ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 5

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 5

இன்று உலகில் அதிக குற்றங்களை செய்பவர்களை உடைய நாடு என்பது கிறிஸ்தவ நாடுகளாய்த்தான் உள்ளது. லட்சிய மற்ற வாழ்க்கையை வாழ்ந்து வரும் அந்நாட்டு மக்கள் போதை, காமம் ஆகியவற்றுக்கு உட்பட்டு நம்பிக்கையற்ற வாழ்க்கை நடத்தி வருவதுடன் சமுதாய சீர்கேட்டிற்குக் காரணமாய் இருந்து வருகிறார்கள். இசுலாம் நாடுகளில் ஜனநாயகம் என்பது மருந்திற்குக் கூட இல்லாத நிலை. ஒரு நாடு ஒரு நாட்டை ஏப்பம் விட்டு வருகிறது. இசுலாத்தால் உலகத்தில் சமாதானத்திற்குப் பதில் சகிப்பற்ற தன்மையும் யுத்தமும்தான் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் ஒரு உலகப்போர் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் ஒரு உலகப்போர் ஏற்படுமானால் அது கிறித்தவ நாடான அமெரிக்காவின் ஆதிக்க வெறியாலோ, அல்லது உலகம் முழுவதும் இசுலாம் மயமாக்க விரைந்து செயல்பட்டு வரும் முசுலீம் நாடுகளாலோதான் ஏற்படும். இது உலக சமாதானத்திற்கு ஆபத்தையே ஏற்படுத்தும்.

-  ‘மதமாற்றத் தடைச்சட்டம் ஏன்?’
இந்து முன்னணி வெளியீடு. பக்:42.
”மேலை நாடுகளில் உள்ள பெண்கள் யார் அழைத்தாலும் சோரம் போவார்கள். ஆண்கள் காமவெறியுடன் குடி, கூத்து என்று அலைகிறார்கள். இத்தகைய பண்பாட்டுச் சீரழிவுக்குக் காரணம் கிறித்தவ மதம். இசுலாமிய நாடு என்றால் கோமேனி, சதாம் உசேன், இடி அமீன், கடாஃபி, ஜியாவுல் ஹக், தாலிபான், பின்லேடன் போன்ற சர்வாதிகாரிகள், பயங்கரவாதிகள்தான் நினைவுக்கு வருவார்கள். இதற்குக் காரணம் முசுலீம் மதம்.இவற்றுடன் ஒப்பிடும் போது நம் நாட்டின் ஜனநாயகம், அகிம்சை, உயர்ந்த பண்பாடு ஆகியவற்றின் அடிப்படை இந்து மதம்தான்.” இவைதான் இந்நூற்றாண்டு முழுவதும் இந்தியச் செய்தி நிறுவனங்கள் உருவாக்கி வரும் பொதுக்கருத்துக்கள். இதிலிருந்து கட்டியமைக்கப்பட்ட விசமப்பிரமச்சாரம்தான் மேற்கண்ட இந்துமத வெறியர்களின் அவதூறு.
இது உண்மைதானா என்று பரிசீலிப்பதற்கு இவர்கள் கூறுகின்றன ஜனநாயகம், உயர்ந்த பண்பாட்டை இந்து மதமும் இன்றைய இந்தியாவும் கொண்டுள்ளதா என்பதைப் பார்போம்.

இந்து மதம் ஜனநாயக மதமா?

முதலில் இந்து மதம் ஒரு மதமே அல்ல. மதம் என்ற வகையில் உள்ள ஆன்மீக விசயங்களைவிட, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற சட்டதிட்டங்களே அதனுடைய சாரம். நேற்றும் இன்றும் இந்திய வாழ்வின் பல நிலைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் அந்தச் சாரத்தின் அடிப்படையே ஜனநாயக மறுப்புதான்.
சாதி, மொழி, இன, பாலியல் ஒடுக்குமுறைதான் இந்து மதத்தின் நான்கு வேதங்கள். இம்மையில் மட்டுமல்ல மறுமையில் கூட உழைக்கும் மக்களுக்கு விடுதலை கிடையாது என்று கூறும் மதம் இது மட்டுமே. வாழ்க்கை முறை, சட்ட திட்டம், தண்டனை அனைத்தும் பார்ப்பன – சமஸ்கிருத இலக்கியங்கள் முழுவதிலும் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இலக்கியத்தில் மட்டுமல்ல, இன்று வரை நடைமுறையிலும் இவை இந்திய உழைக்கும் மக்களை மூழ்கடித்தே வந்திருக்கின்றன. இப்படி பிறப்பு முதல் இறப்பு வரை பெரும்பான்மை மக்களுக்கு ஜனநாயகத்தை மறுத்த கொடூரமான வாழ்க்கை விதிகள் பைபிளிலோ, குர்-ஆனிலோ நிச்சயம் இல்லை.

இந்து மதம் ஒழுக்கமான மதமா?

வாத்ஸ்யாயனரின் காமசூத்திரம், அச்சில் ஏற்ற முடியாத ஆதி சங்கரனின் சௌந்தர்ய லஹரி, அஜந்தா – கஜுராகோ சிற்பங்கள் போன்றவையும், புராணங்களின் காமவெறி வக்கிரங்களும் இவர்களின் ஒழுக்கத்தைப் பறைசாற்றுகின்றன. ஓடிப்போன சங்கராச்சாரி, கம்பி எண்ணி காலஞ்சென்ற பிரேமானந்தா முதல் கிராமத்தின் குறி சொல்லும் சாமியாடி வரை, இந்து மதத்தின் ஒழுக்கத்தைப் பறைசாற்ற அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம் பெறுகிறார்கள்.
அடுத்து சூத்திரன் என்ற நான்காம் வருண மக்களுக்கு இந்து மதம் கூறுகின்ற பொருளைப் பார்ப்போம். படிதாண்டிய மேல் வருண – சாதிப் பெண்களுக்கும், கீழ் வருண – சாதி ஆண்களுக்கும் பிறப்பவர்களே சூத்திரன் அதாவது வேசிமகன் என்று பார்ப்பனியம் வரையறுத்தது. இப்படி தன் சொந்த நாட்டின் பெரும்பான்மை ஆண்களையும், பெண்களையும்  ஒழுக்கம் கெட்டு சோரம் போனவர்கள், வேசி மக்கள் என்று வரையறுத்து நடத்திய ஒரே மதம் இந்து மதம்தான், இத்தகைய கேவலத்தை உலக மதங்கள் எவற்றிலும் பார்க்க முடியாது என்கிறார் அம்பேத்கர்.
சரியோ, தவறோ ஒரே வகையான ஒழுக்கத்தை தத்தமது மதங்களில் இருக்கும் அனைவரும் பின்பற்ற வேண்டும் என ஏனைய மதங்கள் கூறுகின்றன. ஆனால், இந்து மதம் மட்டுமே சாதி – வருணத்திற்கேற்றபடி ஒழுக்கம் சட்ட திட்டங்களை மாற்றி அமல்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக மேல்சாதி – வருண ஆண்கள் எல்லா சாதிப் பெண்களையும் பெண்டாளலாம்; கீழ் சாதியினரைக் கொலை செய்யலாம்; வரையறை இல்லாமல் சொத்து சேர்க்கலாம் – தானம் பெறலாம் – கொள்ளையடிக்கலாம்; இந்த ‘சலுகைகள்’ கீழ் சாதியினருக்குக் கிடையாது என்பதோடு இவற்றுக்கு உட்பட்டே வாழவேண்டும். மீறினால் மரணதண்டனை. இது புராணக் கதையல்ல என்பதையே கோபாலகிருஷ்ண நாயுடுக்களும், ரன்பீர் சேனாக்களும் நிரூபித்து வருகின்றனர்.

இந்து மதம் அகிம்சையான மதமா?

பிற மதங்கள் வாயளவிலாவது அகிம்சையைப் போதிக்கின்றன. குறைந்த பட்சம் தன் மதத்தினரிடையேயாவது அகிம்சையைப் பின்பற்றுமாறு வலியுறுத்துகின்றன. ஆனால், இந்து மதம் மட்டுமே தன் மதத்தினர் மீதே வன்முறை – பயங்கரவாதத்தை ஏவிவிடுகிறது. தர்மம் என்ற பெயரில் நியாயப்படுத்துகிறது. சம்பூகன், ஏகலைவன், நந்தன் ஆகியோரைப் பிரதிநிதிகளாகக் கொண்டுள்ள சூத்திர – பஞ்சம மக்கள்தான் இந்துமத வன்முறைக்குப் பலியானவர்களின் சாட்சியங்கள்.

இந்தியா பண்பாட்டுச் சீரழிவு இல்லாத நாடா?

பிஞ்சுக் குழந்தைகளுக்கு இன்றுவரை திருமணம் நடத்தும் இராஜஸ்தான் மாநிலம் இந்தியாவில்தான் இருக்கிறது. மூன்று லட்சம் குழந்தைகளை வைத்து சிறார் விபச்சாரத்தில் உலகிலேயே இரண்டாம் இடத்தைப் பெற்ற நாடும் இதுதான். எயிட்ஸ் தடுப்புப் பிரச்சாரத்திற்கு அதிகம் செலவழிக்கும் ஆசிய நாடும், எயிட்ஸ் நோய் வேகமாகப் பரவுவதில் முதல் நிலையிலுள்ள நாடும் இந்தியாதான். பெண் சிசுக்கொலை, கட்டி வைத்து எரிக்கப்படும் கலப்பு மணக்காதலர்கள், ஸ்டவ் வெடித்துச் சாகும் மருமகள்கள், உடன் கட்டை ஏற்றிக் கொல்லப்படும் இளம்பெண்கள், உலகின் பழம்பெரும் விபச்சார நிறுவனமான தேவதாசி முறை ஆகியவற்றின் உறைவிடம் இந்தியாதான்.
மேலவளவுப் படுகொலை, தாழ்த்தப்பட்டவரின் இரத்தத்தில் பெயர் எழுதும் ரன்பீர் சேனா, முசுலீம்களின் தலைகளை விதைத்துப் பயிரிடப்பட்ட பகல்பூரின் காலிஃபிளவர் வயல்கள், சிறுநீரகங்களை அறுத்துக் கொடுத்துக் கடன் வாங்கும் நெசவாளர்கள், கடன் அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் பருத்தி விவசாயிகள் – இவற்றினை உலக வரலாற்றில் பார்ப்பது சிரமம். இந்தியப் போலீசின் உதவியோடு லாக்கப் கொலை – கற்பழிப்பிலும் இந்தியாவே முதலிடத்தில் வருகிறது. மேலும் தொழுநோய், காசநோய், யானைக்கால், பெரியம்மை, பார்வையற்றோர், ஊழல் இவற்றிலும் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கின்றது.

இந்தியா ஜனநாயக நாடா?

பல இசுலாமிய நாடுகளை ஒப்பிடுகையில் இங்கே பெயரளவில் ஜனநாயகம் இருப்பது உண்மைதான். ஆனால், ‘பெயரளவில்’ என்ற பொருள்தான் மிகவும் முக்கியம். இப்படி பெயரளவு ஜனநாயகம் கிடைப்பதற்குக் காரணம் இந்து மதப் பாரம்பரியம் அல்ல. பார்ப்பனிய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, சாதி – தீண்டாமை எதிர்ப்பு, பெண்ணடிமைத்தன எதிர்ப்பு, மன்னர் எதிர்ப்பு மற்றும் ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களின் தவிர்க்க இயலாத விளைவாகத்தான் இந்த ஜனநாயகம் கிடைத்தது. இந்த ஜனநாயகத்தைப் பற்றி பெருமையடிக்கும் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் ஜனநாயகப் போராட்டங்கள் அனைத்தையும் எதிர்த்தே வந்திருக்கிறது.
இவர்களும், இவர்களின் முன்னோடிகளும், காங்கிரசில் இருந்த பார்ப்பன – மேல்சாதி வெறியர்களும், தேவதாசி ஒழிப்பு, விவாகரத்து சட்டம், வைக்கம் போராட்டம், தீண்டாமை எதிர்ப்புப் போராட்டம், இந்து சிவில் சட்டம் அனைத்தையும் வன்மம் கொண்டு எதிர்த்ததே இந்நூற்றாண்டின் வரலாறு. எனவே இந்துமத வெறியர்களை ஓரளவுக்கேனும் முறியடித்ததால் கிடைத்ததே இந்தப் பெயரளவு ஜனநாயகம். இவர்களை முழுமையாக வீழ்த்தும் போதுதான் உண்மையான ஜனநாயகம் கிடைக்க முடியும். ஆனால், ‘ஜனநாயகம்’ பேசும் இந்து மதவெறியாளர்களின் நோக்கம், இசுலாமிய நாடுகளைக் காட்டி இங்கேயும் பெயரளவு ஜனநாயக உரிமைகளை ரத்து செய்வதுதான்.

இந்தியா பயங்கரவாதத்தைப் பரப்பாத நாடா?

பயங்கரவாதம் என்பது யாரோ சில தீவிரவாதிகள் பாலத்துக்கோ, பிரதமருக்கோ குண்டு வைப்பது மட்டுமல்ல. உண்மையில் அரசு ஏவிவிடும் பயங்கரவாதத்தின் எதிர்விளைவுதான் பிரதானமானது. கலவரங்கள் அதிகமில்லாத குஜராத்தில் 15,000 பேர் தடா சட்டத்தில் கைதானது, பஞ்சாபில் 25,000 இளைஞர்கள் கொல்லப்பட்டுக் காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்த்தது, காஷ்மீரில் காணாமல் போனவர்களைத் திருப்பித் தருமாறு ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களைக்கூட காக்கை குருவி போல சுட்டுக்கொல்வது, வடகிழக்கில் போராளிகளையும், ஆந்திரா – பீகாரில் நக்சல்பாரி புரட்சியாளர்களையும் போலி மோதலில் சுட்டுக் கொல்வது, பஞ்சாப், ஈழம், வடகிழக்கு, காஷ்மீரில் போராடுகின்ற குழுக்களை உடைத்து கைக்கூலிக் குழுக்களை உருவாக்கியது, மனுக் கொடுக்க வந்த மாஞ்சோலைத் தொழிலாளர்களையும், நாக்பூர் கோவாரி பழங்குடியினரையும் அடித்துக்கொன்றது, வீரப்பன் தேடுதலைச் சாக்கிட்டு அதிரடிப்படை கிராமம் கிராமமாகப் பெண்களைக் கற்பழித்தது – இவையெல்லாம் இந்தியாவின் மத்திய, மாநில அரசுகள் நடத்திய சில பயங்கரவாதங்கள்.

மேலை நாடுகள், இசுலாமிய நாடுகளின் நிலை

எனவே மேலை நாடுகளும், இசுலாமிய நாடுகளும் நம்மைவிட உயர்ந்த நிலையில் இருக்கின்றனவா? இல்லை என்கிறோம். இந்தியாவில் உள்ள சீரழிவுகள், பிரச்சினைகன் எல்லா நாடுகளிலும் இருக்கத்தான் செய்கின்றன. இசுலாமிய நாடுகள் பலவற்றில் ஜனநாயகம் இல்லை என்பதும் உண்மைதான். ஆனால், இந்தப் பிரச்சினைகளுக்கு முக்கியமான காரணம் மதம் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
மன்னனையும், நிலப்பிரபுக்களையும், திருச்சபையையும் எதிர்த்த மக்களின் போராட்டத்தினால்தான் மேற்கத்திய நாடுகளில் ஜனநாயகம் வந்தது. இப்படிப்பட்ட போராட்டம் நடைபெறாத இசுலாமிய நாடுகளில் ஷேக்குகளும், இராணுவச் சர்வாதிகாரிகளும் ஆண்டு வருகின்றனர். இவர்கள்தான் தமது சர்வாதிகாரத்தைத் தக்க வைத்து, ஜனநாயகத்தை மறுப்பதற்கு மதத்தை முகமூடியாகப் பயன்படுத்துகின்றனர். போராட்டம் நடைபெற்ற துருக்கி, எகிப்து போன்ற நாடுகளிலும், முன்னாள் சோசலிச நாடுகளான சீனா, ரசியாவில் உள்ள இசுலாமியப் பகுதிகளிலும் சர்வாதிகாரம் ஒழிக்கப்பட்டது.
பண்பாட்டுச் சீரழிவுகளுக்கு முக்கியமான காரணம் ஏகாதிபத்திய நாடுகள் உருவாக்கி வரும் சமூக நிலைமைகள்தான். மேல்நிலை வல்லரசுகளின் உலக மயமாக்கத்தால் உலக மக்கள் மீது சொல்லொண்ணாத் துயரம் திணிக்கப்பட்டு வருகிறது. தொழில்துறை உற்பத்தியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பங்குச் சந்தை, தகவல் தொடர்பு, காப்பீடு, வங்கி, நிதி, கேளிக்கை, நுகர்பொருள், திரைப்படம் போன்ற சேவைத் துறைகளை வைத்தே பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்கின்றன. இவற்றின் சமூக விளைவாக பணவெறி, நுகர்வுவெறி, தனிநபர் வாதம், சூதாட்டம், பாலியல் சுற்றுலாக்கள், காமக் களிவெறியாட்டங்கள் போன்ற பண்பாட்டுச் சீரழிவுகள் இசுலாமிய – நாடுகளை உள்ளிட்டு உலகம் முழுவதும் பரவி வருகின்றன.
இந்து மதவாதிகளைப் போல கிறித்தவத் திருச்சபைகளும், அரபு ஷேக்குகளும் இத்தகைய சீரழிவுகளை எதிர்ப்பதாக நடிக்கின்றனர். சாதாரண மக்கள் ‘ஒழுக்கம்’ தவறினால் கடுந்தண்டனை வழங்கம் அரபு ஷேக்குகள் தங்கள் சொந்த வாழ்வில் கேட்பாரில்லாத கேளிக்கை வெறியர்களாக உள்ளனர்.
ஆனால், மத ஒழுக்கம்தான் சீரான ஒழுக்கம் என்றும், அதிலிருந்து பிறழ்வதுதான் சீரழீவு என்றும் எல்லா மதவாதிகளும் கூறுகின்றனர். எடுத்துக்காட்டாக கிறித்தவம் கருச்சிதைவையும், இசுலாம் பர்தா அணியாமையையும், இந்துமதம்  விதவை மறுமணத்தையும் சீரழிவு என்கின்றனர். அதேசமயம், இத்தகைய பிற்போக்கு மதங்கள் அனைத்தும் விபச்சாரம், அழகிப்போட்டி போன்ற முதலாளித்துவச் சீரழிவுகளையும் சேர்த்தே எதிர்க்கின்றன. ஆனால், முதலாளித்துவத்தின் பண்பாட்டுச் சீரழிவுகளுக்கு, பிற்போக்கான மத ஒழுக்கம் மாற்றாக முடியாது. இரண்டையும் களையக்கூடிய சனநாயகப் பண்பாடுதான் மாற்றாக விளங்க முடியும் என்கிறோம்.
அடுத்து, இசுலாமியத் தீவிரவாதத்தை சில நாடுகளும், குழுக்களும் ஆதரிப்பது உண்மைதான். ஆனால், அவற்றுக்கு அடிப்படையாக இருந்து பயங்கரவாதத்தைப் பல நாடுகளில் தூண்டிவிடுவது, பிறகு அதை அடக்குவதாகக் கூறி தலையிடுவது, ஆக்கிரமிப்பு செய்வது, குண்டு பொழிவது போன்றவையெல்லாம் அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய நாடுகளின் கைங்கரியங்களே. ரசியாவை எதிர்த்துப் போரிட தாலிபானுக்கு ஆயுத உதவி செய்து, தேச பக்தர்கள் என்ற பட்டமும் கொடுத்த அமெரிக்கா இன்று அவர்களைப் பார்த்துப் பயங்கரவாதிகள் என்று சீறுகிறது. உலகிற்கு சமாதான உபதேசம் செய்யும் வாத்திகன் திருச்சபை இந்த அமெரிக்க பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது.
சீரழிவுகளை எதிர்த்துப் பாரதப் பண்பாட்டைக் காப்பதாகக் கூறும் ஆர்.எஸ்.எஸ். கூட்டமும் வாத்திகனின் அடியொற்றி, அமெரிக்காவையும் அதன் இந்தியத் தரகு முதலாளிகளையும் ஆதரிக்கின்ற எடுபிடியாகத்தான் இருக்கிறது. கிளிண்டனின் இந்திய வருகையின் போது, நெடுஞ்சாண் கிடையாகக் காலில் விழுந்து உபசரித்தது இவர்களின் பக்திக்கு ஒரு உதாரணம். பாபர் மசூதியை இடித்த கையுடன் ராமஜன்மபூமி முக்தி மோர்ச்சாவின் தலைவர் கிளிண்டனுக்கு எழுதிய கடிதத்தில், ‘முசுலீம்களிடமிருந்து இந்துக்களையும், உலகையும் காப்பாற்ற அவதரித்த நவீன கிருஷ்ணபகவானே’ என்று உருகுகிறார்.
இத்தகைய அட்சர சுத்தமான கேவலமான அடிமைகள், இசுலாமிய நாட்டு மக்களை அடக்கி ஆட்டம் போடும் அரபு சேக்குகள் பெற்றுள்ள உரிமையை பார்ப்பன – பனியா கும்பலுக்கும் பெற்றுத்தர விரும்புகிறார்கள். மேலை கிறித்தவச் சீரழிவு, இசுலாமிய பயங்கரவாதம் என்று மதச்சாயம் பூசி அவதூறு செய்வது இதற்காக

கருத்துகள் இல்லை: