செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

முதலில் செவிப்புலன், பின்னரே பார்வைப்புலன்!

முதலில் செவிப்புலன், பின்னரே பார்வைப்புலன்!

கேள்வி எண்: 9. மனிதன் தன் தாயின் கருவறையில் வளர்ந்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் முதலில் (5-வது மாதம்) அவனுடைய காதுகள் முழு வளர்ச்சியடைகின்றது. அதன் பின்னரே (7-வது மாதம்) அவனின் கண்கள் முழு வளர்ச்சியடைகின்றது என்பதை கி.பி. 20-ம் நூற்றாண்டின் அறிவியலளார்கள் நவீன கருவிகளின் உதவியோடு ஆராய்ந்து அறிந்த அறிவியல் உண்மையை, இருண்ட காலம் என அறிவியலாளர்களால் கூறப்படும் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே பறைசாற்றிய அல்லாஹ்வின் அருள்மறை வசனம் எது?
பதில்: ‘….பிறகு அவன் அதைச் சரி செய்து, அதனுள்ளே தன் ரூஹிலிருந்தும் ஊதினான் – இன்னும் உங்களுக்கு அவன் செவிப்புலனையும், பார்வைப் புலன்களையும், இருதயங்களையும் அமைத்தான். (இருப்பினும்) நீங்கள் நன்றி செலுத்துவது மிகச் சொற்பமேயாகும்” (அல்குர்ஆன்: 32:9)
பின்னர் (ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் – அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்” (அல்குர்ஆன்: 76:2)
சிறு விளக்கம்: மனிதன் தன் தாயின் கருவறையில் வளர்ந்துக் கொண்டிருக்கும் காலகட்டங்களில் அவனுடைய அனைத்து உறுப்புகளுமே திடீரென தோன்றி விடுவதில்லை. ஒவ்வொரு உறுப்புகளும் ஒவ்வொரு காலகட்டங்களில் முழு வளர்ச்சியை அடைகின்றது. இனி இந்த வசனத்திற்கான விளக்கத்தைப் பார்ப்போம். மேலே குறிப்பிடப்பட்ட வசனங்களில் இறைவன் செவிப்புலன்களையும், பார்வைப்புலன்களையும் அமைத்ததாகக் கூறுகிறான். நாம் மனிதக் கரு வளர்ச்சியில் அவனுடைய உறுப்புகள் எந்தெந்த காலகட்டங்களில் வளர்கின்றது என்று ஆராய்வோமேயானால் வியக்கத்தகு விளக்கங்கள் நமக்கு கிடைக்கின்றன. மனிதக் கரு வளர்ச்சிகளின் நிலைகளை கருவுறுதல் முதல், குழந்தை பிறக்கும்வரை ஆராய்ந்தறிந்த கருவியலின் நவீன ஆய்வாளர்கள் அளித்த விளக்கம் இதோ உங்கள் பார்வைக்கு -
பெண்ணிற்கு மாதவிடாய் வெளிவந்த 14 -ஆம் நாள் சினைமுட்டை ஒன்று சினைப்பையிலிருந்து வெடித்து ஃபலோப்பியன் டியூப் என்ற குழாய்க்கு வருகிறது. இந்த சினைமுட்டை 1/175 அங்குலம் அளவுக்கு மிகச் சிறியதாகும்.
ஆண், பெண் சேர்க்கையின் போது, ஆணின் உயிரணுவும் இந்த ஃபலோப்பியன் டியூப் என்ற குழாய்க்கு வந்து சேர்கிறது.
ஆணின் உயிரணுவும், பெண்ணின் சினைமுட்டையும் சேர்ந்து கருவுறுதல் இங்குதான் (ஃபலோப்பியன் டியூப்) நடைபெறுகின்றது. கருவுற்றபின் ஆணின் உயிரணுவும், பெண்ணின் சினைமுட்டையின் கரு (Nucleus)வும் சேர்ந்த ஒரு பரிபூரண செல் ஆக அந்த மனிதக்கரு மாறுகிறது. இதற்கு Zygote என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்கள்.
கருவுற்ற 12 மணி நேரம்வரை ஒரே செல் (Single cell) ஆக இருந்த அந்தக் கரு அதற்குப் பிறகு 30 -வது மணி நேரத்திற்குள் இரண்டு செல்களாக மாறுகின்றன. (Cell Division)
கருவுற்ற 45 -வது மணி நேரத்திற்குள் அந்த இரண்டு செல்கள் நான்கு செல்களாகின்றன. இவ்வாறு அந்த செல்கள் இரட்டிப்பாகிக் கொண்டே சென்று, 72 மனி நேரத்திற்குள் அவைகள் 16 செல்களாகின்றன.
கருவுற்ற 4 -வது நாள் இந்தக் கரு ‘Blastocyst’ என்ற நிலைக்கு வருகிறது. இந்த நிலையில் தான் ‘cell Differentiation’ (செல் பிரிதல்) என்ற நிகழ்வு ஏற்பட்டு தனித்தனி தன்மைகளையுடைய செல்கள் தோன்றுகிறது. அதாவது இரத்தத்தை உருவாக்கும் அணுக்கள், தோல்களுக்கான அணுக்கள், தசைகளுக்கான அணுக்கள், நரம்புக்களுக்கான அணுக்கள் என தனித்தனியான குணங்களையுடைய செல்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. (ஒரு செல்லிலிருந்து தோன்றிய அந்தக் கரு தொடர்ந்து செல் பிரிதல் என்ற நிகழ்ச்சியின் மூலம் இரட்டிப்பாகிக் கொண்டே வந்து குழந்தை பிறக்கும்போது அக்குழந்தை 2-பில்லியன் செல்களுக்கும் மேலான செல்களையுடையதாக இருக்கிறது)
‘Blastocyst’ என்ற நிலையில் ஃபலோப்பியன் டியூப் (Fallopian tupe)-ல் உள்ள அந்த மனிதக்கரு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து 8 அல்லது 9 -வது நாட்களில் கர்ப்பப்பையை வந்தடைந்து, அதன் சுவர்களில் (Uterus Lining) ஒரு அட்டையைப் போன்று ஒட்டிக் கொண்டு தொங்குகிறது. இப்போது அந்தக் கரு Embryo என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
கருவுற்ற 15 முதல் 21-ஆம் நாட்களில் கருவைச் சுற்றியுள்ள Chorianic Layer என்ற உறைக்கு உள்பகுதியில் தோன்றிய Yolk Sac என்ற பகுதியிலிருந்து கருவிற்குத் தேவையான Blood Cells உற்பத்தியாகி பின்னர் இரத்த நாளங்கள் (Blood Vessels) தோன்றுகிறது. இதே நேரத்தில் இந்தக் கருவைச் சுற்றியுள்ள இந்த சவ்வுக்கு வெளிப்புறம் Lacunae என்ற பகுதியில் தாயின் இரத்த நாளங்கள் தோன்றுகிறது. இதிலிருந்தே கருவிற்குத் தேவையான ஆக்ஸிஜனும் சத்துப்பொருட்களும் அளிக்கப்படுகின்றன.
கருவுற்ற 10-ஆம் நாள் கருவின் உட்புறம் தோன்றிய இரு குழாய்கள் ஒன்றிணைந்து பின்னர் அவைகள் நகர்ந்து இருதயம் இருக்க வேண்டிய பகுதிக்கு வருகிறதுஇதுவே பின்னர் இருதயமாக வளர்கின்றது.
கருவுற்ற 21-ஆம் நாள், கருவின் உட்புறம் தோன்றிய இரத்த நாளங்கள் Placenta-வாக வளர்ச்சியுற்று (நம்மவர்கள் இதை ‘தொப்புள் கொடி’ என்றும் ‘நஞ்சுக் கொடி’ என்றும் தமிழில் கூறுகிறார்கள்) அவைகள் கருவைச் சுற்றியுள்ள சவ்வுக்கு (Blood Barrier) வெளிப்புறம் உள்ள இரத்த நாளங்களிலிருந்து தனக்குத் தேவையான சத்துக்களையும், ஆக்ஸிஜனையும் (சுவாசக்காற்று) எடுத்துக் கொள்கிறது. கவனத்தில் கொள்ளவும். தாயின் இரத்தம், கருவின் இரத்தத்தோடு எந்த நேரத்திலும் நேரடித் தொடர்புக் கொள்வதில்லை. கருவைச் சுற்றியுள்ள Blood Barrier என்ற சவ்வு இவ்வாறு நேரடித் தொடர்பு ஏற்படாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. தாயின் இரத்தமும், குழந்தையின் இரத்தமும் வெவ்வேறு தன்மையுடையவைகளாகக் கூட இருக்கலாம். (Positive or Negative Blood Group)
தொப்புள் கொடி என்றழைக்கப்படும் இந்த Placenta-வின் வேலை என்னவெனில், இது கருவிற்குத் தேவையான சத்துக்களையும், சுவாசக்காற்றையும் தாயின் இரத்த நாளங்களிலிருந்துப் பெற்றுக்கொண்டு, கருவின் கழிவுப்பொருட்களை (கார்பன்டைஆக்ஸைடு) தன் தாயின் இரத்த நாளங்களுக்கு வெளியேற்றுகிறது.
இந்நிலையில் இந்தக் கருவின் (Size) அளவு 6 மில்லி மீட்டருக்கும் குறைவாக இருக்கிறது.
கருவுற்ற 18-ஆம் நாள் தோன்றிய இரு குழாய்கள் இதயம் இருக்க வேண்டிய பகுதிக்கு வந்தபின் 22-ஆம் நாள் தாயின் இரத்த நாளங்களிலிருந்து சுவாசக்காற்றை தொப்புள் கொடு வழியாகப் பெற்று முதன்முறையாக துடிக்கத் துவங்குகின்றது. ‘இதுவே கருவின் முதல் இதயத் துடிப்பாகும்’ பிறகு இந்தக் குழாய்கள் வளைந்து, நெளிந்து முழு இருதயமாக வளர்வதற்கு சில மாதங்களாகின்றன.
கருவுற்ற 22-ஆம் நாள் கருவின் முகம் வளரத் துவங்குகின்றது.
கருவுற்ற 32-ஆம் நாள் கருவின் மூக்கு மற்றும் கண்கள் வளரத் துவங்குகின்றது.
கருவுற்ற 33-ஆம் நாள் கருவின் Branchial Arches எனப்படும் பகுதிகளுக்கிடையே காதுகள் வளரத் துவங்குகின்றது.
கருவுற்ற 40-ஆம் நாள் கருவின் இமைகள் வளர்ந்திருக்கின்றது.
கருவுற்ற 49-ஆம் நாள் வரை ஆண், பெண் சிசுக்களுக்கு ஒரே மாதிரியாக இருக்கும் பிறப்புறுப்புக்கள் (Reproductive Organs) நான்காவது மாதத்திற்குப் பின்னரே முழு வளர்ச்சியடைந்து முழுமையான ஆணுறுப்பாகவோ அல்லது பெண்ணுறுப்பாகவோ மாறுகிறது. கருவில் வளரும் குழந்தை ஆணாகயிருப்பின் Androgens எனப்படும் ஒருவகை ஹார்மோன்களை உற்பத்தி செய்வதால் 49-ஆம் நாள் வரையிலும் ஆண் மற்றும் பெண் குழந்தைக்கான கருவில் ஒரே மாதிரியாக இருக்கும் பிறப்புறுப்பு ஆணுக்குரியதாக வளர்கின்றது. கருவில் வளரும் குழந்தை பெண்ணாக இருப்பின் இந்த Androgens எனப்படும் ஹார்மோன் சுரப்பதில்லை. அதனால் பிறப்புறுப்பு பெண்ணுக்குரியதாக வளர்கின்றது.
கருவுற்ற 70 நாட்களுக்குள் கருவினுள் மனித உறுப்புகள் அனைத்தும் தோன்ற ஆரம்பித்து இதுவரையிலும் பார்ப்பதற்கு அனைத்து கருவோடு ஒத்திருந்த கருவானது இப்போது மனிதனின் முகம், கை, கால்கள் உட்பட முழு தோற்றமும் பெற்று விடுகிறது. கவனத்தில் கொள்ளவும். இந்நிலையில் அனைத்து மனித உறுப்புகளும் உருவாக துவங்கியிருந்தாலும் அவைகள் முழுவளர்ச்சியைப் பெற்று விடவில்லை. உறுப்புகள் தொடர்ந்து வளர்ந்துக் கொண்டே இருக்கின்றன. இதுவரை Embryo என்றழைக்கப்பட்ட மனிதக் கரு இப்போது Fetus என்றழைக்கப்படுகிறது.
கருவுற்ற 33-ஆம் நாள் Branchial Arches என்ற பகுதிகளுக்கிடையில் உறுவாக ஆரம்பித்த காதுகள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துக் கொண்டே இருக்கின்றன. 5-வது மாதத்திற்குப் பின்னரே அவைகள் முழுவளர்ச்சி பெறுகின்றன. 6-வது மாதம் அக்குழந்தை கேட்கும் சக்தியைப் பெற்று விடுகின்றன.
கருவுற்ற 31-ஆம் நாளிலிருந்தே கண்கள் வளரத் துவங்கியிருந்தாலும் 40-ஆம் நாள் தான் இமைகள் தோன்ற ஆரம்பிக்கின்றது. சில நாட்களில் இந்த இமைகள் கண்களை மூடிவிடுகிறது. மூடப்பட்ட கண்ணின் இமைகள் 70வது மாதம் வரையிலும் மூடியே இருக்கும். அதாவது கண்கள் ஏழாவது மாதம் தான் முழு வளர்ச்சியை அடைந்து பார்க்கும் சக்தியைப் பெறுகின்றது.
5-வது மாதம் குழந்தையின் நரம்பு மண்டலங்கள் முழு வளர்ச்சியைப் பெற்று விடுவதால், குழந்தை கருவறைக்குள் நகர ஆரம்பிக்கின்றது. இப்போது குழந்தையின் அளவு 9 அங்குள நீளமாகும்.
6-வது மாதம் 13 அங்குள நீளமும், ஒரு பவுண்ட் எடையும் இருக்கும் அக்குழந்தையின் கன் இமையின் முடிகள் வளர்ந்து விடுகின்றது. ஆனால், தலைமுடி இதுவரை வளராமலே இருக்கின்றது.
கருவுற்ற 22-ஆம் நாள் இதயத்துடிப்பு ஆரம்பித்திருந்தாலும் 56-ஆம் நாளுக்குப் பிறகே முழு இருதயத்திற்கான வடிவத்தை அது பெறுகிறது. எனினும் கர்ப்பப்பைக்குள் இருக்கும் குழந்தையின் இருதயத்திற்கும், பிறந்த குழந்தையின் இருதயத்திற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. பிறந்த குழந்தையின் இதயம் இயங்கும்போது இது இரத்தத்தை நுரையீரலுக்குள் செலுத்தி அங்கிருந்து சுவாசக் காற்றைப் பெற்றுக் கொண்டு பின்னர் மீண்டும் இருதயத்திற்கு வந்து பின்னர் உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்பப்படும். ஆனால், கர்ப்பப்பையினுள் இருக்கும் குழந்தைக்குத் தேவையான சுவாசக்காற்று தாயின் இரத்தம் வழியாக குழந்தையின் தொப்புள் கொடி மூலம் குழந்தையின் இரத்தத்தை அடைவதால், குழந்தையின் இரத்தம் நுரையீரலுக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகின்றது. அதனால் இதயத்திலிருந்து இரத்தம் நேரடியாக உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்பப்படுகின்றது. எனினும் குறிப்பிட்ட அளவு இரத்தம் நுரையீரலுக்கும் சென்று வருகிறது. ஆனால் குழந்தை பிறந்ததும் அது நுரையீரல் வழியாகச் சுவாசிப்பதால் இரத்தம் நுரையீரலுக்கு அனுப்பபட்டு பின்னர் மீண்டும் இருதயத்திற்குச் சென்று அங்கிருந்து உடலின் மற்ற பாகங்களுக்குச் செல்கின்றது. முன்னர் இருதயத்திலிருந்து நுரையீரலுக்குச் செல்லாமல் நேரடியாக மற்ற பாகங்களுக்குச் சென்ற வழி குழந்தை பிறந்ததும் அடைக்கப்படுகின்றது.
கருக்கலைப்பு என்ற போர்வையில் தம் குழந்தைகளை தம் கருவறைகளிலேயே சமாதி கட்டும் இரக்கமற்ற தாய்மார்கள் இதைப்படித்தாவது திருந்த மாட்டார்களா? கருவில் வளரும் குழந்தைக்கு பார்வைப்புலன் வருவதற்கு முன்னரே செவிப்புலன் வருவதை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே திருமறை கூறியிருப்பதைத் தான் இன்றைய கருவியல் வல்லுணர்கள் மெய்ப்பித்திருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: