திங்கள், 15 ஆகஸ்ட், 2011

குளிப்பு கடமையானவர்களாக

நீங்கள் குளிப்பு கடமையானவர்களாக இருந்தால் குளித்து உடல் முழுவதையும் சுத்தம் செய்துகொள்ளுங்கள். (அல்குர் ஆன் 5:6)




குளிப்புக் கடமையாகக் கூடிய சில காரியங்களை இஸ்லாம் கூறுகின்றது. ஆண், பெண்ணுக்கு அக்காரியங்கள் ஏற்படுமாயின் குளிப்பு கடமையாகிவிடும். அவை பின்வருமாறு:



விந்து வெளிப்படல்:

“இச்சை நீர்வெளிப்பட்டால் வுழூச் செய்ய வேண்டும். விந்து வெளிப்பட்டால் குளிக்க வேண்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் அலி (ரழி), ஆதாரம்: திர்மிதி-114, இப்னுமாஜா-504, அபூதாவூத்-206)



இச்சை நீருக்கும் விந்துக்கும் வித்தியாசம் உண்டு. விந்து (மனீ) கடினமான வெள்ளை நிற திரவப் பொருளாகும். இச்சை நீர் (மதீ, வதீ) வெள்ளை நிறமான கடினமில்லாத சாதாரண திரவப் பொருளாகும். இது சிறுநீர் கழிக்குபோது அல்லது இலேசான உணர்வின்போது வெளியாகும்.



அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உண்மையைக் கூற வெட்கப்படமாட்டான். பெண்ணுக்கு ஸ்கலிதம், ஏற்பட்டால் அவள் குளிப்பது அவசியமா? என்று ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, ஆம்! ஈரத்தை அவள் (மேனியில், ஆடை யில்) கண்டால் குளிக்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப் பவர்: உம்மு ஸுலைம் (ரழி), ஆதாரம்: புகாரி-273, முஸ்லிம்-313, அபூதாவூத்-237)



உடலுறவு கொள்ளல்:

உடலுறவு கொள்ளும்போது விந்து வெளிப்பட்டால்தான் குளிப்பு கடமை என்பது இஸ்லாத்தின் ஆரம்பகால சட்டமாக இருந்தது. பின்பு இச்சட்டம் மாற்றப்பட்டு (ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் இணைந்தால் விந்து வெளிப்படாவிட்டாலும் குளிப்பு அவசியமாக்கப்பட்டு) விட்டது. (ஆதாரம்: முஸ்லிம்-348, இப்னுமாஜா-209, திர்மிதி-108,111, முஅத்தா-76)



ஒருவர் தனது மனைவியின் (இரு கால், இரு கை ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையில் அமர்ந்து, பின்பு (உறவுகொள்ள) முயற்சித்தால் குளிப்பு கடமையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), ஆதாரம்: முஸ்லிம்-348, இப்னுமாஜா-610, நஸாயி-191)



மாதவிடாய் ஏற்படல்:

நபியே! மாதவிடாய்ப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும் அது (அசுத்தமான) ஓர் உபாதை. எனவே மாத விடாய் காலத்தில் (உடலுறவு கொள்ளாமல்) பெண்களை விட்டு விலகி இருங்கள். அவர்கள் சுத்தமாகும் வரையில் அவர்களை (உடலுறவு கொள்ள) நெருங்காதீர்கள். மாதவிடாயிலிருந்து (குளித்து) அவர்கள் சுத்தமாகி விட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள். (அல்குர்ஆன் 2:222)



“மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையை விட்டு விடு. அது நின்றதும் குளித்து விட்டுத் தொழு” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), ஆதாரம்: புகாரி-310, இப்னுமாஜா-621, நஸாயி-202)



மாதவிடாய் காலங்களில் விடுபட்ட தொழுகைகளை திருப்பி (களா) தொழ வேண்டியதில்லை. (புகாரி-310) ஆனால் விடுபட்ட பர்ளான ரமழான் மாத நோன்பை திருப்பி நோற்க வேண்டும்.



தொடர் உதிரப்போக்கு:

மாதவிடாய் குறிப்பிட்ட சில நாட்களுக்கு ஏற்படும். அந்த நாட்களை கடந்த பின், தொடர்ந்தும் இரத்தம் வெளியேறுவதைத் தான் தொடர் உதிரப்போக்கு எனக் கூறப்படும். இத்தொடர் உதிரப்போக்குள்ளவர்கள் மாதவிடாய் ஏற்படும் நாட்களைக் கணக்கிட்டு விட்டு குளித்து சுத்தமாகித் தொழ வேண்டும்.



தொடர் உதிரப்போக்கைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறியபோது ”அது மாத விடாய் அல்ல. அது ஒரு நரம்பு சம்பந்தப்பட்ட நோய். (அதனால்தான் இந்த இரத்தம் தொடர்ந்து வெளியேறுகிறது) என்று கூறினார்கள். (ஆதாரம்: புகாரி-316, இப்னு மாஜா-626, முஸ்லிம்-333)



நான் சுத்தமாகாதவாறு தொடர்ந்து இரத்தப் போக்குடையவளாக இருக்கிறேன். எனவே நான் தொழுகையை விட்டு விடலாமா? என்று ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (இதற்கு முன் வழக்கமாக) உனக்கு மாதவிடாய் ஏற்படும் நாட்களின் அளவுக்கு தொழுகையை விட்டு விடு. பிறகு குளித்து விட்டு துணியை இறுக்கிக் கட்டி விட்டு தொழு என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்முஸலமா (ரழி), ஆதாரம்: இப்னுமாஜா-623, அபூதாவூத்-286, நஸாயீ-208)



