என்றால் இனி அடுத்து வரப்போகும் ‘நல்லெண்ண அடிப்படையிலான’ போர்களுக்கு அமெரிக்கர்களை உளவியல் ரீதியில் தயார்படுத்த இப்போது செத்துள்ளார்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது போல் ஒசாமா பின்லேடனின் வாழ்வும் அமெரிக்க நலன்களுக்குச் சேவை செய்வதாகவே இருந்தது – இப்போது அவரது சாவும் அமெரிக்க நலன்களுக்குச் சேவை செய்வதாகவே அமைந்துள்ளது.

யார் பயங்கரவாதி? அல் காய்தாவா, அமெரிக்காவா?

பின்லேடன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அச்செய்தியை வெள்ளை மாளிகையில் வைத்து செய்தியாளர்களுக்கு அறிவித்த பராக் ஒபாமா, அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் அநியாயமாகக் கொன்ற ஒரு பயங்கரமான தீவிரவாதியை ஒழித்து நீதியை நிலைநாட்டி விட்டதாகவும், இத்தோடு நில்லாமல் தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்கப் போர் தொடரும் என்றும் அறிவித்துள்ளார். அதாவது இதுவரை நிலைநாட்டியதைக் கடந்து இன்னமும் நிலைநாட்டப்படுவதற்கு இன்னமும் நீதியை அமெரிக்கா ஸ்டாக் வைத்துள்ளது என்பதே அந்த அறிவிப்பின் உள்ளார்ந்த அர்த்தம்.
பராக் ஒபாமாவின் வார்த்தைகள் ஒரு அம்சத்தில் உண்மையானது தான் – அதாவது அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் கொல்பவன் ஒரு பயங்கரமான தீவிரவாதியாகத் தான் இருக்க முடியும். அவன் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்கிற ஒபாமாவின் ஆசையைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது – அது நியாயமானது தான். எமது ஆசையும் கூட அதுவே தான். நாம் எமது வாசகர்களையும் பொதுமக்களையும் ஒபாமாவின் இந்த ஆசையை நிறைவேற்றி வைக்குமாறு கோருகிறோம். ஆனால், ஒசாமா பின்லேடன் ஒழிந்த பின் இப்போது உலகிலேயே பயங்கரமான தீவிரவாதி யாராக இருக்கும் என்கிற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். அது நியாயமானது தான். எனவே அப்படியொரு தீவிரவாதியை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பது வினவின் தலையாய கடமையாக  கருதுகிறோம்.
இந்த பயங்கரவாதியை நீங்கள் லேசில் எடை போட்டு விடலாகாது. உலகின் அத்துனை கண்டங்களிலும் அதன் சகல மூலைகளிலும் இந்த பயங்கரவாதி கால் வைத்த இடத்திலெல்லாம் சர்வநாசத்தை விளைந்துள்ளான். அப்பாவி மக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டுள்ளனர். இளம் பெண்கள் தம் பெற்றோர் கண்முன்னேயே கற்பழிக்கப்பட்டுள்ளனர். தாய்மார்கள் தமது பிள்ளைகள் முன்பே மானபங்கப்படுத்தப்பட்டுள்ளனர். ஒன்றுமறியாத சிறு பிள்ளைகள் இந்த பயங்கரவாதி வீசிய குண்டுகளில் சிதைந்து போயுள்ளன. கருவிலிருக்கும் சிசு வரையில் ஊடுருவும் வீரியம் மிக்க அந்த குண்டுகளினால் பிறக்கும் குழந்தைகள் உருவமற்ற வெறும் சதைக்கோளங்களாகப் பிறந்துள்ளன.
ஒசாமா பின்லேடனாவது எந்த நீதிமன்றத்தாலும் விசாரித்து குற்றம் நிரூபிக்கப்பட்டவனில்லை – ஆனால், நாங்கள் அடையாளம் காட்டுவதோ சர்வதேச நீதிமன்றத்தாலேயே குற்றவாளி  என்று தீர்ப்பளிக்கப்பட்ட பயங்கரவாதியை. இன்னமும் தண்டிக்கப்படாமல் சுதந்திரமாக உலாவும் அந்தத் தீவிரவாதி வேறு யாரும் இல்லை – அது அமெரிக்கா தான். உலகெங்கும் ஒரு ஆக்டோபஸின் கரங்களைப் போல் விரியும் அமெரிக்காவின் பயங்கரவாதக் கொலைக் கரங்கள் விளைவித்த சர்வநாசங்களைப் பற்றி ஒரு சிறிய தொகுப்பை இங்கே வழங்குகிறோம். முதலில் அமெரிக்காவின் கொல்லைப்புறமான லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து துவங்குவோம்.
அமெரிக்க பயங்கரவாதம்

அமெரிக்க பயங்கரவாதம் – தென் அமெரிக்க சாட்சியங்கள்!

வட அமெரிக்க கண்டத்தையும் தென்னமெரிக்க கண்டத்தையும் இணைக்கும் மெல்லிய நிலப்பரப்பில் அமைந்திருக்கும் சின்னஞ்சிறிய நாடு நிகரகுவா. 1936-ல் தொடங்கி சுமார் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அந்நாட்டைத் தன் இரும்புப் பிடிக்குள் வைத்திருந்தது சோமோசா சார்வாதிகார கும்பல். இன்றைக்கு உலகமக்களுக்கு ஜனநாயக விரிவுரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இதே யோக்கிய அமெரிக்கா தான் அன்று மக்களைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருந்த சோமோசா கும்பலுக்கு உற்ற பங்காளி.
காலம் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை உணர்வுகள் ஒரு பௌதீக வடிவமாக ஸான்டினிஸ்ட்டா புரட்சியாளர்கள் வடிவில் உருக்கொண்டு எழுந்து சூறாவளியாய்ச் சுழன்றடித்ததில் சோமோசா குடும்பத்தின் கடைசி வாரிசும் அப்போது அதிகாரத்திலிருந்த கொடும் சர்வாதிகாரியுமான அனடேஸியோ சோமோசா டெபாயேல் 1979-ம் ஆண்டு அதிகாரத்திலிருந்து தூக்கியெறியப்பட்டார். மக்களின் விடுதலை உணர்வுகள் வெற்றி பெற்றால் என்ன நடக்கும் என்பதை அமெரிக்கா உணர்ந்திருந்தது. 77-ம் ஆண்டே இதை முன்னறிந்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் இராணுவ உதவிகளை வழங்கியிருந்தார். ஆனாலும் சுழன்றடித்த மக்களின் கோபக் கனலில் சோமோசா சர்வாதார ஆட்சி கவிழ்ந்து சான்டினிஸ்ட்டா புரட்சியாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர்.
அதிகாரத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சோமோசா கும்பலுக்கு விசுவாசமான கூலிப்படையினரைப் பொறுக்கியெடுத்த அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ, அவர்களுக்கு கான்ட்ராஸ் என்று பெயரிட்டு பயங்கரவாத நாசவேலைகள் செய்வதற்கு பயிற்றுவித்தனர். இதற்காகவே “ஸ்கூல் ஆப் அமெரிக்கானாஸ்” என்கிற பயங்கரவாத பயிற்சிப் பள்ளிகளை நடத்தி வந்துள்ளது அமெரிக்கா. 1946-ல் துவங்கப்பட்ட இந்த பயங்கரவாதப் பயிற்சிப் பள்ளியில் வைத்து தான் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஒசாமாவுக்கே அப்பன்மார்களையெல்லாம் அமெரிக்கா விரிவாகப் பாடம் நடத்திப் பயிற்றுவித்து உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தது.
சுமார் 60,000 பங்கரவாதிகளை உருவாக்கிய இந்தப் பள்ளியை உள்நாட்டில் கிளம்பிய எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் டிசம்பர் 2000-ல் இழுத்து மூடிய அமெரிக்கா ஒரே மாதத்தில் – 17 ஜனவரி 2001-ல் – மேற்குப் பிராந்தியத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான பயிற்று மையம்  (Western Hemisphere institute for security cooperation) என்கிற பெயரில் மீண்டும் திறந்துள்ளது. நிகரகுவா மட்டுமின்றி, எல்சால்வடாரில் இயங்கிய கொலைப்படை, பனாமாவின் கொடூர சர்வாதிகாரி மானுவேல் நொரியேகா, கொலம்பியாவின் மாஃபியா கும்பல்கள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதிகளையும் பயங்கரவாத கும்பலையும் பெற்றெடுத்துள்ளது இந்தப் பள்ளி.
அமெரிக்க செனேட்டரான ஜோஸப் கென்னடியின் கூற்றுப்படி, சுமார் பதினோரு இலத்தீன் அமெரிக்கச் சர்வாதிகாரிகள் இந்தப் பள்ளியிலிருந்து தான் பயிற்றுவிக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். மேலும் அவர், உலகிலேயே அதிகளவிலான கொடூர சர்வாதிகாரிகளைத் தோற்றுவித்த ஸ்தாபனம் இதுவாகத் தான் இருக்கும் என்று பெருமை பொங்க குறிப்பிடுகிறார். கம்யூனிஸ்ட்டுகளையும் புரட்சியாளர்களையும் எப்படித் தேடித் தேடிக் கொலை செய்ய வேண்டும், மாட்டிக் கொண்ட அப்பாவிகளை எப்படிச் சித்திரவதை செய்ய வேண்டும், கைது செய்த அரசியல் கைதிகளை எப்படித் துன்புறுத்தி விசாரிக்க வேண்டும், ஒரு சிவில் சமூகத்தில் நாசவேலைகளைச் செய்வது எப்படி என்பதெற்கெல்லாம் விரிவாக கோனார் நோட்ஸ் போட்டு பாடம் நடத்தியுள்ளார்கள். பொறுமையும் மனதைரியமும் இருந்தால் அவற்றில் ஒன்றை நீங்களும் வாசித்துப் பார்க்கலாம்.  அமெரிக்க சி.ஐ.ஏவின் இது போன்ற பயங்கரவாதக் கையேடுகள் இணையத்தில் நிறையக் கிடைக்கிறது.
பயிற்றுவிக்கப்பட்டு களத்தில் இறக்கிவிடப்பட்ட அமெரிக்காவின் இந்த ‘மாணவப்’ படை அப்பாவி மக்கள் மேல் கட்டவிழ்த்து விட்ட பயங்கரங்கள் சொல்லில் வடிக்க முடியாதளவுக்கு ரத்தக் கவுச்சி வீசும் சொல்லொணாத் துயரங்கள். இது பற்றி பதிவு செய்துள்ள நோம் சோம்ஸ்கி
“நிகரகுவாவில் அமெரிக்க அரசால் இயக்கப்பட்ட காண்ட்ரா கொலைப்படையாகட்டும், கவுதமாலா, எல்சால்வடாரில் செயல்பட்ட நமது பினாமி பயங்கரவாதிகளாட்டும், அவர்கள் சாதாரண முறையில் கொலை செய்வதில்லை… குழந்தைகளைப் பாறையில் மோதிக் கொல்வது, பெண்களின் மார்புகளை அறுத்துத் தலைகீழாகத் தொங்கவிட்டு ரத்தம் வெளியேறிச் சாகச் செய்வது, தலையைச் சீவிவிட்டு முண்டத்தை மட்டும் கழுமரத்தில் சொருகி வைப்பது என அனைத்துமே கொடூரமான வக்கிரமான முறைகள்”
பாதிரியாரான சாண்டியாகோ சொல்வது நமது முதுகெலும்பைச் சில்லிட வைக்கிறது -
“சதைகள் பிய்ந்து எலும்பு தெரியும் வரை குழந்தைகளை முள் கம்பிகளின் மேல் புரட்டி இழுத்து அந்தக் காட்சிகளைக் காணுமாறு பெற்றோர்கள் நிர்பந்திக்கப்பட்டார்கள்” இந்தக் கொடூரங்களைச் செய்ய பக்குவப்படுத்தும் பயிற்சி முறைகளை அமெரிக்காவே முன்னின்று கற்றுக் கொடுத்துள்ளது. எல்சால்வடாரின் கொலைப்படையில் இருந்து மன உளைச்சல் தாளாமல் தப்பியோடி வந்த ஒரு அகதி இதை 1990-ம் ஆண்டு அமெரிக்க நீதி மன்றத்திலேயே சாட்சியமாகப் பதிவு செய்துள்ளார்.
“சேரிகளுக்குள் புகுந்து 13, 14 வயது சிறுவர்களை போலீசு அள்ளிக் கொண்டு போகும். அவர்களுக்குப் பயிற்சி முகாமில் கொலை, கற்பழிப்பு, சித்திரவதை ஆகியவைகளை ஒரு மதச் சடங்கைப் போலப் பயிற்றுவிப்பார்கள். ‘மாணவர்கள்’ நாய்களையும் பருந்துகளையும் கழுத்தை முறித்து, பற்களால் தொண்டையைக் கடித்தே கொலை செய்யப் பழக வேண்டும். வெறும் மிருகங்களை வைத்து மட்டும் செய்முறை பயிற்சி அளிக்கப்படவில்லை. தமது ‘மாணவர்களின்’ திறன் வெறும் மிருகங்கள் பறவைகள்  எனும் அளவில் மட்டும் சுருங்கி விடக்கூடாது என்பதில் அமெரிக்கா மிகுந்த கவனம் செலுத்தியிருக்கிறது.
பதிமூன்று ஆண்டுகளாக சி.ஐ.ஏ அதிகாரியாகப் பணியாற்றிய ஜான் ஸ்டாக்வெல் இது போன்ற செய்முறைப் பயிற்சிகளைப் பற்றி அளித்த பேட்டியொன்றில் மாணவர்களைத் தயாரிக்கும் முறைகளை விவரமாக பதிவு செய்துள்ளார். “சித்திரவதை முறைகளைக் கற்றுக் கொடுக்கலாம். ஆனால், மாணவர்கள் தம் சொந்தக் கைகளால் அதைச் செய்து பழக வேண்டுமே. எனவே தெரிவுலிருக்கும் அனாதைகள், பிச்சைக்காரர்கள் ஆகியோரை அள்ளிக் கொண்டு வருவோம். அவர்கள் தான் எங்கள் சோதனைச் சாலை எலிகள்”
“மெல்லிய உறுதியான மின் கம்பியை பற்களுக்கிடையில் நுழைத்து விட்டு இன்னொரு முனையை ஆண் குறியில் முடுக்கி விட்டு மின்சாரத்தைச் செலுத்துவார்கள். துன்பம் தாங்காமல் அவர்கள் கதறுவார்கள். அரசியல் கைதிகளாயிருந்தால் “நிறுத்து. உண்மையைச் சொல்லிவிடுகிறேன்” என்று அலறக் கூடும். இந்த அனாதைகளுக்கோ தம்மை ஏன் சித்திரவதை செய்கிறார்கள் என்பதே தெரியாது. எனவே கதறுவதைத் தவிர அவர்களால் வேறொன்றும் செய்ய இயலாது”
“வலி தாங்காமல் துடித்து மயங்கி விழுந்தவுடன் டாக்டர் வருவார். இந்த ‘சோதனைச் சாலை எலிகளுக்கு’ வைட்டமின் ஊசி போட்டு ஓய்வெடுக்க வைப்பார். சிறிது நேரத்திற்குப் பிறகு அடுத்த வகுப்புக்கு எலிகள் தயாராக வேண்டும்”
“ஒரு கட்டத்தில் அவர்கள் செத்துப் போவார்கள். அவர்களது பிணமும் பயன்படும். பிணத்தை நகரத்தின் நடுவீதியில் வீசியெறிவோம். பிணத்தைப் பார்க்கும் மக்கள் ‘அரசாங்கம் – போலீசு’ என்று நினைத்தாலே குலை நடுங்குவார்கள்”
தற்போது அமெரிக்காவின் ஆசி பெற்ற ‘ஜனநாயகப்’ போராளிகள் லிபியாவில் இப்படித்தான் சண்டை போடுகின்றனர். உயிரோடு லிபிய இராணுவச் சிப்பாயை தலைகீழாக் கட்டி தொங்கவிட்டு நெஞ்சைப் பிளந்து இதயத்தை அப்படியே பிடுங்குகிறார்கள். யூ டியூபில் இந்தக் காட்சியைப் பார்ப்போர் உடைந்து போவது நிச்சயம்.
கம்யூனிஸ்டுகளாகிய நீங்கள் எதற்கெடுத்தாலும் அமெரிகாவைக் குறை சொல்கிறீர்களே என்று சலித்துக் கொள்ளும் சில அறிவாளிகள் இதயத்தில் ஈரமும் கண்களில்  கொஞ்சமாவது கண்ணீரும் மிச்சமிருந்தால் அந்தத் தென்னமெரிக்க அப்பாவிகளுக்காக அது வடியட்டும். மக்கள் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியைக் குறைத்து, தனது சொந்த மக்களைத் தவிக்க விட்டு, அவர்களின் வரிப்பணத்திலிருந்து தான் இது போன்ற படுபயங்கரவாதச் செயல்களுக்கு நிதி ஒதுக்குகிறது அமெரிக்கா.

முழு உலகிலும் அமெரிக்க பயங்கரவாதத்தின் ரத்தச் சுவடுகள்

தென்னமெரிக்க கண்டம் மட்டுமல்ல, கொரியப் போர்களில் வீசப்பட்ட நாபாம் குண்டுகளும், வியட்நாமில் வீசப்பட்ட கொத்துக் குண்டுகளும் கருக்கியெறிந்த கனவுகளும் மக்களின் வாழ்க்கையும் எண்ணிலடங்காதவை. தென்னமெரிக்க அனாதைகள் மட்டுமா அமெரிக்காவின் பயங்கரவாதப் பள்ளிகளுக்குச் சோதணைச் சாலை எலிகள்? கொரியாவின் தேசிய விடுதலைக்காக ஜப்பானை எதிர்த்துப் போராடிய கம்யூனிஸ்டுப் போராளிகள் மேல் நாபாம் குண்டுகளையும் பல்வேறு உயிரி ஆயுதங்களையும் வீசி அமெரிக்கா நடத்திய சோதனையின் விளைவு மட்டுமே ஒரு லட்சம் உயிர்கள் பலி. இன்னும் வியட்நாம், யுகோஸ்லோவியா, ஈராக், ஆப்கான், லிபியா என்று அதன் பாவ மூட்டைகளை ஒன்றாகக் குவித்தால் அது இந்த பூமிப் பந்தை விட அளவில் பெரிதாய் இருக்கும்.
ஈராக்கின் மேல் இராணுவத் தாக்குதல் நடத்திக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சங்களில் இருக்கும்  என்றால் அதற்கும் முன்பிருந்தே பொருளாதாரத் தாக்குதல் நடத்திக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது. அத்தியாவசிய மருந்துகளைத் தடுத்ததன் மூலம் மட்டுமே ஐந்து லட்சம் அப்பாவிக் குழந்தைகளை ஈராக்கியர்கள் பறிகொடுத்திருக்கிறார்கள். பாலைவன தேசமான ஈராக்கில் கடல் நீரைச் சுத்திகரிக்கும் தொழிற்சாலைகளுக்கான உபகரணங்களை இறக்குமதி செய்யவிடாமல் தடுத்ததன் மூலம் காலரா போன்ற நோய்களுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை தனி கணக்கு.
சிதறி ஓடுபவர்களை துரத்தித் துரத்திக் கொல்ல கொத்து குண்டுகள் என்றால், நிலத்தினடியில் பதுங்கிக் கொண்டிருப்பவர்களைக் கொல்ல, நிலத்தையே இருபதடிகள் வரை ஊடுருவித் தாக்கும் டொமஹாக் ஏவுகணைகள் – கருவிலிருக்கும் குழந்தைகளைத் தாக்கியழிக்க அணுக் கழிவு ஏவுகணைகள் என்று ரகரகமாக ஈராக்கிலும் ஆப்கானிலும் குண்டுகளை பொழிந்துள்ளது அமெரிக்கா. ஈராக்கியர்களின் தோல்வியின் ரணம் என்பது சிலவருடங்களில் ஆறிப் போவதல்ல – அது அணு ஆயுத பாதிப்பு என்கிற வகையில் தலைமுறை தலைமுறைகளாகத் தொடர்ந்து வரப்போகும் சாபம்.
ஒபாமா அறிவித்துள்ளதைப் போல் பயங்கரவதாதத்திற்கு எதிரான போர் தொடரத் தான் வேண்டும் ஆனால் யார் மிக மோசமான பயங்கரவாதி? இன்றைய உலகின் மிக மோசமான பயகரவாதம் அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக மக்களின் மேல் ஏவி விட்டுள்ள பயங்கரவாதம் தான் என்பதற்கு நம்மிடம் ஏராளமான சான்றுகளும் அதனால் உலக மக்கள் அனுபவித்து வரும் பாடுகளும் எதார்த்தத்தில் நம் கண் முன்னேயே உள்ளன. அமெரிக்க பயங்கரவாதத்தின் இலக்கு எங்கோ உள்ள தென்னமெரிக்க கண்டத்து மக்களும் ஆப்கானிய ஈராக்கிய மக்களும் மட்டும் தானென்றும் இங்கே நாமெல்லாம் பாதுகாப்பாகவும் சொகுசாகவும் வாழ்வதாக கருதிக் கொள்ளும் நடுத்தரவர்கத்தினரின் சமையலறை வரையில் அமெரிக்க ஆக்டோபஸின் கரங்கள் நீண்டிருப்பதை உணரவில்லை.
அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று நாம் சொல்வது ஜார்ஜ் புஷ், ஒபாமா போன்ற ஒருசிலரோடு மட்டும் முடிந்து விடுவதல்ல – இவர்கள் உண்மையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலவர்களாக வீற்றிருக்கும் தேசங்கடந்த தொழிற்கழக முதலாளிகளின் உற்சவ மூர்த்திகள் மட்டும் தான். இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் விவசாயத்தையும், உள்நாட்டுத் தொழில்களையும் தாக்கியழித்துக் கபளீகரம் செய்யும் தனியார்மய உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளாக அது தேச எல்லைகளையெல்லாம் கடந்து நீண்டு கிடக்கிறது. பி.டி கத்தரிக்காயாக உங்கள் சமையலறையில் ஊடுருவியிருக்கும் அதே நேரத்தில் நியாம்கிரி மலையிலும் இன்னும் தேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு பெயர்களில் தொழில் ‘வளர்ச்சியாக’ சிறகு விரித்துக் கிடக்கிறது.
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடரப் போகிறது – நீங்கள் யாருடைய பக்கம் நிற்கப் போகிறீர்கள்?
__________________________________________________________
வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

வழக்கு! குரங்கு எழுதிய தீர்ப்பு!! – தோழர் மருதையன்

அயோத்தி தீர்ப்பு
“பூட்டியிருந்த கோயிலின் கதவை பக்தர்களின் தரிசனத்துக்குத் திறந்து விடுவதற்கான உத்திரவை பிறப்பித்த அந்த நாளன்று, எனது நீதிமன்ற அறையின் மேற்கூரையில் கொடிமரத்தைப் பற்றியபடி ஒரு கருப்புக் குரங்கு அமர்ந்திருந்தது. அன்றைய தினம் தீர்ப்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பைசலாபாத், அயோத்தி நகரங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அந்தக் குரங்குக்கு வேர்க்கடலை, பழம் முதலானவற்றைக் கொடுத்தனர். அந்தக் குரங்கோ அவற்றைத் தொடக்கூட இல்லை. மாலை 4.40 க்கு நான் தீர்ப்பைப் படித்தவுடன் அந்தக் குரங்கு அங்கிருந்து அகன்றது. பின்னர் எனது பாதுகாப்புக்காக வந்திருந்த மாவட்ட ஆட்சியரும், போலீசு கண்காணிப்பாளரும் என்னை எனது பங்களாவுக்கு அழைத்துச் சென்றனர். பார்த்தால், எனது பங்களாவின் தாழ்வாரத்தில் அமர்ந்திருக்கிறது அந்தக் குரங்கு. எனக்கு அச்சரியம் தாங்கமுடியவில்லை. நிச்சயமாக ஒரு தெய்வீக சக்திதான் அந்தக் குரங்கு என்பதை உணர்ந்து கொண்டு அதனை வணங்கினேன்.”
பாபர் மசூதிக்குள் 1949இல் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட ராமன் சிலையை, இந்து பக்தர்களின் வழிபாட்டுக்குத் திறந்து விடும் உத்திரவை 1986இல் பிறப்பித்த பைசலாபாத் மாவட்ட நீதிபதி கே.எம்.பாண்டே, பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின், 1991இல் வெளியிட்ட தனது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ள சம்பவம் இது.
செப், 30, 2010 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கூரையிலும் நிச்சயமாக அந்தக் கருங்குரங்கு இருந்திருக்க வேண்டும் என்பதை தீர்ப்பிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் குரங்குகளின் எண்ணிக்கை ஒன்றா மூன்றா என்ற தெய்வீக உண்மை, பின்னாளில் இந்த நீதிபதிகள் சுயசரிதை எழுதும்போதுதான் நமக்குத் தெரியவரும்.
“ஒரு குறிப்பிட்ட இடம் யாருக்குச் சொந்தமானது” என்று தீர்மானிப்பதற்கான உரிமை மூல வழக்கில், பட்டா பத்திரம் போன்ற சான்றாதாரங்களைச் சார்ந்து நிற்காமல், அந்தக் குறிப்பிட்ட இடத்தில் இராமன் பிறந்ததாக இந்துக்கள் நம்புவதால், அவர்களுடைய நம்பிக்கையின் அடிப்படையில் அந்த இடத்தை இராமபிரானுக்குச் சொந்தமாக்குவதாகத் தீர்ப்பளித்திருக்கிறது அலகாபாத் உயர் நீதிமன்றம். ஒரு உரிமை மூல வழக்கில் மனுதாரரின் மத நம்பிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் அவருக்கு சொத்துரிமை வழங்கமுடியுமா என்பதுதான் அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக எழுப்பப் படும் மையமான கேள்வி. மனுதாரரின் நம்பிக்கை கிடக்கட்டும். நீதிபதியின் நம்பிக்கைதான் 1986 தீர்ப்பையே தீர்மானித்திருக்கின்றது என்பதையல்லவோ குரங்கு கதை நமக்குக் காட்டுகிறது!
அயோத்தி - இராமன் தொடுத்த வழக்கு! குரங்கு எழுதிய தீர்ப்பு!! – தோழர் மருதையன் a'

அலகாபாத் தீர்ப்பு: இந்து பாசிச அரசியலுக்கு சட்டரீதியான அங்கீகாரம்!

அலகாபாத் தீர்ப்புக்கு முன் இந்துக்களின் நம்பிக்கையாக மட்டுமே இருந்த இராமஜென்மபூமி, இன்று சட்ட அங்கீகாரம் பெற்று விட்டதாகவும், இத்தீர்ப்பின் மூலம்  தேசிய ஒருமைப்பாட்டுக்குப் புதியதொரு அடித்தளம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார் அத்வானி. “இதுதான் இராமன் பிறந்த இடம் என்று நிரூபிக்கும் பட்சத்தில், அந்த இடத்தை விட்டுக் கொடுத்துவிடுவதாக வக்பு வாரியம் ஏற்கெனவே கூறியிருந்தது. இதோ இன்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. அவர்களுடைய மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. வக்பு வாரியம் தனது வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும். அந்த இடத்தின் மீதான தனது கோரிக்கையைக் கைவிட வேண்டும்” என்று மிரட்டியிருக்கிறார் தொகாடியா. “அயோத்தியில் இராமனுக்கு பிரம்மாண்டமானதொரு ஆலயம் அமைக்கும் பணியில் இந்துக்களுடன் கைகோர்த்து நிற்க முஸ்லிம்கள் முன்வரவேண்டும். இரு சமூகங்களும் இணைந்து வலிமையான இந்தியாவைக் கட்டி எழுப்புவதற்குக் கிடைத்திருக்கும் இந்த அற்புதமான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று முஸ்லிம் சமூகத்தை இந்து தேசியத்துக்கு அடிபணிந்து விடுமாறு அறிவுரை கூறியிருக்கிறார் அசோக் சிங்கால்.
அலகாபாத் உயர்நீதிமன்றம் தற்போது ஒதுக்கியிருக்கும் மூன்றில் ஒரு பங்கு நிலத்தையும் இந்துக்களிடம் ஒப்படைத்து விடவேண்டுமாம். இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடாதாம். இசுலாமிய மக்களின் உள்ளத்தில் இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கும் காயத்தின்மீது உப்பை வைத்துத் தேய்த்துக் கொண்டே, பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளுமாறு அவர்களைக் கேட்டுக் கொள்கிறது இந்து மதவெறிக் கும்பல். “சுமுகமான தீர்வு வேண்டும் என்று உண்மையிலேயே விரும்பினால், நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள இயலும்” என்று பா.ஜ.க வின் கருத்தையே வேறு வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார் காங்கிரசு கட்சியின் சத்யவிரத சதுர்வேதி. 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது மசூதியை மீண்டும் கட்டித்தரவேண்டும் என்று கூறிய திமுக, இன்று இத்தீர்ப்பை விமரிசித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.
“தீர்ப்பினால் மகிழ்ச்சியடைந்தோரும் சரி, ஏமாற்றமடைந்தோரும் சரி இதனைத் தெருவுக்குக் கொண்டு செல்லக்கூடாது. தீர்ப்பு யாருக்கேனும் திருப்தி அளிக்கவில்லையென்றால், அவர்கள் மேல் முறையீடு செய்யலாம்” என்றிருக்கிறார் வலது கம்யூ கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா. “நமது மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்பில், பிரச்சினையைத் தீர்த்துக் கொள்தற்கான ஒரே வழி உச்ச நீதிமன்றத்தை அணுகுவதாகத்தான் இருக்க முடியும்” என்று கூறியிருக்கிறது மார்க்சிஸ்டு கம்யூ கட்சி. மொத்தத்தில் எந்த ஓட்டுக் கட்சியும் இத்தீர்ப்பினை அரசியல் ரீதியாகவோ, சட்ட ரீதியாகவோ விமரிசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பின் மீதான விமரிசனங்களும்
விமரிசனங்களிலிருந்து எழும் கேள்விகளும்!

ராஜீவ் தவான், பி.வி.ராவ், பிரசாந்த் பூஷண் போன்ற உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சச்சார் போன்ற துறைசார் வல்லுநர்கள் மற்றும் சிவில் உரிமை அமைப்புகள்தான் இத்தீர்ப்பு குறித்து கீழ்க்கண்ட விமரிசனங்களைத் தெரிவித்திருக்கின்றனர்:
“தந்தையைக் கொலை செய்கின்ற மகன், தந்தையின் சொத்தில் பங்கு கோரும் உரிமையை இழக்கிறான் என்பது சட்டம். இங்கோ 1992 இல் மசூதியை இடித்த குண்டர்களுக்கோ இத்தீர்ப்பு அவர்கள் கேட்டதைக் கொடுத்திருக்கிறது’’. “ 1949 இல் திருட்டுத்தனமாக இராமன் சிலையை உள்ளே வைத்ததை ஏற்றுக் கொள்ளும் நீதிமன்றம், மசூதியை அவர்களுக்கு வழங்கியதன் மூலம் அந்த திருட்டுத்தனத்தை அங்கீகரித்திருக்கிறது.” “ஒரு உரிமை மூல வழக்கில், நம்பிக்கையின் அடிப்படையில் சொத்தை வழங்க முடியாது. நம்பிக்கை என்பது பக்தனுக்கு வழிபாட்டு உரிமையைத்தான் வழங்குகிறதேயன்றி, இடத்துக்கு சொந்தம் கொண்டாடும் உரிமையை அல்ல. ஆயின் பிற மதத்தினருக்கும் இதே உரிமை வழங்கப்படுமா?” “ பாபர் காலத்தில் இந்து வழிபாட்டுத்தலம் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாக கூறும் இத்தீர்ப்பு, நம் கண்முன்னே நடந்த மசூதி இடிப்பு குறித்து மவுனம் சாதிப்பதன் மூலம் அந்த கிரிமினல் நடவடிக்கையை நியாயப்படுத்தியிருக்கிறது.”
— இவையெல்லாம் தீர்ப்பின்மீதான இவர்களது விமரிசனங்கள்.
இவ்விமரிசனங்களிலிருந்து நமக்கு சில கேள்விகள் எழுகின்றன. மதச்சார்பின்மைக் கோட்பாடு குறித்த இந்திய அரசியல் சட்டத்தின் பார்வையிலிருந்து வழுவி, இந்து மதவாதப் பார்வையிலிருந்து நீதிபதிகள் இத்தீர்ப்பை வழங்கியிருப்பதுதான் இந்த அநீதிக்கு அடிப்படையா, அல்லது மதச்சார்பின்மை குறித்த இந்திய அரசியல் சட்டத்தின் பார்வையே இந்த அநீதியான தீர்ப்புக்கு இடமளிக்கிறதா?
குறிப்பிட்ட இடத்தில் இராமன் பிறந்தான் என்ற நம்பிக்கையோ, அல்லது பிறந்தானா இல்லையா என்பது குறித்த ஆதாரங்கள், சாட்சியங்களோ ஒரு உரிமையியல் வழக்கின் எல்லைக்குள் வருகின்ற, நீதிமன்றம் தலையீட்டுத் தீர்ப்புக் கூறத்தக்க பிரச்சினைகளா அல்லது இப்பிரச்சினையில் அலகாபாத் நீதிமன்றம் அத்துமீறி மூக்கை நுழைத்திருக்கிறதா?
வரலாறு, மதநம்பிக்கை, அரசியல், சட்டம் என்ற வெவ்வேறு வகைப்பாடுகளின் கீழ் அணுகப்பட வேண்டிய இப்பிரச்சினையில், தனது நோக்கத்துக்கு ஏற்ப ஒன்றை மற்றொன்றோடு சேர்த்துக் குழப்பும் சதித்தனமான உத்தியை பார்ப்பன பாசிசக் கும்பல் துவக்கமுதலே கையாண்டு வருகிறது. ‘பாசிசக் கும்பலின் சதி’ என்று நாம் எதைச் சாடுகிறோமோ, அதையே சட்டபூர்வமான அடித்தளத்தின்மீது நிற்க வைத்திருப்பதுதான் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு.

அரசியல்வரலாறுமதநம்பிக்கைசட்டம்
இந்து பாசிசத்தின் கண்ணாமூச்சி ஆட்டம்!

அயோத்தி - இராமன் தொடுத்த வழக்கு! குரங்கு எழுதிய தீர்ப்பு!! – தோழர் மருதையன் a'இப்பிரச்சினையில் பார்ப்பன பாசிசக் கும்பல் கையாண்டு வரும் உத்திகளை மீண்டும் நினைவுபடுத்திப் பார்ப்பது அவசியம்.
13 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் திரேதா யுகத்தில் பிறந்த விஷ்ணுவின் அவதாரமே இராமன் என்று கூறி,  மத நம்பிக்கையின் அடிப்படையில் இந்துக்களைத் திரட்டியது சங்க பரிவாரம். “இராமஜென்மபூமி குறித்த தொன்மை வாய்ந்த இந்துக்களின் மதநம்பிக்கையை அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தவோ, தீர்ப்பளிக்கவோ நீதிமன்றத்துக்கு அதிகாரமே கிடையாது” என்றும் வாதிட்டது.
அதே இராமனை இந்து ராஷ்டிர அரசியலின் தேசிய நாயகனாக சித்தரிக்கும் வேளையில், மொகலாயப் படையெடுப்பு, பாபர் இடித்த இராமன் கோயில், அதற்கான தொல்லியல் ஆதாரம் என்று சங்க பரிவாரம் வரலாற்றைத் துணைக்கழைத்துக் கொண்டது.
1949 ஆம் ஆண்டில், சட்டவிரோதமான முறையில் இராமன் சிலையை மசூதிக்குள் வைத்து, உரிமையியல் வழக்கு தொடுப்பதற்குத் தேவையான தாவாவை திட்டமிட்டே உருவாக்கியது. இது தொடர்பாக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், “அந்த இராமன் சிலை, பூமியை வெடித்துக் கிளம்பிய சுயம்பு விக்கிரகம் என்று இந்துக்கள் நம்புவதால், அதற்கு வழிபாடு நடத்துவது அரசியல் சட்டரீதியாக இந்துக்களின் மத உரிமை” என்று கூறி நீதிமன்றத்தில் பூசை நடத்தும் உரிமையை நிலைநாட்டிக் கொண்டது. 1986இல் பக்தர்கள் உள்ளே சென்று வழிபடும் உரிமையையும் நீதிமன்றத்தில் பெற்றுக் கொண்டது.
டிசம்பர் 1992இல் வழிபாட்டு உரிமை என்ற அடிப்படையில், பஜனை பாடும் உரிமையை உச்ச நீதிமன்றத்திடம் பெற்று, மசூதியை இடிப்பதற்கு அந்த உரிமையைப் பயன்படுத்திக் கொண்டது. மசூதி இடிப்பு என்ற அந்த நடவடிக்கை கிரிமினல் குற்றமாகக் கருதப்பட்டாலும், அந்தக் கிரிமினல் நடவடிக்கையின் மூலம் மசூதியின் இடிபாடுகளின் மீது நிறுத்தி வைக்கப்பட்ட இராமன் சிலைக்கு வழிபாடு நடத்துவது தமது மத உரிமை என்று கூறி நீதிமன்றத்திடம் வழிபாட்டு உரிமையையும் பெற்றுக் கொண்டது.
மசூதி இடிக்கப்பட்டு விட்டதால், “தொல்லியல் ஆய்வு, இந்துக் கோயில் இடிக்கப்பட்டதற்கான ஆதாரம்” என்று கூறி தனது முஸ்லிம் எதிர்ப்பு இந்து தேசிய அரசியல் கண்ணோட்டத்தில் வரலாற்றைத் துணைக்கு அழைத்துக் கொண்டு, தொல்லியல் சான்றுகளுக்கு வியாக்கியானம் தரத்தொடங்கியது. இருந்த போதிலும், “அந்த இடத்தில்தான் இராமன் பிறந்தான் என்ற இந்துக்களின் மதநம்பிக்கை, நீதிமன்றத்தின் ஆய்வுக்கு அப்பாற்பட்டது” என்ற தனது அறுதியான துருப்புச் சீட்டை சங்க பரிவாரம் கீழே போட்டுவிடவில்லை.
“எந்த இராமனின் பிறப்பிடம் குறித்து நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியாது” என்று சங்க பரிவாரம் வாதிடுகிறதோ, அதே இராமனின் சிலையை (ராம் லல்லா) உரிமை மூல வழக்கில் ஒரு மனுதாரராக்கி, தான் பிறந்த இடத்தைத் தனக்கு கிரயம் செய்து தருமாறு அதே நீதிமன்றத்தின் முன்னால் முறையிடச் செய்து, அலகாபாத் தீர்ப்பின் மூலம் மசூதியின் மையப்பகுதி நிலத்தையும் பெற்றுவிட்டது.
இவை அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்போதுதான், அரசியல் சட்ட உரிமை, மதநம்பிக்கை, வரலாறு, இந்துப் பாசிச அரசியல் ஆகியவற்றை வாளாகவும் கேடயமாகவும் தேவைக்கேற்ப எப்படியெல்லாம் சங்க பரிவாரம் பயன்படுத்தியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.
கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த நாடகத்தில், சங்க பரிவாரத்தின் ஒவ்வொரு காய் நகர்த்தலுக்கும் நீதித்துறை உடந்தையாகவே இருந்து வந்திருக்கிறது. இந்து மதவெறியை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட ‘மதச்சார்பற்ற’ சக்திகள், பார்ப்பன பாசிசத்தை அரசியல் ரீதியாகவும், பார்ப்பனியத்தை சித்தாந்த ரீதியாகவும் எதிர்க்கவில்லை என்பதுடன் இப்போதும் கூட “உச்சநீதிமன்றத்தை அணுகினால் முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைத்துவிடும்” என்று கூறி, இந்திய அரசியல் சட்டம் குறித்த பிரமையை வளர்க்கின்றனர். அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையான சில அம்சங்களைப் பரிசீலித்தோமானால், பார்ப்பனப் பாசிசத்தின் பித்தலாட்டங்கள் அனைத்துக்கும் சட்ட அங்கீகாரம் தரும் சாத்தியத்தை “மத நம்பிக்கைக்கான சுதந்திரம்” என்ற பெயரில், இந்திய அரசியல் சட்டத்தின் 25, 26ஆவது பிரிவுகள்தான் வழங்கியிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.

பாபர் மசூதி வழக்கின் வரலாறு!

இந்த வழக்கின் மனுதாரர்கள் மொத்தம் 28 பேர். சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, குழந்தை இராமன் விக்கிரகத்தின் (ராம் லல்லா விராஜ்மன்) சார்பில் ராமனது நெருங்கிய நண்பர் திரிலோக் நாத் பாண்டே ஆகிய மூன்று மனுதாரர்களே இதில் முக்கியமானவர்கள். இவர்களுக்கு இடையில்தான் பாபர் மசூதி வளாகம் மூன்று பங்காகப் பிரிக்கப்படவேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இவ்விவரங்களுக்குள் செல்லுமுன் சுருக்கமாக இந்த வழக்கின் வரலாற்றைத் தெரிந்து கொள்வது அவசியம்.
1949 டிசம்பர் 22ஆம் தேதி நள்ளிரவில் மசூதியின் பூட்டை உடைத்து உள்ளே ராமன் சிலை வைக்கப்பட்டதுதான் இந்த உரிமை மூல வழக்கின் தொடக்கம் என்று கருதப்பட்டாலும்  இப்பிரச்சினைக்கான விதை முந்தைய நூற்றாண்டிலேயே போடப்பட்டுவிட்டது. 17ஆம் நூற்றாண்டின் இறுதி வரையில் இன்றைய உத்தரப் பிரதேச மாநிலத்தின் எந்த ஊரிலும் ராமனுக்கு கோயில் எதுவும் இருந்ததில்லை என்றும், 1788இல் ஒரு கிறித்தவ ஜெசூட் பாதிரியார்தான் “இது இராமன் பிறந்த இடம்” என்று ஒரு குறிப்பினை போகிற போக்கில் குறிப்பிட்டு செல்கிறார் என்றும் கூறுகிறார் வரலாற்று ஆய்வாளர் டி.என்.ஜா. பாபர் மசூதியோ 1528ஆம் வாக்கில் கட்டப்பட்டிருக்கிறது.
1855ஆம் ஆண்டில்தான் முதன்முதலாக இப்பிரச்சினை இந்து தரப்பினரால் எழுப்பப்படுகிறது. அப்போது அயோத்தியை உள்ளடக்கிய பைசலாபாத் சமஸ்தானத்தின் மன்னனாக இருந்த வாஜித் அலி ஷா, பதற்றைத் தணிக்க ஒரு மூவர் குழுவை அமைக்கிறார். இந்த காலகட்டத்தில்தான் பைசலாபாத் சமஸ்தானத்தை விழுங்குவதற்கு கும்பினி ஆட்சி சதி செய்து கொண்டிருந்தது. வட இந்திய சுதந்திரப் போர் வெடிப்பதற்குக் காத்திருந்த காலம் இது. வாஜித் அலி ஷாவின் மனைவி பேகம் ஹசரத் மகல்தான் கும்பினிக்கு எதிரான போரைத் தலைமையேற்று நடத்தியவர் என்பதும், இந்தக் காலனியாதிக்க எதிர்ப்புப் போரில் முன்னுதாரணமாகச் சொல்லத்தக்க அளவில் பைசலாபாத் சமஸ்தானம் முழுவதும் இந்து முஸ்லிம் ஒற்றுமை நிலவியது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
பைசலாபாத் சமஸ்தானம் ஆங்கிலேயே ஆட்சியின் கீழ் வந்தபின், 1885இல் இது தொடர்பான முதல் உரிமையியல் வழக்கை மகந்த் ரகுவர் தாஸ் என்பவர் தொடர்கிறார். அன்றைய சப் ஜட்ஜ் பண்டிட் ஹரி கிஷன் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளிக்கவே, அதனை எதிர்த்து முஸ்லிம்கள் மாவட்ட நீதிமன்றத்துக்கு முறையிடுகின்றனர். “இந்துக்கள் புனிதமானதாகக் கருதும் ஒரு இடத்தில் மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்பது துரதிருஷ்டவசமானதுதான். எனினும் சம்பவம் நடந்து 356 ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டபடியால், தற்போது இதற்கு நிவாரணம் கோருவது மிகவும் காலம் கடந்ததாகும்” என்று மகந்தின் மனுவைத் தள்ளுபடி செய்து தற்போது உள்ள நிலையே நீடிக்கவேண்டும் என்று உத்தரவிடுகிறார் மாவட்ட நீதிபதி சேமியர்ஸ்.
“இந்துக்களின் புனிதமான இடம்” என்று அவர் கருதுவதற்கான ஆவணங்கள் எதுவும் அந்த வழக்கில் தரப்படவில்லை. எவ்வித ஆதாரமும் இன்றி போகிறபோக்கில் சொல்லப்பட்ட கூற்றே அது. எனினும் மசூதி தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதுதான் அந்த தீர்ப்பின் சாரம். உரிமையியல் வழக்குகளில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை ஏற்றுக் கொள்வது என்பதுதான் இந்திய அரசியல் சாசனத்தின் நிலை. அந்த வகையில் இந்திய அரசியல் சட்டத்தின்படி இந்த வழக்கு ஏற்கெனவே விசாரித்து தீர்ப்பளிக்கப்பட்ட ஒன்று.
1855க்குப் பின்னர் 1948இல்தான் மீண்டும் அங்கே பிரச்சினைகள் எழுகின்றன. அது இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டி வட இந்தியா முழுவதும் கலவரம் நடைபெற்ற காலம். 1948இல் மசூதியில் தொழுகை நடத்தும் முஸ்லிம்கள் மீது இந்து வெறியர்கள் கல்லெறிவதாக புகார்கள் வருகின்றன. அயோத்தியைச் சேர்ந்த காந்தியவாதியான அட்சய பிரம்மச்சாரி என்பவர், நகரம் முழுவதும் முஸ்லிம் மக்களை இந்துவெறியர்கள் அச்சுறுத்துவதாக லால் பகதூர் சாஸ்திரிக்கு கடிதம் எழுதுகிறார்.
அக்டோபர் 1949இல் அம்மாவட்ட ஆட்சியர், மசூதியின் ஒரு புறத்தில் கோயில் கட்டிக் கொள்ளுமாறு இந்துக்களுக்கு அனுமதி அளிக்கிறார். டிசம்பர், 22, 1949 இரவில் 50 பேர் கொண்ட கும்பல் மசூதியின் பூட்டை உடைத்து உள்ளே சிலைகளை வைக்கிறது.  இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
உடனே சிலைகளை அகற்றுமாறு உ.பி முதல்வருக்கு தந்தி அடிக்கிறார் நேரு. முதல்வர் பந்த் அகற்ற மறுக்கிறார். உள்ளே வைக்கப்பட்ட சிலைகளுக்கோ யாருமே உரிமை கோரவில்லை. பிறகு 1950 இல் “சுயம்புவாகத் தோன்றியிருக்கும் ராமபிரானுக்கு வழிபாடு நடத்த தங்களை அனுமதிக்க வேண்டும்” என்று கோபால்சிங் விசாரத், பரமஹன்ஸ் என்ற இருவர் மனு தாக்கல் செய்கின்றனர். “சிலைகளை அங்கிருந்து அகற்றவோ, பூசை நடத்துவதைத் தடுக்கவோ கூடாது” என்று மாவட்ட நீதிபதி நாயர் (பின்னாளில் ஜனசங்க கட்சியில் சேர்ந்தவர்) இடைக்காலத்தடை பிறப்பிக்கிறார்.
மேலும் 9 ஆண்டுகள் கழித்து, 1959இல்தான் மேற்படி சொத்தின் மீது (அதாவது பாபர் மசூதி அமைந்துள்ள 1500 சதுர கெஜம் அளவிலான நிலம்) உரிமை கோரி,  நிர்மோகி அகாரா உரிமை மூல வழக்கை தொடுக்கிறது. இது அனுபவ பாத்தியதை அடிப்படையில் சொத்தின் மீது உரிமை கோரிய ஒரு சிவில் வழக்கு மட்டுமே. அந்த இடம் இராமன் பிறந்த இடம், மத நம்பிக்கை என்ற வாதங்களெல்லாம் நிர்மோகி அகாராவின் மனுவில் கிடையாது. இதற்கு எதிராக வேறு வழியில்லாமல் சன்னி வக்பு வாரியம் 1961 இல் எதிர்  மனு தாக்கல் செய்கிறது.
1980களின் பிற்பகுதியில், ஷா பானு பிரச்சினையில் முஸ்லிம்களை தாஜா செய்வதாக ராஜீவ் காந்தி மீது பாரதிய ஜனதா குற்றம் சாட்டியவுடனே இந்து வாக்குகளைக் கவர்வதற்காக, பூட்டியிருந்த மசூதியின் கதவுகளைத் திறக்கும் சூழ்ச்சியில் ஈடுபட்டது ராஜீவ் அரசு. 1986இல், எதிர் தரப்பான சன்னி வக்பு வாரியத்துக்கே தெரியாமல், யாரோ ஒரு பக்தர் பெயரில் மனு தாக்கல் செய்யவைத்து, ராமன் சிலையை வழிபட இந்து பக்தர்களை அனுமதிக்கும் உத்தரவை ஒரு தலைப்பட்சமாகப் பிறப்பித்தார், ‘கருங்குரங்கை விழுந்து கும்பிட்ட’ நீதிபதி பாண்டே.
இதனைத் தொடர்ந்து ராம ஜென்மபூமி பிரச்சினையை அரசியல் ரீதியில் அறுவடை செய்வதற்கான இயக்கத்தை பாரதிய ஜனதா நாடெங்கும் கட்டத்தொடங்கியது. 1989இல் தேர்தலுக்கு சில நாட்கள் முன் பாபர் மசூதி வளாகத்தில் ராமன் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பூசை நடத்த சங்கபரிவாரத்தை அனுமதித்தது ராஜீவ் அரசு.
அயோத்தி - இராமன் தொடுத்த வழக்கு! குரங்கு எழுதிய தீர்ப்பு!! – தோழர் மருதையன் a'

வழக்கில் மனுதாரராக நுழைக்கப்படுகிறான் இராமன்!

ஆனால் வழக்கைப் பொருத்தவரை, ‘ராமன் பிறந்த இடம் என்ற அடிப்படையில் பாபர் மசூதி நிலத்தின் மீது உரிமை கோரும் மனு’ எதுவும் 1989 வரை தாக்கல் செய்யப்படவில்லை. “வெறும் உரிமையியல் வழக்கின் மூலம் முஸ்லிம்களிடமிருந்து இந்த இடத்தை சட்டரீதியில் கைப்பற்ற முடியாது; இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 25 வழங்கும் மத நம்பிக்கைக்கான உரிமையின் கீழ் இந்த வழக்கைக் கொண்டு வருவதன் மூலம்தான் சட்டப்படியே இதனைக் கைப்பற்ற முடியும்” என்ற சூட்சுமம் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி தேவகி நந்தன் அகர்வாலுக்கு மட்டுமே அன்று புரிந்திருந்தது. நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற உடனே, குழந்தை இராமனையே மனுதாரர் ஆக்கி, குழந்தை இராமனின் நெருங்கிய நண்பர், காப்பாளர் என்ற முறையில் 1989 இல் மேற்கூறிய வழக்கில் தன்னையும் இணைத்துக் கொண்டார் தேவகி நந்தன் அகர்வால்.  அடுத்த சில ஆண்டுகளில் தேவகி நந்தன் அகர்வால் இறந்து விடவே, அவருக்குப் பதிலாக ‘ராமனின் நண்பனாக’ திரிலோக்நாத் பாண்டே என்பவர் வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தற்போது அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் இறுதித்தீர்ப்பு, பாபர் மசூதி வளாகத்தை மூன்றாகப் பிரித்து மூன்று மனுதாரர்களுக்கும் தரவேண்டும் என்று கூறியிருக்கிறது எனினும், சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா ஆகிய இருவரது மனுக்களும் உரிமையியல் வழக்குக்கு உரிய கால வரம்பு (Limitation Period) கடந்து தாக்கல் செய்யப்பட்டவை என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. மசூதி அமைந்துள்ள இடத்தின் மீது உரிமை கோரும் ராமபிரானது மனு மட்டுமே நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
பட்டா, பத்திரம் போன்ற ஆவணங்களின் அடிப்படையிலோ, அனுபோக பாத்தியதை குறித்த ஆதாரங்களின் அடிப்படையிலோ பரிசீலித்து தீர்ப்பு வழங்க வேண்டிய ஒரு உரிமை மூல வழக்கில், அவற்றையெல்லாம் புறக்கணித்து விட்டு, கடவுளின் சொத்துரிமை மற்றும் கடவுள் குறித்த இந்து பக்தனின் நம்பிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இத்தீர்ப்பில் உள்ள குறைபாடுகள், முறைகேடுகள் குறித்து வேறு பல கேள்விகளை எழுப்ப இயலுமெனினும், இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 25 (மத நம்பிக்கை தொடர்பான உரிமை), பிரிவு 26 (மத நிறுவனங்களின் சொத்துக்கள் தொடர்பான உரிமை) ஆகியவைதான் அநீதியான இந்தத் தீர்ப்புக்கு அடித்தளமாக அமைந்திருக்கின்றன. எனவே அவை குறித்து புரிந்து கொள்வது அவசியம்.

சிவில் வழக்கில் இராமன் (கடவுள்) ஒரு மனுதாரர் ஆக முடியுமா?

இந்த வழக்கில் ‘குழந்தை இராமன் சிலை’ ஒரு மனுதாரராக சேர்க்கப்பட்டிருப்பது குறித்து ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். உரிமையியல் சட்ட விதி 32 இன் படி (Order 32 of the civil procedure code) இந்துக் கோயிலின் கடவுள் சிலை சட்டரீதியான ஒரு நபராகவும், நிரந்தரமான மைனராகவும் கருதப்படுகிறது. ஒரு சிலை என்ற முறையிலும் மைனர் என்ற முறையிலும் அது தானே தனக்காகப் பேசும் ஆற்றலற்றது என்பதால், ஒரு காப்பாளர், அறங்காவலர் அல்லது பக்தர் மூலமாக மற்றவர்கள் மீது வழக்கு தொடுக்கும் உரிமை கடவுள் சிலை பெற்றிருக்கிறது. அரசியல் சட்டரீதியான இந்த உரிமையை கடவுள் சிலை பெற்றிருப்பதால், அரசியல் சட்டத்துக்கு முரணாக அந்தக் கடவுள் இழைத்திருக்கக் கூடிய குற்றங்களுக்காக அந்தக் கடவுளுக்கு எதிராக சிவில் அல்லது கிரிமினல் வழக்குகளை யாரும் தொடர முடியாது. சொத்து தொடர்பான வழக்குகளை மட்டுமே கடவுளுக்கு எதிராகத் தொடரமுடியும்.
இந்திய அரசியல் சட்டம் இந்துக் கடவுளுக்கு வழங்கியிருக்கும் இந்த உரிமை இசுலாமிய, கிறித்தவ கடவுளர்களுக்கோ பிற மதக் கடவுளர்களுக்கோ கிடையாது. உலகின் வேறு எந்த நாட்டிலும் கடவுளுக்கு இப்படிப்பட்ட சட்டரீதியான உரிமை கிடையாது. கடவுளின் பெயரில் சொத்தை பதிவு செய்து விட்டு அதிகாரத்தில் இருக்கும் மன்னனோ, நிலப்பிரபுவோ, அறங்காவலரோ அதனை அனுபவிக்கும் வசதிக்காக பாரம்பரியமாக செய்யப்பட்டிருக்கும் இந்த ஏற்பாட்டை அரசியல் சட்டம் அங்கீகரித்திருக்கிறது. தில்லை நடராசனுக்கு எழுதி வைக்கப்பட்ட நிலத்தை நடராச தீட்சிதர் கையெழுத்துப் போட்டு விற்கும் முறைகேடுகள் இந்த ஏற்பாட்டின் மூலம்தான் சாத்தியமாகியிருக்கின்றன. “உலகம் கடவுளுக்கு கட்டுப்பட்டது, கடவுள் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவர், மந்திரம் பார்ப்பானுக்கு கட்டுப்பட்டது, எனவே உலகம் பார்ப்பானுக்கு கட்டுப்பட்டது” என்று கூறப்படும் சமஸ்கிருத சுலோகம் இதற்கும் பொருந்தும்.
சட்டப்பிரிவு 25 இந்துக் கடவுளுக்கு வழங்கியுள்ள இந்த தனிநபர் என்ற சட்டரீதியான அந்தஸ்தை, கார்ப்பரேஷன்களுக்கு (முதலாளித்துவ கூட்டுப்பங்கு நிறுவனங்கள்) வழங்கப்பட்டுள்ள உரிமையுடன் ஒருவகையில் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளலாம். போபால் வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சன் மீது மட்டுமின்றி யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் மீதும் கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது. எனினும் சட்டப்படி ஆண்டர்சனைத்தான் கைது செய்ய முடியுமேயன்றி, கார்ப்பரேஷனைக் கைது செய்ய முடியாது.
அயோத்தி - இராமன் தொடுத்த வழக்கு! குரங்கு எழுதிய தீர்ப்பு!! – தோழர் மருதையன் a'இந்துக் கடவுள் விசயத்தில், கடவுளின் குற்றத்துக்காக கடவுள் மீது மட்டுமல்ல, கடவுளின் காப்பாளர் மீதும் வழக்கு தொடர இயலாது. அதே நேரத்தில் கடவுள் சிலை நிரந்தரமான மைனர் என்ற சட்ட அந்தஸ்தைப் பெற்றிருப்பதால், உரிமையியல் வழக்கில் வக்பு வாரியத்துக்கும், நிர்மோகி ஆகாராவுக்கும் விதிக்கப்பட்டுள்ள கால வரம்பு என்பது கடவுளுக்குக் கிடையாது. இந்த அடிப்படையில்தான், 1949 இல் எழுந்த பிரச்சினைக்கு 1961 இல் தாக்கல் செய்யப்பட்ட அவர்களது மனுக்கள் காலம் கடந்தவை என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன. அதே நேரத்தில் 1989 இல் இராமபிரானின் சார்பில் தேவகி நந்தன் அகர்வால் தாக்கல் செய்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்துக் கடவுள் பெற்றிருக்கும் இந்த சிறப்புரிமையை அரசியல் சட்டத்தின் 25, 26 வது பிரிவுகளே வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இராமன் பிறந்த இடம் என்பதனாலேயே அது இராமனின் சொத்தாகிவிட முடியுமா? பக்தனின் வழிபாட்டு உரிமை சொத்துரிமை ஆகிவிட முடியுமா?
இத்தீர்ப்புக்கு எதிரான விமரிசனங்கள் மற்றும் கேள்விகளில் இவை இரண்டும் மிகவும் முக்கியமானவை. ‘மசூதியின் மையப்பகுதியில்தான் இராமன் பிறந்தான்’ என்று இந்துக்கள் நம்புவதாக மூன்று நீதிபதிகளுமே ஏற்றுக்கொள்கிறார்கள். அயோத்தியிலேயே சுமார் 5,6 இடங்கள் இராமன் பிறந்த இடங்களாக கருதப்பட்டு வந்தன. பாபர் மசூதிதான் இராமன் பிறந்த இடம் என்ற கருத்து இந்து பாசிஸ்டுகளால் 80 களில் தொடங்கி உருவாக்கப்பட்ட கருத்தேயன்றி, இந்துக்கள் அனைவரின் நம்பிக்கை அல்ல. இராமன் கடவுள் என்பதும் எல்லா இந்துக்களின் நம்பிக்கை அல்ல, இராவணனைக் கடவுளாக வழிபடும் இந்துக்களும் உண்டு. இந்துக்கள் மத்தியிலேயே நிலவும் இத்தகைய மாற்றுக் கருத்துகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு, சங்கபரிவாரம் உருவாக்கிய கருத்தையே இந்து சமூகத்தின் தொன்மையான, அத்தியாவசியமான நம்பிக்கை என்று வழிமொழிகிறது இத்தீர்ப்பு.
ஒரு குறிப்பிட்ட மதத்தின் சாராம்சமான நம்பிக்கை எது என்று வியாக்கியானம் அளிக்கவும், அதன் அடிப்படையில் அரசியல் சட்டத்தின் 25 வது பிரிவின் கீழ் அந்த மதத்தினரின் உரிமைகளை அனுமதிக்கவுமான அதிகாரத்தை உயர்நீதி மன்றத்துக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் அரசியல் சட்டம் வழங்கியுள்ளது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தியே இது இந்துக்களின் நம்பிக்கை என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறுகிறது.
அது இந்துக்களின் நம்பிக்கைதான் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும், அத்தகைய மத நம்பிக்கையின் அடிப்படையில் மாற்றான் சொத்தின் மீது உரிமை கோரமுடியுமா என்ற கேள்விக்கு இத்தீர்ப்பு கீழ்க்கண்டவாறு பதிலளிக்கிறது. இராமன் மட்டும்தான் கடவுள், அவன் பிறந்த பூமி என்பது ஒரு அசையாச் சொத்து என்று பார்ப்பது தவறு என்றும், இராமன் பிறந்த அந்த இடமே (பூமியே) வாயு பகவானைப் போல தன்னளவில் அங்கே விரவி நிற்கின்ற கடவுளாகும் என்று கூறி ஸ்மிருதிகளை மேற்கோள் காட்டி விளக்கம் அளிக்கிறது இத்தீர்ப்பு.
ஒரு கோயில் இடிக்கப்பட்டு விட்டாலும், அங்கே கடவுள் சிலையே இல்லாமல் போனாலும், அந்த இடம் தனது தெய்வீகத்தன்மையை இழந்து விடுவதில்லை என்றும், கோயில் இருந்த அந்த இடமே ஒரு கடவுளாகவும், வழக்காடும் உரிமை பெற்ற நபராகவும் இருக்கிறது என்று கூறுகின்றது இத்தீர்ப்பு. இதற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் அலகாபாத் நீதிமன்றம் மேற்கோள் காட்டுகிறது.
எனவே, இந்தத் தீர்ப்பின் படி, குறிப்பிட்ட அந்த இடத்தில் இராமன் சிலை இருந்தாலும் இல்லாமல் போனாலும் அவன் பிறந்த பூமி என்பதே சுயம்புவான கடவுளாகிவிடுகிறது. நிலம் என்ற முறையில் அது ஒரு சொத்துக்கான தன்மையைப் பெற்றிருப்பது உண்மையே என்றாலும், அந்த நிலமே கடவுளாகவும் இருப்பதால் அந்த இடத்தை (இராமனைத் தவிர) வேறு யாரும் தமது சொத்தாக ஆக்கிக் கொள்ள முடியாது. இறையாண்மை கொண்ட அரசாங்கத்துக்கே கூட அந்த நிலத்தை (கடவுளை) கையகப்படுத்தும் அதிகாரம் கிடையாது என்கிறது இந்தத் தீர்ப்பு.
கோயில் இடிக்கப்பட்டாலும் கோயிலின் கடவுள் தன்மை அகன்றுவிடுவதில்லை என்ற அடிப்படையிலும், ராம ஜென்மபூமியே கடவுளாக இருப்பதாலும், மசூதியைக் கட்டிய பின்னர்கூட அந்த இடம் பாபருடைய சொத்தாகி விட்டதாகக் கருத முடியாது; அது இராமனுடைய சொத்தாகவே இருக்கிறது என்று விளக்கமளிக்கிறது இத்தீர்ப்பு. மேலும் உரிமையியல் சட்டப்படி இந்துக் கடவுள் நிரந்தர மைனர் என்று கருதப்படுவதால், மைனரின் சொத்தை எதிர் அனுபோகத்தின் மூலம் (adverse possession) பிறர் கைப்பறிக் கொள்வது செல்லத்தக்கதல்ல என்று, உரிமையியல் சட்டத்தின் அடிப்படையிலும் இதற்கு விளக்கமளிக்கிறது அலகாபாத் தீர்ப்பு. அந்த இடத்தில் ஒரு மசூதி இருந்தது என்ற உண்மையையே நிராகரிக்கும் இந்த வாதத்துக்கும், பக்தனின் மத நம்பிக்கை வழியாக கடவுள் தன்னுடைய சொத்துரிமையை நிலைநாட்டிக் கொள்ளும் ஏற்பாட்டுக்கும் அரசியல் சட்டத்தின் 25ஆவது பிரிவுதான் அடித்தளமாக இருக்கிறது.
அயோத்தி - இராமன் தொடுத்த வழக்கு! குரங்கு எழுதிய தீர்ப்பு!! – தோழர் மருதையன் a'
இந்து மதவெறி பாசிஸ்டுகளால் இடிக்கப்படும் பாபர் மசூதி

இராம ஜென்மபூமி புனிதம் என்றால், மசூதி புனிதமில்லையா?
சட்டத்தின் முன் அனைவரும் சமம் இல்லையா?

எதார்த்தமாக சிந்திக்கும் எந்த ஒரு மனிதனுக்கும் எழக்கூடிய நியாயமான கேள்வி இது. எல்லாக் குடிமக்களுக்கும் சமமான மத உரிமை இருப்பதாக நாம் கருதிக் கொண்டிருக்கலாம். ஆனால் நமது அரசியல் சட்டம் அவ்வாறு கூறவில்லை. மதம் என்பது ஒரு தனிமனிதனின் நம்பிக்கை சார்ந்த விசயம் மட்டுமே என்று வரையறுக்கப்படும் இடத்தில்தான் இந்த உரிமை சமமானதாக இருக்க முடியும். நமது அரசியல் சட்டம் மதநிறுவனங்களின் உரிமையையும் அங்கீகரிப்பதால், தனிநபரின் மத உரிமை என்பது நிறுவனத்தின் உரிமைக்கு உட்பட்டதாகிறது.
மத உரிமைகளைப் பொருத்தவரை “ஒவ்வொருவருக்கும் அவரவர் மதக் கோட்பாட்டுக்கு ஏற்ப” என்றுதான் அரசியல் சட்டத்தின் பிரிவு 25 கூறுகிறது. இந்த அடிப்படையில்தான் இந்து மதத்தில் பார்ப்பனரல்லாதாரும், பெண்களும் அர்ச்சகராக முடியாமல் தடுக்கும் ஆகமவிதிகளும், இசுலாமிய ஆண்களுக்கு நிகரான உரிமைகளைப் பெண்களுக்கு மறுக்கும் ஷரியத் சட்டமும் சட்டப்பிரிவு 25இனால் நியாயப்படுத்தப் படுகின்றன.
ஒரு மதத்தின் உறுப்பினர்களுக்குள் ஏற்றத்தாழ்வை அனுமதிக்கும் இந்த சட்டப்பிரிவுதான், இரு வேறு மதத்தினருக்கு இடையிலான உரிமையிலும் ஏற்றத்தாழ்வைக் கொண்டுவருகிறது. இந்திய விமானப்படையில் பணியாற்றும் சீக்கியர்கள் தாடி வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பதைப் போல, தன்னையும் அனுமதிக்க வேண்டும் என்ற ஒரு முஸ்லிம் விமானப்படை அதிகாரி தொடுத்த வழக்கை  நிராகரித்த உச்சநீதிமன்றம், ஒரு சீக்கியர் தாடி வைத்துக் கொள்வது சீக்கிய மதக் கோட்பாடுகளின் படி அத்தியாவசியமானது என்றும், ஆனால், ஒரு முஸ்லீமுக்கு தாடி அத்தியாவசியம் என்று இசுலாமிய மதக் கோட்பாடுகள் கூறவில்லை என்றும் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.
‘கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம், குறிப்பிட்ட இடம் இராமன் பிறந்த இடம்’ என்ற நம்பிக்கைகள் இந்து சமூகத்தின் புனிதமான, புராதனமான, அத்தியாவசியமான நம்பிக்கைகள் என்று அங்கீகரிக்கும் அலகாபாத் தீர்ப்பு, “இசுலாமியக் கோட்பாடுகளின் படியே மசூதி என்பது புனிதமானதோ, இறைவனின் இருப்பிடமோ இல்லை” என்றும் விளக்கம் கூறுகிறது. ‘தொழுகை நடத்துவதற்கான ஒரு இடம்’ என்பதற்கு மேல் மசூதிக்கு மதம் சார்ந்த புனிதத்தன்மை எதுவும் கிடையாது என்று ஏற்கெனவே உச்சநீதிமன்றமும் (இஸ்மாயில் பரூக்கி வழக்கு) இது குறித்து தீர்ப்பளித்துள்ளது.
இன்னும் ஒரு படி மேலே போய், இசுலாமியக் கோட்பாடுகளின் படியே ஒரு மசூதிக்குரிய இலக்கணங்கள் பாபர் மசூதிக்கு இல்லை என்பதை தனது தீர்ப்பில் விளக்குகிறார் நீதிபதி சர்மா. தனிநபரின் நம்பிக்கை, வழிபாட்டு உரிமை ஆகியவற்றைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மதக் கோட்பாடுகளை முன்நிறுத்தும் இந்த அணுகுமுறைதான் அரசியல் சட்டப்பிரிவு 25 இன் சாரமாகவும் இருக்கிறது.
1949 இல் திருட்டுத்தனமாக ராமன் சிலை வைக்கப்பட்டதா இல்லையா? 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதா இல்லையா? இவை குறித்து தீர்ப்பு என்ன கூறுகிறது?
திருட்டுத்தனமாக சிலை வைக்கப்பட்டதை மூன்று நீதிபதிகளும் ஏற்கின்றனர். ஆனால் அது பற்றி தீர்ப்பு கருத்து எதுவும் கூறவில்லை. ஒரு வேளை சிலை வைக்கப்பட்டிராவிட்டாலும், இராமஜென்மபூமி என்ற அடிப்படையில், அந்த இடமே கடவுள்தான் என்பதே பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்து. மசூதிக்குள் சிலை வைக்கப்பட்டதன் காரணமாக, சிலை வணக்கத்தை மறுக்கும் முஸ்லிம்கள் அங்கே தொழுகை நடத்தவில்லை. அதே நேரத்தில் அங்கே பூசைநடத்த நீதிமன்றம் அனுமதித்திருக்கிறது. தொழுகை நடத்தவில்லை என்பதை, முஸ்லீம்களது அனுபோகத்தில் மசூதி இல்லை என்பதற்கான சான்றாக நீதிமன்றம் எடுத்துக் கொண்டிருக்கிறது.
1992 மசூதி இடிப்பைப் பற்றி இத்தீர்ப்பு எதுவுமே கூறவில்லை. மசூதி என்பது முஸ்லிம் மதத்தைப் பொருத்தவரை புனிதமான இடம் என்று கருதப்படுவதில்லை என்பதால், பாபர் மசூதி இடிப்பு என்பதை ஒரு வழிபாட்டுத் தலத்தை இடித்ததாக சித்தரிக்க முடியாது என்றும், சட்டவிரோதமாக ஏதோ ஒருகட்டிடம் இடிக்கப்பட்டது என்பதற்கு மேல் டிசம்பர் 6ஆம் தேதி நிகழ்வில் எந்த முக்கியத்துவமும் இல்லை என்றும், இஸ்மாயில் பரூக்கி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் காட்டி சுப்பிரமணியசாமி கருத்து கூறியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.அலகாபாத் தீர்ப்பும் இந்த கண்ணோட்டத்தையே பிரதிபலிக்கிறது.
1949 சிலை வைப்பும்,  1992 மசூதி இடிப்பும் குற்றச்செயல்கள். குற்றத்தில் பிறந்தது எப்படி கோயில் ஆக முடியும், புனிதமானதாக முடியும்?
சட்டப்படி குற்றம் என்று வரையறுக்கப்பட்டுள்ள பல நடவடிக்கைகள், மத ரீதியில் புனிதமாக்கப்பட்டிருக்கின்றன. அவை மத உரிமைகளாகவும் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. பால்ய விவாகம் என்பது சட்டப்படி குற்றம். ஆனால் பால்ய விவாகம் நடந்து முடிந்து விட்டால், அதனை நடத்தி வைத்தவர்களைத் தண்டிக்க முடியுமே அன்றி, அந்தத் திருமணம் செல்லாது என்று ஆகிவிடாது. இதுதான் சட்டத்தின் நிலை. அதே போல, மசூதியை இடித்ததும், திருட்டுத்தனமாக சிலையை வைத்ததும் குற்ற நடவடிக்கைகளே என்றபோதிலும், அவ்வாறு வைக்கப்பட்ட சிலை புனிதமற்றது ஆகிவிடுவதில்லை. பக்தர்களும் வழிபாட்டு உரிமையை இழந்து விடுவதில்லை.  சட்டவிரோதமானவை எனினும், சட்டப்பிரிவு 25 வழங்கும் மத நம்பிக்கைக்கான உரிமையால் இந்த குற்றங்கள் புனிதப்படுத்தப்பட்டிருக்கின்றன.
தொகுத்துக் கூறினால்,
1992 மசூதி இடிப்பு என்பது இந்து பாசிஸ்டுகள் நிகழ்த்திய ஒரு கிரிமினல் நடவடிக்கை. தற்போதைய தீர்ப்பு அந்த மசூதி இடிப்பை சட்டரீதியாக நியாயப்படுத்துகிறது. ஒருவேளை 1992இல் மசூதி இடிக்கப்பட்டிராவிட்டால், தற்போதைய தீர்ப்பை அமல்படுத்துவதற்காக மசூதியை இடிக்கச்சொல்லி அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்திரவிட்டிருக்குமா என்றுகூட தீர்ப்பை விமரிசிக்கும் சிலர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
அரசியல் சட்டப்பிரிவு 25 இந்து பாசிஸ்டுகளின் கருத்தை அரசியல் ரீதியாக வழிமொழிகிறது. 1949இல் திருட்டு சிலைக்கு வழிபாடு நடத்த அனுமதித்தது முதல், 1992 டிசம்பர் 6 அன்று பஜனை பாட உச்சநீதிமன்றம் அளித்த அனுமதி வரையில் அனைத்தும் சட்டப்பிரிவு 25ந்தால்தான் நியாயப்படுத்தப்படுகின்றன.
வேறு வார்த்தைகளில் சொல்வதாயின், இந்து பாசிஸ்டுகள் கடப்பாரை ஏந்தும் உரிமையை வழிபாட்டுரிமை என்ற பெயரில் உத்திரவாதப்படுத்தியது சட்டப்பிரிவு 25. தற்போது மசூதி இடிப்பை நியாயப்படுத்தியிருப்பதும் சட்டப்பிரிவு 25 தான். இவை இரண்டுக்கும் இடையிலான இடைவெளியில் நிகழ்ந்த சம்பவம்தான் மசூதி இடிப்பு.
எனவே, இனி ஒரு மசூதி இடிப்பு நடைபெறாமல் தடுக்க வேண்டுமானால், மசூதி இடிப்பின் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டுமானால், அலகாபாத் தீர்ப்பை முறியடிக்க வேண்டுமானால், பார்ப்பனியத்தையும், பார்ப்பன பாசிசத்தையும், எல்லா வகையான மதப் பிற்போக்குகளையும் பாதுகாத்து நிற்கும் அரசியல் சட்டத்தின் பிரிவு 25 மற்றும் 26ஐ நாம் இடித்துத் தள்ள வேண்டும். தற்போதைய அரசியல் சட்டத்தின் வரம்புக்குள் நின்று பார்ப்பனியத்தையோ, பார்ப்பன பாசிசத்தையோ ஒரு சில சந்தர்ப்பங்களில், ஒரு சில அம்சங்களில் கட்டுப்படுத்த மட்டுமே முடியும். ஆனால் பார்ப்பனியம் மற்றும் மதப்பிற்போக்கின் ஆன்மாவைப் பாதுகாக்கும் கவசங்களாகவே மேற்கூறிய இரு சட்டப்பிரிவுகளும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு அதனை இன்னொருமுறை நிரூபித்திருக்கிறது. இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்ற உண்மையை அம்பலப்படுத்துவதற்கான வாய்ப்பையும் அளித்திருக்கிறது.