வியாழன், 18 ஆகஸ்ட், 2011

காவல்துறைக்கு மூன்றாவது கண்ணாக

சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதற்கும் பொது இடங்களைக் கண்காணிப்பதற்கும், காவல்துறைக்கு மூன்றாவது கண்ணாக பல இடங்களில் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. ÷2008 நவம்பர் 26-ல் நிகழ்ந்த மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் பிடிபட்ட ஒரு குற்றவாளி அஜ்மல் கசாப் ஒரு சலனமுமின்றி சகட்டுமேனிக்கு மும்பை ரயில் நிலையத்தில் அப்பாவி பிரயாணிகளைச் சுட்டுக்குவித்தது இந்த மூன்றாவது கண் கேமராக்கள் மூலம் பிடிக்கப்பட்ட படங்கள் ஊடகங்களில் காண்பிக்கப்பட்டதைப் பார்த்து உலகமே அதிர்ந்தது. ஒரு வழியாக வழக்கும் முடிவுற்றது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதை நிறைவேற்றுவதில்தான் நடைமுறை சட்டரீதியான தடைக்கற்கள்.  ÷மும்பை காவல்துறையைச் சேர்ந்த துக்காராம் ஓம்ப்ளே, கசாப்பின் ஏகே 47 ரக துப்பாக்கியைப் பிடித்து அவனது தாக்குதலை எதிர்கொண்டபோது உயிரிழந்தார். மனேஷ் என்ற இந்தியப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஜவான் மும்பைத் தாக்குதலின்போது தனது உயிரைத் துச்சமாக மதித்து தீவிரவாதிகளை எதிர்கொண்டு கொடிய காயமுற்றாலும் பொருள்படுத்தாது மக்களைக் காப்பாற்றினார். மக்களுடைய பாராட்டைப் பெற்றார். சூரிய சக்கர விருது வழங்கப்பட்டது. ஆனால், காயங்கள் முழுவதும் குணமடையவில்லை. ஆயுர்வேத சிகிச்சைக்கு மாதம் ரூ. 4,000 செலவு அரசு விதிகளின்படி வழங்க முடியாது. அது அவரது சொந்தச் செலவு. ஆனால், தீவிரவாதத் தாக்குதலில் பிடிபட்ட குற்றவாளிகளுக்குச் சிறையில் நல்ல கவனிப்பு, பூரண மருத்துவ சிகிச்சை!  ÷நாம் நமது பாதுகாப்பு வீரர்களைப் போற்றுவதில்லை. ஓர் அசம்பாவிதம் நடந்த பிறகு அதனை ஆராய்ந்து வருங்காலத்தில் அந்த நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கை எடுப்பதில்லை. அந்த நிகழ்வு கற்பிக்கும் பாடங்கள் என்ன என்பதை உணர்ந்து தெளிவு பெறுவதில்லை. அதனால் தான் என்னவோ தீவிரவாதம் தொடர்கதையாகவே உள்ளது. முடிவுக்கு வந்தபாடில்லை.  ÷2001 செப்டம்பர் 11-ம் நாள் நியூயார்க் இரட்டைக் கோபுர கட்டடம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதில் 2,752 பேர் பலியாயினர். ஸ்பெயின் தலைநகரம் மாட்ரிட்டில் ரயில் நிலையங்களில் தீவிரவாதத் தாக்குதல் மார்ச் 11-ம் தேதி 2004ல் நிகழ்ந்தது. அதில் 191 பேர் மாண்டனர். ஜூலை 7-ம் நாள் 2005-ல் லண்டன் மாநகரில் தீவிரவாதத் தாக்குதல் பல இடங்களில் ஒரே நாளில் நிகழ்ந்தது. 52 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். ஆனால், இந்தத் தாக்குதலுக்குப் பிறகு அந்த நாடுகளில் பெரிய அளவில் வேறு தீவிரவாதத் தாக்குதல் நடைபெறவில்லை. அந்த நாடுகள் சுதாரித்துக் கொண்டு தீர்க்கமான தடுப்பு நடவடிக்கைகளையும் சட்ட மாறுதல்களையும் காவல்துறையைப் பலப்படுத்தும் வழிமுறைகளையும் துரிதமாக நிறைவேற்றின. லண்டன் மாநகரில் பிரத்யேகமாக தீவிரவாத ஒழிப்புப் படை உருவாக்கப்பட்டது. 1,500 வீரர்களைக் கொண்ட இந்தப் படை லண்டன் மாநகரின் 78 லட்சம் மக்களுக்கு உயர்ரக பாதுகாப்பு அளிக்கிறது.  ÷26.11.2008 தாக்குதலுக்குப் பிறகு மும்பையில் 720 வீரர்களைக் கொண்ட தீவிரவாத ஒழிப்புப் படை உருவாக்கப்பட்டது. "போர்ஸ் ஒன்' என்று பிரத்யேகப் பாதுகாப்பு படையும் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் மும்பை நகரத்தின் மக்கள்தொகை 1.25 கோடி கடலில் கரைத்த பெருங்காயமாக முக்கிய நபர்கள் பாதுகாப்பில் அவை கரைந்து விடுகின்றன.  ÷மும்பையில் அதிக உயிர்களைப் பலி கொண்ட தீவிரவாதத் தாக்குதல் 1993-ல் நிகழ்ந்தது, அந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதைத் தொடர்ந்து மீண்டும் 2003, 2006, 2008 இப்போது ஜூலை 13/2011 மூன்று குண்டுவெடிப்புகள் இதில் உயிரிழப்பு 26. ஒன்று இரண்டு தாக்குதல்களை மக்கள் சகித்துக் கொள்வார்கள். அதுவே தொடர்ச்சியாக நிகழ்ந்தால்? "ஸ்பிரிட் ஆப் மும்பை' என்று அந்த நகர மக்கள் துணிவோடும், மனதிடத்தோடும் எதையும் எதிர்கொள்கிறார்கள் என்று புகழ்ந்து விட்டு மறந்துவிட முடியுமா? மும்பை நகரம் இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரம் என்று பெருமை கொள்கிறோம். அந்த நகரத்தில் போதிய பாதுகாப்பு இல்லையென்றால் மேலும் முதலீடு செய்ய யார் முன்வருவார்கள்? முக்கிய பன்னாட்டு நிறுவனங்கள் மும்பையிலிருந்து தில்லிக்குச் செல்ல எத்தனித்துள்ளார்கள் என்றும் செய்தி வந்துள்ளது.  ÷இந்தியா என்ன இவ்வளவு சாதுவான நாடா, யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற நிலையா என்று கேள்வி எழுகிறது. 2004-ல் இருந்து 41 குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் 3,674 பேர் உயிரிழந்துள்ளனர். தீவிரவாதத்தை எவ்வாறு எதிர்கொள்வது, முறியடிப்பது என்பது பற்றி விவாதங்களும், சர்ச்சைகளும் ஓய்ந்தபாடில்லை.  ÷நுண்ணறிவுப்பிரிவு (இன்டலிஜன்ஸ்) உரிய தகவல்களைக் கொடுக்கவில்லை. நிறையத் தகவல்கள் வருகின்றன. அவை சரியாக ஆராயப்படவில்லை. தகவல்கள் கொடுக்கப்பட்டன. அவை சரியாக விசாரிக்கப்படவில்லை. கொடுத்த தகவல் உண்மையானதாக இல்லை. நடவடிக்கை எடுக்கக்கூடிய தகவல் கொடுக்கப்படவில்லை என்று பலவகையான குற்றச்சாட்டுகள் ஒருவரை ஒருவர் சாடும் வாதங்கள்.  ÷26/11/2008 சம்பவத்துக்குப் பிறகு முன்னாள் உள்துறைச் செயலர் ப்ரதான் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, இத்தகைய நிகழ்வுகள் வருங்காலத்தில் எவ்வாறு தடுக்கப்பட வேண்டும் என்று ஆராய்ந்து மும்பை நகரம் மற்றும் மாநிலக் கடலோரப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பன்னிரெண்டு கடலோர காவல்நிலையங்கள் திறக்கப்பட்டன. கரையை ஒட்டி ஆழமில்லாத கடல் பகுதியில் ரோந்து செய்வதற்கு விசைப்படகுகள் வழங்கப்பட்டன. பிரத்யேக பாதுகாப்புப் படை அமைக்கப்பட்டது. மேலும் பல நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் ஆயுதங்கள் வழங்கப்பட்டன என்றும் சுமார் எண்பது சதவிகிதம் ப்ரதான் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டன என்றும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், படகுகள் ஓட்டப்படாமல் பழுதடைந்து கவிழ்த்து வைக்கப்பட்டநிலையில் உள்ளதை ஊடகங்கள் படம்பிடித்துக் காண்பித்தன. படகுகளை ஓட்டுவதற்குத் தேவையான டீசல் கொடுக்கப்படுவதில்லை என்பதும் ஒரு காரணம்.  ÷திட்டங்கள் தீட்டப்படுகின்றன. குறைபாடுகள் அறியப்படுகின்றன. ஆனால், செயலாக்கத்தில் தவற விட்டுவிடுகிறோம். இது எல்லாநிலைகளிலும் காணப்படுகிறது. ப்ரதான் கமிட்டி பரிந்துரைகள் மூலம் முக்கியமான கருவிகள் நவீன உபகரணங்கள் மும்பை போலீஸýக்குக் கொடுக்கப்பட்டன. ஆனால், தகவல் சேகரிக்கும் முறை நுண்ணியமாக்கப்படவில்லை. உயர்தர பயிற்சி இதில் மிக அவசியம். தீவிரவாத இயக்கங்களை ஊடுருவி தகவல் சேகரித்தால்தான் இத்தகைய இயக்கங்களின் கொடூரமான திட்டங்களை முறியடிக்க முடியும். குருதிப்புனல் படத்தில் இத்தகைய தீவிரவாத ஊடுருவல் தத்ரூபமாக சித்திரிக்கப்பட்டிருக்கும். வீரப்பன் கும்பல் பிடிபட்டதும் இத்தகைய ஊடுருவல் மூலமாகத்தான் சாத்தியமானது.  ÷தீவிரவாத இயக்கங்களுக்கு மதச்சாயம் பூசக்கூடாது. தீவிரவாதிகள் மதங்களின் போர்வையில் மறைந்து மதவெறியைத் தூண்டுவார்கள். எங்கு பிரச்னைகள் இருக்கிறது என்பதை அறிந்து அந்தப் பிரச்னையில் பாதிக்கப்பட்ட மக்களைத் தீவிரவாத இயக்கங்களுக்கு இரையாக்கத் தூண்டில் போடுவார்கள். இத்தகைய தீவிரவாத தேர்வு மையங்களைப்பற்றி தகவல் சேகரித்து முறியடிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு தீவிரவாத ஒழிப்புப்படைக்கு உள்ளது. அதே சமயம் தீவிரவாதத்துக்கு வித்திடும் பிரச்னைக்குத் தீர்வு காணவேண்டியது அரசின் பொறுப்பு. சமுதாய, பொருளாதார முன்னேற்றத்தில் எல்லா இனத்தவரும் மேன்மையடைந்தால்தான் ஆரோக்கியமான வளர்ச்சி உண்டாகும். முன்னேற்றத்தில் நமக்குப் பங்கு இல்லை என்றோ, புறக்கணிக்கப்படுகிறோம் என்ற உணர்வு வேரூன்றினால் அது தான் தீவிரவாத பிரசாரம் வளர்வதற்குக் காரணமாக அமைந்துவிடும். முதிர்ந்த அரசியல் விவேகம் இருந்தால்தான் இத்தகைய எதிர்மறை உணர்வுகள் வளராமல் பாதுகாக்க முடியும்.  ÷தீவிரவாதிகளின் வஞ்சகமான எண்ணங்களுக்கு இணையானது அதைவிடக் கொடூரமான அவர்களின் செயல்கள், அதன் விளைவுகள், அதனால் ஏற்படும் உயிரிழப்பு. ஆந்தர் பிரஸ்நிக் என்ற 32 வயது கொடூரன் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் ஜூலை 23-ம் நாள் தனிமனிதனாக தீவிரவாதத் தாக்குதல் நடத்தியதில் 92 இளைஞர்கள் உயிரிழந்தனர்.  ÷தனிநபர் தீவிரவாதமாக இருந்தாலும் ஓர் இயக்கம் மூலமாக பயங்கரவாத முறைகளைக் கையாண்டாலும் பாதிப்பு பொதுமக்களுக்குத்தான். அதுதான் இந்த இயக்கங்களின் குறிக்கோளும்கூட. இத்தகைய நிகழ்வுகளை எவ்வாறு நடக்காமல் தவிர்ப்பது என்பதில் காவல்துறையும், சமூக அமைப்புகளும், பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால்தான் முடியும். காவல்துறைக்கு ஆள்பற்றாக்குறை என்பது எப்போதும் சொல்லப்படும் காரணம், முக்கிய நபர்கள் பாதுகாப்பு, விஷேசங்களுக்கும், விழாக்களுக்கும், பாதுகாப்பு என்று காவலர்களை விரயமாக்குவது தவிர்க்கப்பட்டு பொது இடங்கள், பொது மக்களின் பாதுகாப்பு சீரமைக்கப்பட வேண்டும் என்பது எல்லோருடைய ஒருமித்த கருத்து. இத்தகைய இயங்காத அசைவற்ற பணிகளுக்கு பிரத்யேகமாக ஒரு பாதுகாப்புப் படை உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்து மும்பை பயங்கரவாதத்துக்குப் பிறகு பரிசீலிக்கப்பட்டு இதர பணிகளுக்காகத் தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய அணி ஆந்திர மாநிலத்திலும் இயங்குகிறது. இதன் மூலம் தேர்ச்சி பெற்ற காவலர்கள் சாதாரணப் பாதுகாப்பு பணிகளிலிருந்து விடுவிக்கப்பட்டு பொதுஇடங்களின் பாதுகாப்பில் ஈடுபடுத்த முடியும்.  ÷இன்னொரு முக்கிய நடவடிக்கை பொதுமக்களின் எதிர்பார்ப்பை எந்த அளவு காவல்துறை பூர்த்தி செய்திருக்கிறது என்பது பற்றி அவ்வப்போது பாரபட்சமின்றி தணிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் தான் எந்தெந்த இடங்களில் பாதுகாப்பு தொய்வு இருக்கிறது, எங்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவு செய்ய முடியும்.  ÷ஏதோ மற்ற நகரங்களில் தீவிரவாதத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது என்று நாம் அசட்டையாக இருந்து விட முடியாது. நிரந்தர விழிப்புணர்வுதான் முழுமையான பாதுகாப்புக்கு அடித்தளம். அதற்கு காவல்துறையின் பணிகள் கண்ணியம், கனிவு, கடமையுணர்வோடு அமைய வேண்டும். நில அபகரிப்பு புகார்கள் இப்போது குவிவதைப் பார்த்தால் முன்பு ஏன் காவல்துறை பாராமுகமாக இருந்துள்ளது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அப்போதிருந்த உயர் அதிகாரிகளின் மெத்தனப்போக்குத்தான் காரணம் என்பதில் ஐயமில்லை. இத்தகைய நேர்மையற்ற செயல்கள்தான் அசாதாரண பிரச்னைகளுக்கு வித்திடுகின்றன.  ÷"நெட்டை மரங்களாக நின்று புலம்பினர் பெட்டைப்புலம்பல் பிறர்க்கு துணையாமோ' என்ற பாரதியாரின் வரிகளை நினைவில் வைத்து பெட்டைப் புலம்பலைத் தவிர்த்து பொதுமக்கள் பாதுகாப்பில் காவல்துறை கவனம் செலுத்த வேண்டும். 

மூன்றாவது உலகப்போர் வருமானால் உலகம் தாங்காது.

உலகில் மறக்கமுடியாத நிகழ்வுகள் நிறையவே இருக்கின்றன; நினைக்க வேண்டிய நினைவுகளும் ஏராளம் என்றாலும், நடந்து முடிந்த இரண்டு உலகப் போர்களை மனிதகுலம் மறக்க முடியுமா?  1914-ல் தொடங்கிய முதல் உலகப் போரும்,1944-ல் தொடங்கிய இரண்டாவது உலகப்போரும், உலக வரலாற்றில் முக்கிய அத்தியாயங்கள்; மனிதகுலம் படிக்க வேண்டிய பாடங்கள்; வெற்றி பெற்றே தீர வேண்டும் என எழுத வேண்டிய தேர்வுகள், எனவே இவை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டியவை.  இரண்டாம் உலகப்போர் பற்றிய வரலாற்றில் மறக்க முடியாத இரண்டு நாள்களே 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகும். அந்த நாள்களில்தான் உலகம் முன்னும், பின்னும் கண்டறியாத அணுகுண்டுகள் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய இரண்டு நகரங்களில் வீசப்பட்டன.  "தி லிட்டில் பாய்' என்று செல்லமாக அழைக்கப்பட்ட அந்த அணு அரக்கன் 14 அடி நீளமும் 5 அடி அகலமும் 10 ஆயிரம் பவுண்ட் எடையும் கொண்டதாக இருந்தது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து 5,050 கி.மீ. தொலைவில் உள்ள "டீனியன்' என்ற தீவிலிருந்து புறப்பட்ட விமானத்தில் இருந்துதான் ஹிரோஷிமா நகரில் வீசப்பட்டது. இது நடந்து 3 நாள்களுக்குப் பிறகு நாகசாகி மீது "ஃ பேட்மான்' வெடித்தது.  இதனால் இந்த நகரங்கள் இரண்டும் சுடுகாடாக மாறின; அழுவதற்குக்கூட யாரும் இல்லை. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர் என்பதைவிட கரிக்கட்டைகளாக மாறினர் என்றே கூறவேண்டும். அழிவும், அதிர்ச்சியும் ஏற்படுத்திய சோக வடுக்கள் இன்னும் மறையவில்லை.  அதே ஜப்பான் நாட்டில் கடந்த 2011 மார்ச் 11-ம் நாள் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட "சுனாமி' பேரலைகளால் கடற்கரை நகரமான புகுஷிமாவில் உள்ள அணுமின் நிலையம் பெருத்த சேதம் அடைந்தது. அதனால் அங்குள்ள அணு உலைக்களங்களில் கதிர்வீச்சு ஏற்பட்டு நாடே அச்சத்தில் உறைந்து போனது.  கடைசியாகக் கிடைத்த தகவலின்படி ஜப்பான் அணு உலைகள் வெடிப்பால் 3.5 லட்சம் மக்கள் வீடு வாசல், தோட்டம், வயல்வெளிகள், தொழிற்சாலைகள் என எல்லாம் இழந்து தாற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். கதிர்வீச்சு அடங்கி அந்த பூமியைப் பயன்படுத்துவதற்கு இனி எத்தனை காலங்கள் காத்துக் கிடக்க வேண்டுமோ? அந்த பூமியில் கலந்திருக்கும் கதிர்வீச்சுப் பொருளை அகற்ற எத்தனை தொழிலாளர்கள் கதிர்வீச்சுக்கு ஆளாக வேண்டுமோ?  முதலில் இந்த விபத்தை மூடிமறைக்கவே ஜப்பான் அணுசக்தி குழுமமும், டெப்கோ நிருவாகிகளும் முயன்று பார்த்தனர். அணு உலைக்குள் நிகழ்ந்தது விபத்தல்ல, ரசாயன கிரியையால் ஏற்படும் நெருப்பு என்றனர். அணுமின் நிலைய விபத்துகள் நாடுகளின் எல்லைகளைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்துவதால் வேறுவழியின்றி ஒப்புக் கொள்ளவும், அறிவிக்கவும் வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  சர்வதேச அணுசக்தி குழுமத்தின் டைரக்டர் ஜெனரல் யுக்கியா அமானோ 2011 ஏப்ரல் 20-24 ஆகிய நாள்களில் நடந்த செரிநொபில் அணுவளாக விபத்தின் 25-ம் ஆண்டு நினைவுநாள் கருத்தரங்கில் பேசும்போது மறைக்கப்பட்ட உண்மையை வெளியிட்டார். ஜப்பானில் நிகழ்ந்த அணுவளாக விபத்தும், செர்னோபில் விபத்தைப்போல 7 ஸ்கேல் ஆகும் என்று ஜப்பான் நாட்டு அணுசக்தி மற்றும் தொழில்பாதுகாப்பு ஆணையம் அறிவித்ததாக உலகறிய அறிவித்தார்.  இக்காலத்தில் சர்வதேச அணுசக்தி குழுமம் முதல் எல்லா நாடுகளின் அதிகாரபூர்வ அமைப்புகளும் டெப்கோவைக் காப்பாற்றுவதிலும், அணுசக்தியைப் பயன்படுத்துவதில் உள்ள குறைகளை மறைப்பதிலும், குறிப்பாகக் கதிர்வீச்சு அபாயம் பற்றிய தகவலை மறைப்பதிலும் கவனம் செலுத்தினர்; இருந்தாலும் உண்மைகள் பலவழிகளில் மக்களைச் சென்றடைந்தன.  உலக நாகரிக வளர்ச்சியில் அறிவியல் கண்டுபிடிப்புகளின் பணி மகத்தானது. அவைகளில் இப்போது மனித இனத்துக்குத் தேவையானது மின்சாரம். அனல் மின்சாரம், புனல் மின்சாரம் என்ற மரபு சார்ந்த நிலையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், அணுசக்தியின் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யும் முயற்சிகளைக் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.  1932-ம் ஆண்டு ஜேம்ஸ் சாட்விக் என்பவர் நியூட்ரான் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து இந்த முயற்சி விரைவு பெற்றது. அணுக்களைப் பிளந்து அவற்றை மோதச் செய்வதன் மூலம் உண்டாகும் அணுசக்தியைக் கண்டுபிடித்தனர். அணுசக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.  அணுசக்தியைப் பயன்படுத்தி முதன்முதலில் 1951 டிசம்பர் 20 அன்று அமெரிக்காவில் ஐதஹோ மாநிலத்தில் ஆர்கோ என்ற இடத்தில் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இப்போது மின்சாரம் தயாரிப்பதற்காகப் பல்வேறு நாடுகள் அணு உலைகளை அமைத்துள்ளன.  அணுசக்தி உற்பத்தியில் அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது. உலகில் உற்பத்தியாகும் மின்சக்தியில் அமெரிக்காவின் பங்கு மட்டும் 27 விழுக்காடாகும். இதையடுத்து 17 விழுக்காடு பங்களிப்புடன் பிரான்ஸ் இரண்டாவது இடத்திலும், 13 விழுக்காடு பங்களிப்புடன் ஜப்பான் மூன்றாவது இடத்திலும், 6 விழுக்காடு பங்களிப்புடன் ரஷியா நான்காவது இடத்திலும், 5 விழுக்காடு பங்களிப்புடன் ஜெர்மனி ஐந்தாவது இடத்திலும் உள்ளன.  31 உலகநாடுகளில் அணுசக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் இப்போது 443 அணுஉலைகள் இருக்கின்றன. மேலும் 62 உலைகள் கட்டப்பட்டு வருகின்றன. இவை தவிர புதிதாக 482 அணுஉலைகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் சேரவே இந்தியா துடிக்கிறது.  ரஷியாவின் செர்னோபில் மற்றும் ஜப்பானில் அணுஉலைகள் வெடித்துச் சிதறிக் கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டதன் விளைவாக உலக மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. அணுசக்தி பாதுகாப்பு பற்றி அரசுகள் தரும் உறுதிமொழிகளில் மக்கள் நம்பிக்கையிழந்து போய்விட்டனர். பாதுகாப்புக் காரணங்களுக்காக என்று உண்மைகள் மறைக்கப்படுகின்றன என்பது தெரியாமலா போய்விடும்?  "நிலநடுக்கத்தின் அளவையும் அளந்திடலாம், கதிர் வீச்சுகளின் ஆயுளையும் கணக்கிடலாம். ஆனால், அது உருவாக்கிய சமூக அவலத்தை அளக்க முடியுமா?' என்று சமூக ஆர்வலர்கள் கேட்கும் கேள்விக்குப் பதில் கூற முடியவில்லை. மக்களுக்காக மின்சாரமா? மின்சாரத்துக்காக மக்களா? இரண்டும் இல்லை; பன்னாட்டு முதலாளிகளின் லாபத்துக்காகவே என்றால் மனிதகுலம் கவலைப்படவே செய்யும்!  ஏற்கெனவே 1984-ம் ஆண்டு யூனியன் கார்பைடு நிறுவனத்தால் ஏற்பட்ட விஷவாயு விபத்தால் போபால் நகரம் சந்தித்து வரும் துயரங்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை; பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தேடித்தரவில்லை; அவர்கள் அழும் குரல் இன்னும் ஓயவில்லை. அந்தக் குழுமத்தின் தலைவன் ஆண்டர்சனைத் தப்பி ஓட வைத்த இந்திய அரசாங்கமும், அதற்குத் துணைநின்ற காவல்துறையும், நீதிமன்றங்களும் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டன.  இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டம் ஜெய்தாப்பூரில் 10 ஆயிரம் மெகாவாட் திறன்கொண்ட அணுமின்நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 6 மின் உலைகள் கொண்ட இந்த மின்நிலையம் உலகத்திலேயே மிகப் பெரியதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் இவ்வளவு அணு உலைகள் நிறுவுவதை இந்தியாவைத் தவிர வேறு எங்கும் பார்க்க இயலாது. இவ்வளவு பெரிய ஆபத்தை விலைக்கு வாங்க இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் துணியாது.  இதற்காக "ஏரேவா' என்ற பிரெஞ்சு நிறுவனமும், இந்திய அணுசக்திக் கழகமும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இந்த அணுமின் நிலையம் அமைக்கப்படுவதை அம்மாநில மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.  அணுமின் நிலையத்தால் ஏற்படும் ஆபத்து என்பது எப்போதும் தலைக்கு மேல் தொங்கும் கத்தியைப் போன்றது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்பதால் மக்களிடம் அச்சமும், கவலையும், அதனால் எதிர்ப்பும் ஏற்படுவதைப் பரிவோடு கவனத்தில் கொள்ளவேண்டும். மின்சாரம் தேவை என்பதற்காக உயிரையும், வாழ்வாதாரங்களையும் இழக்க வேண்டுமா?  1982-ல் அணு உலைகளை மூடவேண்டும் என்று குரல் கொடுத்தவர் அமெரிக்க அணுசக்தியின் தந்தை என அழைக்கப்பட்டவரும், முதல் அணுமின் நிலையத்தைக் கட்டும் பணியில் ஈடுபட்டவரும், கப்பற்படையின் அணுசக்திப்பிரிவில் அட்மிரலாக இருந்தவருமான ஹைமென் ரிக்கோவர் என்பவரே! இவர் அணுசக்தியை எதிர்ப்பதற்குக் கூறும் காரணமும் சரிதான்!  இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமி வாழத்தகுந்த இடமாக இல்லை. எல்லாமே கதிர்வீச்சாக இருந்தது. அண்டத்திலிருந்து இயற்கையாக வந்த அண்டவெளி கதிர்வீச்சு தாக்கம் இருந்தது. படிப்படியாக கதிர்வீச்சுக் குறைந்து உயிர்கள் வாழும் நிலை வருவதற்கு பலகாலமானது. இப்போது மீண்டும் கதிர்வீச்சை உருவாக்கும் வேலையை மானுடம் செய்தால் பூமி பழைய நிலையை அடைந்துவிடும். கதிர்வீச்சு அபாயம் மக்களைப் பயமுறுத்துவதே அணுசக்தியின் எதிர்ப்புக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.  "அணுயுகத்தின் தந்தை' என்று அழைக்கப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பானில் போடப்பட்ட அணுகுண்டால் ஏற்பட்ட அழிவைக் கண்டு மனம் வருந்தினார்; போரையே விரும்பாத அவர் தம்மையே நொந்துகொண்டார்.  ""உலகத்தின் நன்மை குறித்தே அறிவியல் உண்மைகள் கண்டறியப்படுகின்றன. இவ்வுண்மைகள் அழிவு வேலைகளுக்கும் பயனாவதைக் கண்டு அறிவியலைக் குறை கூறலாகாது. மாறாக, அழிவு வேலைகளுக்குக் காரணமான மனிதனையே குற்றம் கூற வேண்டும்.'' என்றார் அவர்.  அந்த அறிவியல் மேதையின் இந்த அறிவுரையை ஏற்று நடந்தால் உலக அமைதி தொடரும். இல்லாவிட்டால் மூன்றாவது உலகப்போர் வருமானால் உலகம் தாங்காது. 

முல்லைப் பெரியாறு அணை



First Published : 17 Aug 2011 05:00:57 AM IST


1947-ல் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டபோது, சிந்து நதி தொடர்பான பிரச்னைகள் அடிக்கடி தலைகாட்டின. இருவேறு தேசங்கள், இருவேறு மக்கள், இருவேறு ஆட்சியாளர்கள் என்று முகம் திருப்பிக் கொண்டிருந்தபோதும், 1960-ம் ஆண்டுகளில் சிந்துநதியின் நீரைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் கையெழுத்திட்டன. ஒப்பந்தத்தில் கண்டுள்ள விவரங்களின்படி மாற்றங்கள் ஏதுமின்றி சிந்து நதி நீர்ப்பங்கீடு இன்றும் தொடர்கிறது. இருநாடுகளுக்கிடையே, சண்டைகள், சச்சரவுகள், எல்லைகளில் ஊடுருவல்கள், போர்கள் என்று நடந்த பொழுதும் நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் மட்டும் மீறப்படவேயில்லை. இதுபோலவே இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கான நீர்ப் பங்கீட்டு உடன்படிக்கைகள் 1996-ல் கையெழுத்தானது. அதிலும் பிரச்னை இருப்பதாகத் தெரியவில்லை. 1997-ம் ஆண்டு இந்தியாவும், நேபாளமும் மகாகாளி ஆற்றுநீரைப் பங்கிடுவதுபற்றி 1992-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையைச் சீரமைத்து, 1997-ம் ஆண்டு புதிய உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. அந்த உடன்படிக்கையும் இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படுகிறது. உலக நாடுகள் பலவற்றில் ராணுவத் தாக்குதல்கள் மற்றும் எல்லைப் பிரச்னைகள் பல இருந்தாலும் நாட்டுக்கு நாட்டுடனான தண்ணீர் உரிமைகளை மதித்தே வந்திருக்கின்றன,  வருகின்றன. இஸ்ரேல் - சிரியா, ஈரான் - இராக் போன்ற நாடுகளிலும்கூட நீர் உரிமைகள் மீறப்படுவதில்லை. ஆனால், இவற்றுக்கு நேரெதிராக, எதிரியாகத் தண்ணீர் பங்கீட்டு உரிமைகளை மதிப்பதற்குப் பதிலாக காலில் போட்டு மிதிக்கிற நிலை இந்திய மாநிலங்கள் சிலவற்றில் உள்ளது. அவற்றில் ஒன்றுதான் கேரள மாநிலம். 2002-2003-ம் ஆண்டுகளில் பவானி நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ஒன்றான முக்காலியில் அணைகட்டும் முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டது. அதுகுறித்து அப்போது பரவலான செய்திகள் வந்தன.  ஆனால், அந்த அணை கட்டும் முயற்சி எந்த நிலையில் இருக்கிறது என்ற தகவல் இப்போது ஏதும் தெரியாத நிலை உள்ளது. இதற்கு முன்பாகவே, கம்பம் பள்ளத்தாக்கு, சிவகங்கை மற்றும்  ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் ஜீவாதாரமாகிய முல்லைப் பெரியாறு அணையிலும், கேரளம் தனது ஆளுமைக்கரங்களை மிக அழுத்தமாகப் பதித்துக்கொண்டு முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை உயர்த்த மறுக்கிறது. 1801-ம் ஆண்டு சென்னை ராஜதானிக்கு உள்பட்ட தமிழகத்தில் மழைவளம் குறைவுற்றது.    அதன் காரணமாக 1806 முதல் 1840 வரை சுமார் 34 ஆண்டுகள் பஞ்சமோ பஞ்சம்.  தடுமாறிய வெள்ளையர் அரசு, நீர்வள ஆதாரங்களைப் பெருக்கி விவசாய உற்பத்தியைத் தேவைக்கேற்ப அதிகரிக்கத் திட்டங்களைத் தயார் செய்தது. நீர்ப் பாசனங்கள் முறையாக நடக்க வேண்டும் என்பதற்காக நீர்வள ஆதாரங்கள், நீர்ப்பிடிப்புப் பகுதிகள் ஆகியவற்றைக்  கணக்கெடுக்கவும், கண்டறியவும் தனது பொறியாளர்களுக்கு உத்தரவிட்டது. அப்பொறியாளர்கள் குழு கண்டுபிடித்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் முதன்மையானது இப்போது முல்லைப் பெரியாறு அணை அமைந்திருக்கும் பகுதியாகும். இந்த நீர்ப்பிடிப்புப்  பகுதி பற்றி விரிவான ஆய்வுகள் நடத்தி, புள்ளிவிவரங்கள், காடுகளின் பரப்பளவு, இயற்கை வளம் ஆகியவற்றின் தன்மைகளை ஆராய்ந்து தெளிவு பெற்றபின், 29.10.1886-ல் சென்னை ராஜதானி அரசுக்கும் திருவிதாங்கூர் அரசுக்கும் முல்லைப் பெரியாறு அணை கட்டுவது குறித்து ஒப்பந்தம் கையெழுத்தானது. 1887-ம் ஆண்டு சென்னை கவர்னர் கன்னிமாராவும், அவரின் தனிச்செயலர் ஹாரிங்டனும், மதுரை ஆட்சியரும் தேக்கடிக்கு அருகில் முல்லைப் பெரியாறு அணையின் சுரங்க வேலைகளைத் தொடங்கிவைத்தனர். இதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு கூத்து நடந்தது. அந்தக் கூத்தின் மூலமாகத்தான் இன்றுள்ள முல்லைப் பெரியாறு பிரச்னைகள் தொடர்கின்றன. இப்போது முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள இடத்தில் இருந்து 62 கிலோமீட்டர் தொலைவில் கொட்டாரக்கரை, அடூர் என்ற இடங்களிருக்கும் பகுதியிலேயே திருவிதாங்கூர் சமஸ்தான எல்லை முடிவுறுகிறது. ஆனால், முல்லைப் பெரியாறு அணைப்பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதி எனத் தவறாகக் கணக்கிட்டு, 1862-ல் சென்னை ஆங்கிலேயே அரசு அணைகட்ட அனுமதி கேட்டுக் கடிதம் எழுத, அந்த இடத்துக்கும் தன்னுடைய திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கும் சம்பந்தமில்லை என்று அரசர் ஒதுங்கிக் கொண்டார். இது புரியாத ஆங்கில அரசு, மீண்டும் 1863 மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கவர்னர் வாயிலாகக் கடிதம் எழுதியது. தனது ஆளுமைக்கே உள்படாத பகுதியைச் சென்னை அரசு தானே முன்வந்து கேட்கும்போது ஏன் மறுக்கவேண்டும் என்று நினைத்த திருவிதாங்கூர் அரசர் முறைப்படி அனுமதி அளித்தார். திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குத் தொடர்பில்லாத, உரிமையில்லாத பகுதியில் அணைகட்ட அனுமதி வாங்கி, சுதந்திரத்துக்குப்பின் மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்டபோது, அந்தப் பகுதி கேரள அரசின் ஆளுமைக்கு உள்படுத்தப்பட்டது. இந்தக் குளறுபடிகளால் தமிழகத்தின் உரிமை சட்டரீதியாக வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டது. திருவிதாங்கூர் ஒப்பந்தத்துக்குப் பிறகு, 1874-ம் ஆண்டு பொறியாளர் பென்னிகுக் தலைமையில் மேற்கு நோக்கிப் பாயும் பெரியாறு மற்றும் முல்லை நதிகளுக்கிடையே அணைகட்டும் பணி தொடங்கப்பட்டு தொடர்ந்து நடந்தது. அடர்ந்த வனப்பகுதியில் 3,500 அடி உயரத்தில் 4,290 மில்லி மீட்டர் மழைப் பொழிவுள்ள இடத்தில் அணை கட்டி எழுப்பப்பட்டது. தமிழகத்தில் இருந்தே இந்த அணை கட்டத் தேவையான கட்டுமானப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன. குறிப்பாக, இப்பொருள்களின் அனுப்பும் தளமாக மதுரை விளங்கியது. பல்வேறு சோதனைகளுக்கிடையே 176 அடி உயரமும், 152 அடி நீர்த்தேக்க அளவும் கொண்ட அணை கட்டி முடிக்கப்பட்டுத் திறக்கப்பட்டது. இங்கு நினைவுகூரத்தக்கவர் பொறியாளர் பென்னிகுக். சென்னை ராஜதானி அரசு பல்வேறு காரணங்களால் முல்லைப் பெரியாறு அணைத் திட்டத்தை நிறுத்தியபோதும், இங்கிலாந்தில் உள்ள தனது சொத்துகள் அனைத்தையும் விற்று அதன் மூலம் அணையைக் கட்டிமுடித்த பெருமகன் அவர். 1895-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி முல்லைப் பெரியாறு அணை திறக்கப்பட்டு, 999 ஆண்டுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள இந்தியக் கவுன்சில் செயலகமும், திருவிதாங்கூர் சமஸ்தானமும் ஒப்பந்தம் செய்து கொண்டன. இவ்வொப்பந்தத்தில் சென்னை ராஜதானி சார்பாக ஜான் ஹைல்ட் ஹாமில்டனும், திருவிதாங்கூர் சமஸ்தானம் சார்பாக திவான் வெங்கட்ராமையங்காரும் கையெழுத்திட்டனர். ஒப்பந்தப்படி நீர்பிடிப்புப் பகுதி 9,777 சதுர கிலோ மீட்டருக்கும், நீரில் மூழ்கும் பகுதி 8,000 ஏக்கருக்கும் தமிழக அரசு, கேரள அரசுக்கு ஆண்டுக்கு 4,000 ரூபாய் வாடகை செலுத்தி வந்தது. 1960-ம் ஆண்டுக்குப் பிறகு 2,57,789 ரூபாய் செலுத்தி வருகிறது. இப்போது இந்தக் குத்தகைத்தொகை எவ்வளவு என்று அரசுதான் கூற வேண்டும். இந்த நிலையில் 25.11.1979-அன்று அணையின் நீர்மட்ட உயரம் 152 அடியில் இருந்து 135 அடியாகக் குறைக்கப்பட்டது. இந்தச் செயலே முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பங்கீட்டு உரிமைச் சிக்கலுக்கு மூலகாரணியாகி விட்டது. அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும் என்கிற எண்ணப்பாட்டுக்கு வலுசேர்க்கும் வகையில் கேரள அரசு மூலம் பின்னப்பட்ட சதிவலைகள் ஏராளம். கேரளத்திலுள்ள காம்ரேட்டுகளும், காங்கிரஸ்காரர்களும் முல்லைப் பெரியாறை காவுவாங்க தங்களின் முழு மூளையைச் சிந்தாமல் சிதறாமல் செலவழித்தனர். 1976-ம் ஆண்டு கேரள அரசு இடுக்கி மாவட்டத்தில், இடுக்கியில் ஒரு மிகப் பெரிய அணை கட்டியது. அவ்வணையின் உயரம் 555 அடிகள்.  நீர்த்தேக்கப் பரப்பு 16,000 ஏக்கர். இவ்வணையில் 800 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட நீர்மின் உற்பத்தி நிலையத்தையும் அமைத்தது. போதுமான நீர்வரத்து, போதுமான நீர்ப்பிடிப்புப் பகுதிகள் ஏதுமின்றி கட்டப்பட்ட அவ்வணைக்குத் தண்ணீர் கிடைக்காது என்று கேரள ஆட்சியாளர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அவர்கள் கண் வைப்பது நமது முல்லைப் பெரியாறின் மீது என்று அப்போது நம்மவர்களுக்குப் புரிந்ததோ புரியவில்லையோ தெரியாது. அப்போது இருந்த கேரள மின்வாரியத் தலைமைப் பொறியாளர் பரமேஸ்வரன் நாயர்,  முல்லைப் பெரியாறின் நீர்மட்ட அளவை 136 அடிகளாகக் குறைத்து மீதமுள்ள 16 அடிகள் பெரியாறு அணையின் நீரை இடுக்கி அணைக்குக் கொண்டு வரவேண்டும் என்ற பரிந்துரையைச் செய்தார். ஆனால், சென்னை ராஜதானி - திருவிதாங்கூர் ஆகிய அரசுகளின் 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் உள்ளதை யோசித்த கேரள அரசு, பீர்மேடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கே.கே.தாமஸின் மூலம் பெரியாறு அணை பலவீனமடைந்து விட்டது,  அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் அந்த அணை தாங்காது, உடைந்துவிடும் என்று போலிப் பிரசாரங்களையும், பொய் மூட்டைகளையும் கட்டவிழ்த்து விட்டது.  நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும் என்ற போராட்டத்தைத் தூண்டியது. இது தொடர்பாக 25.11.1979 அன்று பேச்சுவார்த்தை நடந்தபோது மத்திய நீர்வளக் கமிஷன் தலைவராக இருந்தவர் கே.சி. தாமஸ். இவர், கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். பேச்சுவார்த்தையின் முடிவில் ரூ.21 கோடியே 51 லட்சம் செலவில் பெரியாறு அணையைப் பலப்படுத்த வேண்டும். அந்தச் செலவை தமிழக அரசே ஏற்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை அப்போது தமிழகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ராஜா முகமது எதிர்த்துக் கையொப்பம் இடவில்லை. தமிழக அரசு பரிந்துரையை ஏற்றுக்கொண்டது. பலப்படுத்தும் பணி நிறைவுபெறும்வரை 136 அடியாக நீர்த்தேக்க அளவு இருக்க வேண்டும் என்றும், பிறகு 152 அடியாக உயர்த்தலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டு முல்லைப் பெரியாறின் நீர்தேக்க அளவு 152 அடியில் இருந்து 136 அடியாக 25.11.1979 அன்று குறைக்கப்பட்டது. இடுக்கி அணை மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டதும், மிகமிக அதிகமான மின் உற்பத்திக்கு நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டதும், கேரளத்துக்கு மட்டுமே, முல்லைப் பெரியாறு என்ற எண்ணத்தை ஈடேற்ற செய்யப்பட்ட சதியாகும். எனவேதான், இவையெல்லாம், தமிழகத்துக்குத் தண்ணீர் தந்து வாழ்வளிக்கக் கூடாது என்ற கொடூர துரோகத்தின் விளைவாக நடந்தேறியது. அணையின் நீர்மட்டம் 136 அடியாகக் குறைக்கப்பட்டதால் ரூ.70 கோடிக்கு மேல் விவசாய உற்பத்தி இழப்பு ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. அணையின் மின் உற்பத்தித் திறனும் குறைந்துவிட்டது. தமிழ்நாட்டுக்கு உரிய பாசன நீரைத் தரமறுக்கும் வகையில் எவ்விதமான அணை கட்டும் பணியையும் செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றையெல்லாம் கேரள அரசு மதிப்பதாகத் தெரியவில்லை. பெரியாறு புலிகள் சரணாலயத்தில் இப்போதுள்ள முல்லைப் பெரியாறின் பெரிய அணைக்குப் பதிலாக சிறிய அணை கட்டுவதற்கான சர்வே பணிகளில் 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கேரள அரசு ஈடுபட்டது. முல்லைப் பெரியாறு அணையில் முழுக் கொள்ளளவு நீரைத் தேக்கிவைத்துக்கொள்ள தமிழகத்துக்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் கேரள அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இப்போதுகூட புதிய அணை கட்டுவதற்குக் கேரளத்தின் காங்கிரஸ் அரசு பலகோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளது.  காவிரி என்று வரும்போது கர்நாடகத்திலும், பெரியாறு என்று வரும்போது கேரளத்திலும், பாலாறு என்று வரும்போது ஆந்திரத்திலும் ஏற்படும் அரசியல் ஓர்மை தமிழகத்தில் மட்டும் ஏற்படுவதே இல்லை. இந்நிலையை மாற்றி, ஒட்டுமொத்தமான தமிழகம் திரண்டெழ வேண்டும். அப்போதுதான் நதிநீர் உரிமைகளை அண்டை மாநிலங்களிடம் இருந்து மீட்டெடுக்கவும் முல்லைப் பெரியாறு போன்ற நதிகளைப் பறிபோகாமலும் காக்க முடியும்

கொள்கை மட்டும் போதாது தொழுகையும் வேண்டும்

கொள்கை மட்டும் போதாது தொழுகையும் வேண்டும்

இறைவனுடைய மாபெரும் கருணையால் மறுமை வெற்றிக்கு அடித்தளமாக இருக்கக் கூடிய ஏகத்துவக் கொள்கையை ஏற்கும் பாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம். இந்த அடிப்படையில் அல்லாஹ் உலகத்தில் வாழும் அனைவரையும் விட நம்மை மேம்படுத்தி இருக்கிறான். அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்.
ஆனால் ''இறைவனுக்கு இணை வைக்காமல் இருந்தால் மட்டும் போதும் மறுஉலக வாழ்வில் வெற்றியடைந்து விடலாம்'' என்று நம்மில் பலர் தவறாக எண்ணிக்கொண்டு இருக்கிறோம். பெரும்பாலும் நல்லமல்களை நாம் செய்யாமல் இருப்பது இதைத் தான் உணர்த்துகிறது. 

ஏகத்துவக் கொள்கையைக் கடைப் பிடித்தவனுக்கு நிச்சயம் சொர்க்கம் கிடைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் நரகம் செல்லாமல் சொர்க்கம் செல்வானா? என்று நாம் யோசிக்க வேண்டும். ஏனென்றால் இஸ்லாத்தின் கடமைகளை சரியாக நிறைவேற்றாத காரணத்தினால் தவ்ஹீத்வாதிகளும் மறுமையில் நரகில் தண்டிக்கப் படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஏகத்துவக் கொள்கையுடையவர்களில் சிலர் நரகத்தில் அடுப்புக்கரிகளைப் போன்று மாறுகின்ற அளவிற்கு அங்கே வேதனை செய்யப் படுவார்கள். பின்பு (இறைவனுடைய) அருள் அவர்களுக்குக் கிட்டும். (நரகத்திலிருந்து) அவர்கள் வெளியேற்றப்பட்டு சொர்க்கத்தின் வாசல்களில் வீசப்படுவார்கள். சொர்க்கவாசிகள் அவர்கள் மீது தண்ணீரைத் தெளித்தவுடன் நதியால் சுமந்து வரப்பட்ட விதை (கரையோரம்) முளைப்பதைப் போல் அவர் (புதிதாக) உருவெடுத்து சொர்க்கத்தில் நுழைவார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)  நூல்: திர்மிதி 2522

தவ்ஹீத் கொள்கையை வைத்து மாத்திரம் நரகத்திலிருந்து தப்பித்து விடமுடியாது என்பதை தெள்ளத் தெளிவாக இந்த ஹதீஸ் எடுத்துரைக்கிறது. நரகத்திற்குச் சென்று விட்டு சொர்க்கத்திற்குள் நுழைவதை விட நரகத்திற்குள் புகாமல் சொர்க்கம் புகுவதே மாபெரும் வெற்றி. இவ்வாறு அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் தெளிவுபடுத்துகிறான்.

ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.  (அல்குர்ஆன் 3:185)


தவ்ஹீதின் வெளிப்பாடு நற்காரியங்கள்

இந்த வெற்றியை நாம் அடைய வேண்டும் என்றால் தவ்ஹீத் கொள்கையை கடைப்பிடிப்பதுடன் அல்லாஹ் விதித்த கடமைகளையும் அவனுடைய தூதர் காட்டித் தந்த நற்காரியங்களையும் அதிகம் செய்ய வேண்டும். அமல்கள் என்பது ஏகத்துவத்தின் வெளிப்பாடாகும்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று கூறுவதைப் போல் ஏகத்துவவாதியின் நற்செயல்களை வைத்து இவர் தவ்ஹீத்வாதி என்று மக்கள் இனங்காணும் விதத்தில் நமது நடவடிக்கைகள் இருக்க வேண்டும். ஒரு ஏகத்துவவாதி நரகம் புகாமல் சொர்க்கம் புக வேண்டுமானால் அவனிடத்தில் அவசியம் நல்லமல்கள் நிறைய இருக்க வேண்டும். இதை அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் பல்வேறு இடங்களில் சுட்டிக் காட்டுகிறான்.

''நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர் பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!  (அல்குர்ஆன் 18:110)

அல்லாஹ் இந்த வசனத்தில் தன்னுடைய சந்திப்பை அடியார்கள் பெறுவதற்கு இரண்டு விஷயங்கள் வேண்டும் என்று கூறுகிறான். ஒன்று இணை வைக்காமல் ஏகத்துவக் கொள்கையைக் கடைப்பிடிப்பது. மற்றொன்று நல்லறம் செய்வது. அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெறுவதற்கு நல்லறங்கள் அவசியம் என்று இந்த வசனத்தி­ருந்து உணரலாம்.

மனிதன் செய்த நல்லறங்கள் மற்றும் தீமைகளை அல்லாஹ் மறுமை நாளில் தராசுகளை வைத்து அளவிடுவான். அதில் நல்லறங்கள் அதிகமாகிவிட்டால் அவன் சுவர்க்கம் செல்வான். ஆனால் தீமைகள் மிகைத்து விட்டால் அவன் செல்ல வேண்டிய இடம் நரகம். இதை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் எடுத்துரைக்கிறான்.

யாருடைய எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர் திருப்தியான வாழ்க்கையில் இருப்பார். யாருடைய எடைகள் இலேசாக உள்ளனவோ அவர் தங்குமிடம் ஹாவியாவாகும். ஹாவியா என்றால் என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்? அதுவே சுட்டெரிக்கும் நெருப்பாகும்.  (அல்குர்ஆன் 101:6)

நாம் இறந்த பிறகு நம்முடன் வரக்கூடியது நாம் செய்த செயல்கள் தான். நாம் புரிந்த நல்லறங்களைத் தவிர செல்வமோ, காசு பணமோ மறு உலக வாழ்வில் எந்தப் பயனும் தராது. மறு உலக வாழ்வில் ஈடேற்றம் பெற வேண்டுமானால் நல்லமல்கள் அவசியம் என்பதை நபி (ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில் தெளிவுபடுத்தியுள்ளார்கள். எனவே தவ்ஹீத் என்பது வெறும் நம்பிக்கை மாத்திரம் இல்லை. மாறாக செயல்பாடுகளுடன் இணைந்தது என்பதை மறந்துவிடக் கூடாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறந்து போனவரை மூன்று பொருட்கள் பின் தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கி விடுகின்றது. அவரை அவருடைய குடும்பமும், செல்வமும், அவர் செய்த செயல்களும் பின் தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவருடைய குடும்பமும், செல்வமும் திரும்பி விடுகின்றன. அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நுால்: புகாரி 6514

இறைவன் வலியுறுத்திய காரியங்களில் ஒன்றான தொழுகை விஷயத்தில் நாம் மோசமாக நடந்து கொள்கிறோம். பலர் தொழுகைக்குரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்று வதில்லை. பல நேரங்களில் தொழ வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் கேளிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.

தொழுகைக்கு மட்டும் மக்களை அழைக்கின்ற தப்லீக் ஜமாஅத்தினர் தவறான செய்திகளை நம்பினாலும் தொழுகை விஷயத்தில் கவனமாக இருப்பதுடன் தாங்கள் ஈடுபட்ட பணியில் எவ்வளவு முனைப்புடன் செயல்படுகிறார்கள்! சத்தியக் கொள்கையில் இருக்கக்கூடிய நாம் அவர்களை விடப் பன்மடங்கு தொழுகையைப் பேண வேண்டும். தொழுகையின் அவசியத்தையும் அதை விட்டவனுக்கு மார்க்கம் விடும் எச்சரிக்கையையும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஒரு ஏகத்துவவாதி அறிந்து கொண்டால் நிச்சயமாக அவன் தொழுகையை விடமாட்டான்.

தொழுகையின் முக்கியத்துவம்

இஸ்லாம் என்பது, அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் வணக்கத்திற்குத் தகுதியானவர் இல்லை என்று கூறுவது, மற்றும் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகிய ஐந்து தூண்களால் கட்டப்பட்டுள்ளது.

இந்த ஐந்தில் ஒன்றான தொழுகையை ஒருவர் விடுவாரானால் அவருடைய இஸ்லாம் என்ற கட்டடம் பெரிய குறைபாடு உடையதாக ஆகி விடுகின்றது. எப்போது அது இடிந்து விழும் என்று சொல்ல முடியாது. நாம் கட்டிய கட்டடத்தின் ஒரு தூண் விழுந்து விட்டாலோ அல்லது அது பலம் குன்றியதாக இருந்தாலோ உடனே நாம் அதைச் சரி செய்து விடுகிறோம். இல்லையென்றால் அது நம் மீது விழுந்து நம்மையே அழித்து விடும். தொழாதவனின் இஸ்லாம் என்ற கட்டடம் காலப்போக்கில் இடிந்து, அவனிடத்தில் இஸ்லாம் அற்றுப் போய்விடும் என்பதால் நபி (ஸல்) அவர்கள் தொழுகையை இஸ்லாத்தின் தூண் என்று ஒப்பிட்டுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலைநிறுத்துதல், ஸகாத் வழங்குதல், ஹஜ் செய்தல், ரமளானில் நோன்பு நோற்றல் ஆகிய ஜந்து காரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது. அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 8

கறினார்கள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலைநிறுத்துதல், ஸகாத் வழங்குதல், ஹஜ் செய்தல், ரமளானில் நோன்பு நோற்றல் ஆகிய ஜந்து காரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது. அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 8மாவை நம்புவது மாத்திரம் இஸ்லாம் அல்ல. இந்த ஐந்து கடமைகளையும் நிறைவேற்றுவது தான் இஸ்லாம். ஒருவன் க­மாவை ஏற்றுக் கொண்டு, தொழவில்லை என்றால் அவனுடைய இஸ்லாம் அரைகுறையாக உள்ளது என்று அர்த்தம். மேற்கூறப்பட்ட ஐந்தும் சேர்ந்தது தான் இஸ்லாம் என்று நபி (ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில் விளக்குகிறார்கள்.

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் (ஜிப்ரீல்), ''இஸ்லாம் என்றால் என்ன?'' என்று கேட்டார். அதற்கவர்கள் ''இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு (எதனையும்) இணையாகக் கருதாத நிலையில் அவனை நீர் வணங்குவதும், தொழுகையை நீர் நிலைநிறுத்தி வருவதும், கடமையாக்கப்பட்ட ஜகாத்தை நீர் வழங்கி வருவதும், ரமளான் மாதத்தில் நீர் நோன்பு நோற்பதுமாகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (50)

எல்லா விஷயங்களிலும் நமக்கு அழகிய முன்மாதிரியாக விளங்கும் நபி (ஸல்) அவர்கள் தொழுகை விஷயத்திலும் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள். மரண வேளையில் கூட தொழுகையை அவர்கள் விட்டு விடவில்லை.

அப்பாஸ் (ரலி) மற்றும் அலீ (ரலி) ஆகிய இருவரின் மீது சாய்ந்து கொண்டு தரையில் காலை ஊன்ற முடியாமல் அவர்களது பாதம் தரையில் கோடு போட்டுக் கொண்டே சென்றது. இவ்வளவு சிரமமான நிலையிலும் இறைவனுக்குச் செய்ய வேண்டிய தொழுகையை நிறைவேற்றினார்கள். தான் இல்லாவிட்டாலும் தன் தோழர்கள் தொழுது கொண்டிருப்பதைப் பார்த்து அளவில்லா மகிழ்ச்சி கொண்டார்கள்.  

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, ''நபி (ஸல்) அவர்கள் நோயுற்ற போது நடந்த நிகழ்ச்சியை எனக்குச் சொல்வீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறியதாவது. நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையான போது, ''மக்கள் தொழுது விட்டார்களா?'' என்று கேட்டார்கள். ''இல்லை, அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறார்கள்'' என்று கூறினோம். அப்போது ''பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்'' என்றார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம். அதில் அவர்கள் குளித்து விட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்து விட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்த போது, ''மக்கள் தொழுது விட்டார்களா?'' என்று கேட்டார்கள். ''இல்லை, அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்'' என்று சொன்னோம். அப்போது, ''பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்'' என்றார்கள். அவ்வாறே தண்ணீர் வைத்தோம். அவர்கள் உட்கார்ந்து குளித்து விட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்து விட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்த போது, ''மக்கள் தொழுது விட்டார்களா?'' என்று கேட்டார்கள். ''இல்லை, அவர்கள் உங்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள்'' என்று சொன்னோம். அப்போது ''பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்'' என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம்.  அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் நூல்: புகாரி 687

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்கும் இடையில் (தொங்கியவர்களாக) வெளியே வந்தார்கள். (அவர்களின் கால்களை சரியாக ஊன்ற முடியாமையால்) பூமியில் அவர்களது இரு கால்களும் கோடிட்டுக் கொண்டு சென்றன. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 198

நபி (ஸல்) அவர்கள் மூன்று நாட்களாக வெளியில் வரவில்லை. தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டதும் அபூபக்கர் (ரலி) அவர்கள் தொழுகை நடத்துவதற்கு முன் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது அறையின் திரையை உயர்த்திப் பார்த்தார்கள். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தோற்றமளித்த போது அவர்களின் முகத்தை விடவும் மகிழ்ச்சியான எந்த ஒரு காட்சியையும் நாங்கள் பார்த்ததில்லை. அறிவிப்பவர்: அனஸ் (ரலி)   நூல்: புகாரி 681

பொதுவாக மரண வேளையில் மிக முக்கியமான விஷயங்களை வலியுறுத்திக் கூறுவோம். ஒருவர் நமக்கு ஒரு லட்சம் ரூபாயும் மற்றொருவர் நமக்கு 5 ரூபாயும் தர வேண்டும் என்று இருந்தால் நாம் மரணிக்கும் போது லட்சம் ரூபாயைப் பற்றித் தான் பேசுவோம்.

இது போன்று நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது தன்னுடைய சமுதாயத்திற்குத் தொழுகையை கடைப்பிடிக்கும் படி மிகவும் வலியுறுத்திக் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு மரண வேளையில் அவர்களுடைய மூச்சு மேலும் கீழும் சென்று கொண்டிருந்த போது அவர்கள் பெரும்பாலும் தொழுகையைப் பற்றியும் உங்களுடைய வலக்கரம் சொந்த மாக்கியுள்ள (அடிமைகளைப்) பற்றியும் வலியுறுத்திச் சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: இப்னு மாஜா (2688)

அல்லாஹ், இறந்தவர்கள் அனைவரையும் மறுமை நாளில் எழுப்பி விசாரணை செய்வான். முதன் முதலில் அவன் தொழுகையைப் பற்றித் தான் விசாரிப்பான். இதற்கடுத்து தான் மற்றவைகளைப் பற்றி கேள்வி கேட்பான். இறைவன் கேட்கும் முதல் கேள்விக்கு நாம் அனைவரும் தயாராக இருக்கின்றோமா? என்று யோசிக்க வேண்டும்.

அடியான் முதன் முத­ல் விசாரிக்கப்படுவது அவனுடைய தொழுகையைப் பற்றித் தான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: நஸயீ 463 

தொழாதவர்களுக்கு எச்சரிக்கை

நபி (ஸல்) அவர்கள் ஒருவனிடத்தில் போர் செய்கிறார்கள் என்றால் அவன் சாதாரண குற்றத்தைச் செய்திருக்க முடியாது. தொழாதவனிடம் போர் செய்வேன் என்று சொல்லி இருக்கிறார்கள் என்றால் தொழாமல் இருப்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை. முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று உறுதியாக நம்பி தொழுகையை நிலைநிறுத்தி ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போர் புரிய வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)  நூல்: புகாரி 25

தொழுகையை விடுவது என்பது சாதாரணமான குற்றமில்லை. இறை மறுப்புச் செயல் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் ஒன்றை இறை மறுப்புச் செயல் என்று சொன்னால் அதுவென்ன சிறிய குற்றமாகவா இருக்கும்?. இதைத் தொழாதவர்கள் உற்று நோக்க வேண்டும். 

இறைவனை நம்பியவர்களுக்கும், நம்பாதவர்களுக்கும் உள்ள வேறுபாடு இந்தத் தொழுகை தான். இறைவனை ஏற்காதவர்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்கத் தயாராகி விட்டால் முஸ்லிம்களாக மாறி விடுவார்கள். இறைவனை வணங்குவதற்கு அவர்கள் தயாராக இல்லாத காரணத்தினால் அவர்கள் இறை மறுப்பாளர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட தொழுகையை விட்டு விட்டால் நமக்கும் இறை மறுப்பாளர்களுக்கும் என்ன வித்தியாசம்?

மனிதனுக்கும் இணை வைப்பு மற்றும் இறை மறுப்பு ஆகியவற்றுக்கும் இடையே (பாலமாக இருப்பது) தொழுகையைக் கைவிடுவது தான். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)  நூல்: முஸ்லிம் 116

ஆட்சியாளர்கள் குடிமக்களுக்கு அநீதி இழைத்தாலும் அதற்காக அவர்களிடத்தில் குடிமக்கள் சண்டையிடக் கூடாது. ஆனால் அவர்கள் தொழுகையை நிலை நிறுத்தாமல் இருந்தால் அவர்களிடத்தில் சண்டையிடலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இது சம்பந்தமாக வரக் கூடிய ஒரு ஹதீஸில் நீங்கள் தெளிவான இறை மறுப்பை அவர்களிடத்தில் கண்டால் சண்டையிடலாம் என்று வந்துள்ளது. ஆக நபி (ஸல்) அவர்கள் தொழுகையை விடுவதை தெளிவான இறை மறுப்புச் செயல் என்று குறிப்பிட்டுள்ளார்கள். தொழுகை ஒரு முஃமினிடத்தில் இருக்க வேண்டிய முக்கியமான அம்சம் என்பதால் ஆட்சியாளர்கள் தொழுபவர்களாக இருந்தால் அவர்களுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கக் கூடாது என்று சொன்னார்கள்.

''ஆட்சியதிகாரத்தில் இருப்பவர் களிடம் நாங்கள் சண்டையிட மாட்டோம். எந்த விஷயம் பகிரங்கமான இறை மறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளர்களிடம் நாங்கள் கண்டாலே தவிர'' என்று எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் உறுதி மொழி வாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும். அறிவிப்பவர்: உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) நூல்: புகாரி 7056

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''(எனக்குப் பின்) சில தலைவர்கள் வருவார்கள். அவர்களிடம் நீங்கள் நன்மையையும் காண்பீர்கள். தீமையையும் காண்பீர்கள். யார் (தீமையை தெளிவாக) அறிந்து கொண்டாரோ அவர் பிழைத்தார். யார் வெறுத்தாரோ அவர் தப்பித்தார். (இதற்கு மாற்றமாக) யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணை போனாரோ (அவருக்குக் குற்றத்தில் பங்குண்டு)'' என்று கூறினார்கள். உடனே மக்கள், ''அவர்களுடன் நாங்கள் போரிடலாமா?'' என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''இல்லை, அவர்கள் தொழுகையை நிறைவேற்றும் வரை (வேண்டாம்)'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி) நூல்: முஸ்லிம் 3447

மறுமை நாளில் நரகவாசியிடம் சொர்க்கவாசிகள், ''ஏன் நரகத்தில் வந்து அவதிப்படுகிறீர்கள்?'' என்று கேட்பார்கள். அதற்கு அந்த நரகவாசிகள் சொல்லும் முதல் காரணம் நாங்கள் தொழவில்லை என்பது தான். இறைவன் நம்மைப் படைத்த நோக்கத்தை நாம் பாழாக்கினால் அவன் தரும் தண்டனை நரகம் என்பதைப் பின்வரும் வசனம் உணர்த்துகிறது.

அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் ''உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று விசாரிப்பார்கள். ''நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம் (எனக் கூறுவார்கள்)  (அல்குர்ஆன் 74:40)

தொழுகையைக் கெடுக்கும் தூக்கம்

இன்றைக்கு நமது தொழுகைகளை பெரும்பாலும் தூக்கம் அலைக்கழித்து விடுகிறது. லுஹர் தொழுகைக்கு வருகின்ற கூட்டம் ஃபஜர் தொழுகைக்கு வருவதில்லை. காரணம் தூக்கத்தை உதறி விட்டு வருவதற்குச் சிரமமாக இருக்கிறது.

கடமையான தொழுகைகளை நிறைவேற்றாமல் தூங்கியவனுக்குரிய தண்டனையை நாம் அறிந்து கொண்டால் நிச்சயம் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்ட பின் நமக்குத் தூக்கம் வராது.

நபி (ஸல்) அவர்கள் தாம் கனவில் கண்ட தலை நசுக்கப்படும் மனிதரைப் பற்றிக் குறிப்பிட்டு, ''அவர் குர்ஆனைக் கற்று அதைப் புறக்கணித்து, கடமையான தொழுகையைத் தொழாமல் உறங்கியவர்'' என்று விளக்கம் அளித்தார்கள். அறிவிப்பவர்: ஸமுரா (ரலி) நூல்: புகாரி 1143

நம்மில் மிகவும் சொற்ப நபர்கள் மாத்திரம் தான் ஃபஜர் தொழுகையை நிறைவேற்றுகிறார்கள். ஃபஜர் தொழுகைக்காக எழுந்து தொழுவது என்னவோ மலை போன்ற காரியத்தைப் போல் நமக்குத் தெரிகிறது.

ஆனால் கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் இறைவனுடைய பொருத்தத்தைப் பெற விரைந்து ஓடி வர வேண்டும். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த நயவஞ்சகர்களுக்கு ஃபஜர் மற்றும் இஷா தொழுகைகள் பெரும் சுமையாக இருந்தன. எனவே அந்த நயவஞ்சகர்களைப் போன்று நாம் ஆகக்கூடாதென்றால் ஃபஜர் தொழுகையை விட்டுவிடக் கூடாது.

பெருமானாரின் காலத்தில் இருந்த நயவஞ்சகர்கள் கூட ஒரு நாளைக்கு 3 வேளை சரியாகத் தொழுது விடுவார்கள். ஆனால் முஸ்லிம் என்று தன்னைக் கூறிக் கொண்டு ஒரு நாளைக்கு ஒரு வேளை கூட தொழாமல் இருக்கின்றவர்கள் தங்கள் நிலையை சற்று உணர வேண்டும்.

நயவஞ்சகர்களுக்கு மிகக் கடினமான தொழுகை இஷா தொழுகையும், ஃபஜர் தொழுகையும் ஆகும். அவ்விரண்டில் உள்ள (நன்மையை) அவர்கள் அறிந்து கொண்டால் தவழ்ந்தாவது அவ்விரு தொழுகைகளுக்கு வந்து விடுவார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: முஸ்லிம் 1041

ஃபஜர் தொழுகை பலருக்குத் தவறி விடுவதைப் போல் அஸர் தொழுகையும் பெரும்பாலும் தவறி விடுகிறது. ஏனென்றால் இந்த இரண்டு நேரங்களிலும் நாம் உறங்கிக் கொண்டிருப்போம். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் இந்த இரண்டு தொழுகைகளைக் குறிப்பிட்டுக் கூறி இவைகளை நிறைவேற்றியவர் சொர்க்கம் செல்வார் என்று கூறினார்கள்.

''பகலின் வெப்பம் குறைந்த இரண்டு நேரத் தொழுகைகளை (அதாவது ஃபஜ்ர் மற்றும் அஸர் தொழுகைகளை) யார் தொழுகிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) நூல்: புகாரி 574

ஈமான்

ஈமான்

17 11 2010
யஹ்யா பின் யஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(இராக்கிலுள்ள) பஸ்ரா நகரில் முதன் முதலில் விதி தொடர்பாக (அப்படி ஒன்று இல்லை என மாற்று)க் கருத்துத் தெரிவித்தவர் மஅபத் அல் ஜுஹனீ
என்பவரேயாவார். இந்நிலையில், நானும் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் அல்ஹிம்யரீ (ரஹ்) அவர்களும் ஹஜ்’ அல்லது உம்ரா’ச் செய்வதற்காக (புனித மக்கா நோக்கி)ச் சென்றோம். அப்போது நாங்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் யாரேனும் ஒருவரை நாம் சந்தித்தால் அவரிடம் விதி தொடர்பாக இவர்கள் கூறிவருவதைப் பற்றிக் கேட்க வேண்டும்” என்று சொல்லிக் கொண்டோம்.
அப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்துகொண்டிருந்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. உடனே நானும் என் தோழரும் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களைச் சூழ்ந்துகொண்டு, எங்களில் ஒருவர் அவர்களுக்கு வலப் பக்கத்திலும் மற்றொருவர் அவர்களுக்கு இடப் பக்கத்திலும் இருந்துகொண்டோம். (நான் சரளமாகப் பேசக்கூடியவன் என்பதால் அன்னாருடன்) பேசுகின்ற பொறுப்பை என்னிடமே என் தோழர் விட்டுவிடுவார் என எண்ணி நானே பேசினேன்.
அபூஅப்திர் ரஹ்மான் அவர்களே! எங்கள் பகுதியில் சிலர்
தோன்றியிருக்கின்றனர். அவர்கள் குர்ஆனை ஓதுகின்றனர்; தேடித் திரிந்து கல்வி பயில்கின்றனர்” என அவர்களது (நல்ல) தன்மைகளை எடுத்துரைத்து, ஆனால், அவர்கள் விதி என்று ஏதுமில்லை எனவும், நடக்கின்ற காரியங்கள் (இறைவன் திட்டமிடாமலேயே) தற்செயலாகத்தான் நடக்கின்றன என்றும் அவர்கள் கருதுகிறார்கள் என்றேன்.
அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
இத்தகையோரை நீங்கள் சந்தித்தால், அவர்களை விட்டு நானும் என்னை விட்டு அவர்களும் விலகிவிட்டவர்கள் என அவர்களிடம் தெரிவித்துவிடுங்கள். (இந்த) அப்துல்லாஹ் பின் உமர் யார்மீது சத்தியம் செய்வானோ அ(ந்த இறை)வன் மீது சத்தியமாக! அவர்களில் ஒருவரிடம் உஹுத் மலையளவு தங்கம் இருந்து, அதை அவர் (அறவழிகளில்) செலவிட்டாலும் அவர் விதியை நம்பிக்கை கொள்ளாதவரை
அவரிடமிருந்து அல்லாஹ் அதை ஏற்கமாட்டான் (என்றும் கூறிவிடுங்கள்).
பிறகு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் தந்தை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்:
நாங்கள் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருகில் இருந்தபோது தூய வெண்ணிற ஆடை அணிந்த, அடர் கறுப்பு நிறத்தில் தலைமுடி உடைய ஒரு மனிதர் வந்தார். பயணத்தில் வந்த எந்த அடையாளமும் அவரிடம் காணப்படவில்லை; எங்களில் எவருக்கும் அவரை (யார் என)த் தெரிய வில்லை. அவர் நபி (ஸல்) அவர்களின் அருகில் (சென்று), தம் முழங்கால்களை நபியவர்களின்
முழங்கால்களோடு இணைத்துக்கொண்டு (நெருக்கமாக) அமர்ந்தார். அவர் தம் கைகளைத் தம் தொடைகள்மீது வைத்(து பவ்வியமாக அமர்ந்)தார்.
பிறகு முஹம்மதே! இஸ்லாம் (அடிபணிதல்) என்றால் என்னவென்று எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இஸ்லாம் என்பது, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும். மேலும், தொழுகையைக் கடைப்பிடிப்பதும், ஸகாத்தை
வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும், சென்றுவர இயன்றால் இறையில்லம் கஅபாவில் ஹஜ்’ செய்வதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த மனிதர் உண்மைதான்” என்றார்.
அவர் இவ்வாறு கூறியதைக் கேட்டு, அவரே கேள்வியும் கேட்டுவிட்டு அவரே நபி (ஸல்) அவர்கள் அளித்த பதிலை உறுதிப்படுத்தவும் செய்கிறாரே என்று நாங்கள் வியப்படைந்தோம்.
அடுத்து அவர், ஈமான் (இறைநம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும்; நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதுமாகும்” என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் உண்மைதான்” என்றார்.
அடுத்து அம்மனிதர், இஹ்சான் (அழகிய முறையில் செயலாற்றல்) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,(இஹ்சான் என்பது,) அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். ஏனெனில், அவனை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கின்றான்” என்று பதிலளித்தார்கள்.
அம்மனிதர்,மறுமை (உலக அழிவு) நாளைப் பற்றி (அது எப்போது வரும் என) எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்), கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். (இது பற்றி எனக்கும் தெரியாது; உங்களுக்கும் தெரியாது.)” என்று கூறினார்கள்.
அம்மனிதர்,மறுமை நாளின் அடையாளங்களைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள்!” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,ஓர் அடிமைப் பெண் தன் எசமானியைப் பெற்றெடுப்பதும், காலில் செருப்பில்லாத, அரைகுறை ஆடைகளை அணிந்துள்ள ஏழைகளான ஆட்டு இடையர்கள் போட்டி போட்டுக்கொண்டு உயரமான கட்டடங்கள் கட்டுவதை நீங்கள் காண்பதும் ஆகும்” என்று கூறினார்கள்.
பிறகு அம்மனிதர் சென்றுவிட்டார். நீண்ட நேரம் நான் (அங்கேயே) இருந்தேன். பின்னர் என்னிடம் நபி (ஸல்) அவர்கள்,உமரே! கேள்வி கேட்ட அந்த நபர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல். உங்களுக்கு உங்களது மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக உங்களிடம் அவர் வந்தார்” என்று சொன்னார்கள்.
நூல் : முஸ்லிம் 1



நோன்பைத் தாமதமாகத் திறத்தல்

8 08 2010
இன்று சில பள்ளிகளில் நோன்பு திறப்பதைத் தாமதப்படுத்துகின்றனர். சூரியன் மறைந்தவுடன் நோன்பைத் திறக்காமல், சூரியன் மறைந்து 7-10 நிமிடங்கள் கழிந்த பின்பே நோன்பு திறக்கின்றனர். அவர்கள் வெளியிடும் நோன்பு கால அட்டவணையில் கூட சூரியன் மறைவு என்று ஒரு நேரம் போட்டிருப்பார்கள். அதை விட 7-10 நிமிடங்கள் கூடுதலாக நோன்பு திறக்கும் நேரத்தைப் போட்டிருப்பார்கள். கேட்டால் பேணுதல் என்கின்றனர். இவர்களின் இந்த செயல் தவறு என்பதை பின்வரும் ஆதாரங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்!
திருக்குர்ஆன் 2:187
“நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும்வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்!” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி)
நூல்: புகாரி 1957
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திலிருந்தோம். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும் கூட்டத்தில் ஒருவரிடம், ‘இன்னாரே! எழுந்து நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அதற்கவர் ‘இறைத்தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!” என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக! எனறார்கள். அதற்கவர் ‘இறைத்தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டும்!” என்றார். நபி(ஸல்) அவர்கள். ‘இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அதற்கவர், ‘இறைத்தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!” என்றார். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், ‘இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!” என்று கூறினார்கள். அதற்கவர் ‘பகல் (வெளிச்சம்) இன்னும் (எஞ்சி) இருக்கிறதே?’ என்று கேட்டதற்கும் நபி(ஸல்) அவர்கள் ‘இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்று கூறினார்கள். உடனே அவர் இறங்கி, அவர்களுக்காக மாவு கரைத்தார். அதை நபி (ஸல்) அவர்கள் அருந்திவிட்டு, ‘இரவு இங்கிருந்து (கிழக்கிலிருந்து) முன்னோக்கி வந்துவிட்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்!” என்றார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரலி)
நூல்: புகாரி 1955
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவு வந்து, பகல் போய், சூரியன் மறைந்துவிட்டால் நோன்பாளி நோன்பு துறப்பார்.
அறிவிப்பாளர்: உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2006
நானும் மஸ்ரூக் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! இரு நபித்தோழர்களில் ஒருவர் விரைந்து நோன்பு துறக்கிறார்; (மஃக்ரிப் தொழுகையின் ஆரம்ப நேரத்திலேயே) விரைந்து தொழுகிறார். இன்னொருவர், நோன்பு துறப்பதையும் தாமதப்படுத்துகிறார்; தொழுகையையும் தாமதப்படுத்துகிறார் (இவ்விருவரில் யார் செய்வது சரி?)” என்று கேட்டோம். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் “விரைந்து நோன்பு துறந்து, விரைந்து தொழுபவர் யார்?” என்று கேட் டார்கள். நாங்கள் “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி)’ என்றோம். அதற்கு, “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்வார்கள்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூஅத்திய்யா மாலிக் பின் ஆமிர் (ரஹ்)
நூல் : முஸ்லிம் 2004
எனவே சூரியன் மறைந்தவுடன் நோன்பாளி நோன்பைத் திறந்து விட வேண்டும். நபி(ஸல்) அவர்களே செய்யாத ஒன்றை பேணுதல் என்ற பெயரில் யார் சொன்னாலும் அதனை ஏற்கத் தேவையில்லை. நாம் அனைவரும் குர்ஆன் , ஹதீஸின் அடிப்படையில் செயல்படுவோம்.



சுபுஹூத் தொழுகையின் முன் சுன்னத்

8 07 2010
சுபுஹூத் தொழுகையின் முன் சுன்னத் சம்பந்தமாக சில முஸ்லிம்கள் செய்யும் தவறு :
நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் அளவிற்கு வேறு எந்த உபரித் தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை.
அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி)
நூல்: புகாரி 1169
இதிலிருந்து சுபுஹின் முன் சுன்னத் முக்கியமானது என்பதை அறியலாம். ஆனால் சில முஸ்லிம்கள் பள்ளிவாசலில் சுபுஹூ பர்ளு தொழுகை நடக்கும் போது தாமதமாக வந்து முன் சுன்னத் தொழுது விட்டு பின்பு ஜமாஅத்தில் கலந்து கொள்வார்கள். ஆனால் இவ்வாறு செய்வதற்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறியலாம்.
‘(கடமையான) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அந்தக் கடமையான தொழுகை தவிர வேறு தொழுகை இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1281,1282
அப்துல்லாஹ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சுப்ஹுத் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுது கொண்டிருந்த ஒரு மனிதரைக் கடந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றார்கள். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ சொன்னார்கள்; என்ன சொன்னார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. தொழுது முடித்ததும் நாங்கள் அந்த மனிதரைச் சூழ்ந்துகொண்டு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மிடம் என்ன சொன்னார்கள்?” என்று கேட்டோம். அவர், “உங்களில் ஒருவர் சுப்ஹுத் தொழுகையை நான்கு ரக்அத்களாக்கிவிடப் பார்க்கிறார்’ என்று கூறினார்கள் என்றார்.
நூல்: முஸ்லிம் 1283
இப்னு புஹைனா (அப்துல்லாஹ் பின் மாலிக் -ரலி) அவர்கள் கூறியதாவது:
சுப்ஹுத் தொழுகைக்கு இகாமத் சொல்லப் பட்டது; அப்போது ஒரு மனிதர் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுதுகொண்டிருப்பதை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டார்கள்; முஅத்தின் இகாமத் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த மனிதரிடம்), “சுப்ஹை நான்கு ரக்அத்களாகத் தொழப்போகிறீரா?” என்று கேட்டார்கள்.
நூல்: முஸ்லிம் 1284
அப்துல்லாஹ் பின் சர்ஜிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வைகறைத் தொழுகை (சுப்ஹுத்) தொழுவித்துக் கொண்டிருந்தபோது ஒரு மனிதர் பள்ளி வாசலுக்குள் நுழைந்தார்; பள்ளிவாசலின் ஒரு மூலையில் (சுப்ஹுடைய சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டுப் பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (தொழுகையில்) சேர்ந்துகொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்ததும், “இன்னாரே! இவ்விரு தொழுகைகளில் எதைக் கருதி வந்தீர்? நீர் தனியாகத் தொழுவதற்கா? அல்லது எம்முடன் சேர்ந்து தொழுவதற்கா?” என்று கேட்டார்கள்.
நூல்: முஸ்லிம் 1285
அப்துல்லாஹ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின்னர் ஒரு மனிதர் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுது கொண்டிருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் மக்கள் அந்த மனிதரை சூழ்ந்துவிட்டனர். அப்போது அந்த மனிதரிடம் நபி (ஸல்) அவர்கள், சுப்ஹு (என்ன) நான்கு ரக்அத்களா? சுப்ஹு (என்ன) நான்கு ரக்அத்களா? என்று (கடிந்தவாறு) கேட்டார்கள்.
நூல்: புகாரி 663
சுபுஹின் ஜமாஅத் நடக்கும் போது ஜமாஅத் தொழுகையை தொழுது விட்டு பின்பு விடுபட்ட முன்சுன்னத்தை பின்பு தொழலாம் என்பதை பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறியலாம்.
நபி (ஸல்) அவர்களுடன் நான் சுப்ஹு தொழுதேன். ஆனால் சுப்ஹுடைய (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்கள் நான் தொழவில்லை. எனவே நபி (ஸல்) அவர்கள் ஸலாம் சொன்ன பிறகு நான் எழுந்து (விடுபட்ட முன் சுன்னத்தான) பஜ்ருடைய இரண்டு ரக்அத்துகளைத் தொழுதேன். நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
அறிவிப்பவர்: கைஸ் (ரலி)
நூல்: இப்னுஹிப்பான் 2471
“இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் ஒருவரை ஸுப்ஹுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழக் கண்டார்கள். அப்போது அவர்கள், “ஸுப்ஹுத் தொழுகை இரண்டு ரக்அத்கள்” என்று சொன்னார்கள். அதற்கவர், “ஸுப்ஹுக்கு முந்திய இரண்டு ரக்அத்களைத் தொழவில்லை. அவ்விரண்டையும் இப்போது தொழுதேன்” என்று பதிலளித்ததும் நபி (ஸல்) அவர்கள் மவுனமாகி விட்டார்கள்.”
அறிவிப்பவர்: கைஸ் பின் அம்ர் (ரலி)
நூல்: திர்மிதீ 387
நபிவழிப் படி நம் தொழுகைகளை அமைத்துக் கொள்வோம்.

பொய்யன் பி.ஜே மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக

பொய்யன் பி.ஜே மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 7:36 பிற்பகல்
பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களுக்கு!
அல்லாஹ்வின் திருப்பெயரால்…


பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக.(அல்குர்ஆன்)

அஸ்ஸலாமு அலைக்கம் வரஹ்..
17-06-2006 -ந் திகதியிலிருந்து 3 மாதங்கள் அவகாசம் குறிப்பிடப்பட்ட நான் அனுப்பிய விவாத அழைப்பிற்கு நீர் உமது இணையத் தளத்தில் அளித்திருக்கும் பதிலிலிருந்து உமது ஞான சூனியம் தெளிவாகத் தெரிகின்றது.
- முதலில் உம்போன்ற பொய்யர் என்னை சகோதரன் என்று கூறியதற்காக நான் வெட்கப்படுகின்றேன். நீர் உலக மகா பொய்யன் என்பதற்கும், மிகப்பெரும் வழி கேடன் என்பதற்கும் உமது அறிக்கையே போதிய சான்றாகும்.
- அடுத்ததாக நீர் வாய்மையானவர் என்றால் நான் உமது மின்னஞ்சலுக்கு அனுப்பிய அழைப்பிற்கான பதிலை எனது மின்னஞ்சலுக்கோ அல்லது எனது தொலை பேசி மூலமோ அல்லது எனது முகவரி ஊடாகவோ தெரிவித்திருக்க வேண்டும் அதுதான் அறிவுடமை. அதனை விட்டுவிட்டு உமது ஆதரவாளர்களை மட்டும் திருப்திப் படுத்துவதற்காக எனது பெயருக்கு விலாசமிட்டு வெட்கமின்றி உமது இணையத்தளத்தில் இட்டுள்ளமை உமது கோழைத்தனத்தையும், முட்டாள் தனத்தையும் வெளிக்காட்டுகின்றன.
- நான் அரபு நாட்டுப்பணத்திற்காக கூலி வேலை பார்ப்பவன் என்று நீர் ஏளனமாகக் கூறியுள்ளீர். ஆம் நான் அரபு நாட்டுப் பணத்திற்காக எனது உழைப்பை செலுத்தி அதற்கான கூலியினைப் பெறுவது உண்மையே. நீரோ என் போன்று அரபு நாட்டுப்பணத்திற்காக தனது காலத்தையும், சிரமத்தையும் தியாகம் செய்து உழைக்கும் அப்பாவிப் பாமர மக்களை ஏமாற்றி அவர்கள் வியர்வை சிந்தி உழைக்கும் பணத்தை ஒட்டுண்ணி போன்று உறிஞ்சுகின்றீர். இதை எண்ணி இஸ்லாமியன் என்ற வகையில் நான் வெட்கப்படுகின்றேன்.
- விவாதம் நடாத்துவதற்கு முழு அளவிலான சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும், அது சவூதி அரேபியாவில் இல்லை என்றும், அது இந்தியாவில்தான் உள்ளதென்றும் கூறியுள்ளீர். அல்குர்ஆன், அல்ஹதீஸ் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு ஆட்சிப் புரியும் முஸ்லிம்கள் வாழும் ஒரு நாட்டில் இஸ்லாத்தினைப் பற்றி பேச முடியாமல் அந்நிய மதத்தவர்கள் ஆட்சி புரியும் ஒரு நாட்டில்தான் இஸ்லாத்தை பேச முடியும் என்று நீர் கூறியதிலிருந்து உமது முட்டாள்தனம் தெளிவாகின்றதோடு நீர் பேச வருவது இஸ்லாத்தைப் பற்றித்தானா? என்ற சந்தேகமும் எழுகின்றது.
- அரபு நாட்டு அறிஞர்கள் எனது கருத்திலேயே இருப்பதாகவும் அவர்களை நடுவராக ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் கூறியுள்ளீர். அல்லாஹ்விற்காகவும் இறையச்சத்துடனும் மார்க்கம் பேசுபவர்கள்தான் அரபு நாட்டு அறிஞர்கள். உம்மைப்போன்று தலைக்கனம் பிடித்து கிறுக்குத்தனமாக இஸ்லாம் பேசுபவர்கள் அல்லர் அவர்கள். (கழுதைக்குத் தெரியுமா? கற்பூர வாசனை)
- விவாதத்திற்கு இருதரப்பும் சம்மதத்தின் பின்புதான் விவாதத்திற்கான தலைப்பு பற்றி தீர்மானிக்கப்படும் எனும் அடிப்படை கூட தெரியாதவராக உம்மையே காணுகின்றேன்.
- உமது பதிலில் ஒப்பந்தம் செய்யப் பிரதிநிதிகளை அனுப்புகிறேன் என்று கூறியுள்ளீர். அதே கடிதத்தில் விவாத ஒப்பந்தம் செய்ய எப்போது இந்தியா வருகின்றீர் என்று முன்னுக்குப்பின் முரணாகவே பேசுவதில் புலமை வாய்ந்தவர் என்பதனை நிரூபித்து காட்டுகின்றது.


- நீர் இலங்கை வந்த போது விவாதத்திற்கு வராமல் நான் மறுத்ததாக என்மீது அபாண்டமான பொய் சுமத்தியுள்ளீர். அவ்வாறு நீர் என்னை விவாதத்திற்கு அழைத்து நான்
மறுத்தது எப்போது என்பதனை ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்ட வேண்டும். அப்படியில்லையென்றால் நீர் உலக மகா பொய்யன் என்பதனை ஒத்துக் கொள்ள வேண்டும்.

இப்படிக்கு
முனாப் நுபார்தீன் ஜே.பி
தொடர்புகளுக்கு:0094252247374, 252247353, 724589459, 776617610