பாதிமா பின் அபீ ஹுபைஷ் (ரழி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து ”நான் தொடர் இரத்தப் போக்குடையவளாக இருக்கி றேன். எனவே தொழுகையை விட்டுவிடலாமா? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் அது மாதவிடாய் அல்ல! நரம்பு சம்பந்தப்பட்ட நோயாகும். உன் மாதவிடாய் நாட்களில் தொழுகையை தவிர்த்துக் கொள். பிறகு குளித்து விட்டு ஒவ்வொரு தொழுகைக்கும் வுழூ செய்துக் கொள். பாயில் இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தாலும் சரியே என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), ஆதாரம்: இப்னுமாஜா-624, திர்மிதி-125)



பிரசவத் தீட்டு ஏற்படல்:

பிரசவத்தின் காரணமாக இரத்தப் போக்கு ஏற்படும்போது தொழக் கூடாது. அது நின்ற பின் குளித்து விட்டு தொழ வேண்டும். அந்நாட்களில் விடுபட்ட தொழுகைகளைத் திருப்பி (களா) தொழ வேண்டி யதில்லை.



குளிக்கும் முறை:

கடமையான குளிப்பை நிறைவேற்ற முன் இரு கைகளையும் மூன்று முறை கழுவ வேண்டும். அதன் பின், மர்மஸ்தானத்தை கழுவ வேண்டும். பின்பு வுழூச் செய்ய வேண்டும். அதன் பின் தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றி (உடலை சுத்தப்படுத்தி)க் கொள்ள வேண்டும். குளிக்கும்போது வலது பக்கத்திலிருந்து தண்ணீர் ஊற்ற வேண்டும். ஆண், பெண் இவ்வாறு கடமையான குளிப்பை நிறைவேற்ற வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இப்படித்தான் குளிப்பை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது தம் இரு கைகளையும் கழுவி விட்டு தொழுகைக்குச் செய்வது போன்று வுழூ செய்வார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி),மைமூனா (ரழி), ஆதாரம்: புகாரி-241:265, முஸ்லிம்-317, நஸாயீ-247)



நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் எடுத்து வைத்தேன். தமது முன் கைகளின் மீது தண்ணீர் ஊற்றி, இரண்டு அல்லது மூன்று முறை கழுவினார்கள். பின்பு வலக்கரத்தால் சிறிதளவு தண்ணீரை இடக்கரத்தால் ஊற்றித் தமது மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். பின்பு தமது கையைத் தரையில் தேய்த்தார்கள். பின்பு வாய்க் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்து, முகத்தை கழுவினார்கள். இரு கைகளையும் கழுவினார்கள். பின்னர் தலையை மூன்று முறை கழுவி விட்டு தம் மேனியில் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்கள். பின்பு (குளித்த இடத்திலிருந்து) சற்று விலகி நின்று தம் கால்களைக் கழுவிக் கொண்டார்கள். (அறிவிப்பவர்: மைமூனா (ரழி) (ஆதாரம்: புகாரி-258, முஸ்லிம்-317, நஸாயீ-253, இப்னுமாஜா-573)



நபி (ஸல்) அவர்கள் குளித்த பின் வுழூச் செய்ய மாட்டார்கள் என ஆயிஷா (ரழி) கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி-108, அபூதாவூத்-250, இப்னுமாஜா-579)



அஸ்மா பின்த் ஷகல் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து மாதவிடாய்க் குளிப்பு பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”உங்களில் ஒருவர் (மாதவிடாய் குளிப்பின் போது) தண்ணீரையும் இலந்தை இலைகளையும் எடுத்து நன்கு சுத்தம் செய்து கொள்ளட்டும். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகத் தேய்ந்து தலையின் சருமம் நனையும் வரை கழுவட்டும். பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சுத் துண்டு ஒன்றை எடுத்து சுத்தம் செய்து கொள்ளட்டும் என்று சொன்னார்கள்.



அதற்கு அஸ்மா (ரழி) அவர்கள் ‘அதை வைத்து அவள் எவ்வாறு சுத்தம் செய்வாள்? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஸுப்ஹானல்லாஹ், அதனால் சுத்தம் செய்துகொள்ளட்டும் என்று கூறினார்கள்.



உடனே நான் இரத்தம் படிந்த இடத்தில் தடவிக் கொள் என்று பிறர் காதில் விழாதவாறு அதை இரகசியமாகச் சொன் னேன்.



மேலும் அஸ்மா (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் முறை பற்றிக் கேட்டார். அதற்கு நபியவர்கள் தண்ணீர் எடுத்து நன்கு சுத்தம் செய்துக் கொள். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி தலையில் சருமம் நனையும் அள வுக்கு நன்கு தேய்த்துக் கொள். பின்னர் உன் (மேனியின்) மீது தண்ணீர் ஊற்று என்றார்கள். (அறிவிப்பர்: ஆயிஷா (ரழி) நூல்: முஸ்லிம்-552)



உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொண்டு, மறு முறையும் உட லுறவு கொள்ள விரும்பினால், வுழூ செய்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர் கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸயீத், ஆதாரம்: முஸ்லிம்-308, இப்னுமாஜா-587, நஸாயீ-262)



எங்களில் ஒருவர் குளிப்புக் கடமையான நிலையில் தூங்கலாமா? என்று உமர் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, ஆம் வுழூச் செய்து விட்டு தூங்கலாம் என்றார்கள். (அறிவிப்பவர்: உமர் (ரழி), ஆதாரம்: புகாரி-280, முஸ்லிம்-306, நஸாயீ-259)



கருத்துகள் இல்லை: